Last Updated : 14 Dec, 2020 02:04 PM

 

Published : 14 Dec 2020 02:04 PM
Last Updated : 14 Dec 2020 02:04 PM

ரஹானே கேப்டன்ஷிப்; எந்த அழுத்தமும் இருக்காது: சுனில் கவாஸ்கர் கருத்து

அஜின்கயே ரஹானே : கோப்புப்படம்

புதுடெல்லி

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகளில் ரஹானே கேப்டன் பொறுப்பு ஏற்கும்போது, அவர் மீது எந்தவிதமான அழுத்தமும் திணிக்கப்படாது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் வரும் 17-ம் தேதி தொடங்குகிறது. அடிலெய்டில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டி பகலிரவாக, பிங்க் பந்தில் நடக்கிறது.

இந்த டெஸ்ட் போட்டி முடிந்தவுடன், தனது மனைவி அனுஷ்கா சர்மாவின் பிரசவத்துக்காக விடுப்பில் இந்திய அணியின் கேப்டன் கோலி செல்ல உள்ளார். இதனால் கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் கோலி இல்லாத சூழலில் இந்திய அணி ரஹானேவின் கேப்டன் பொறுப்பில் விளையாடுகிறது.

கோலி இல்லாத சூழல், கேப்டன் பொறுப்பு, வலிமையான ஆஸ்திரேலிய அணி என நெருக்கடியில் ரஹானே கேப்டன்ஷிப்பை ஏற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், எந்த நெருக்கடியும் ரஹானேவுக்கு வராது என்று ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலின் கேம் பிளான் நிகழ்ச்சியில் சுனில் கவாஸ்கர் கூறியதாவது:

''கோலி நாடு திரும்பியவுடன் இந்திய அணியை வழிநடத்தும் ரஹானேவுக்கு உண்மையில் எந்த நெருக்கடியும் இருக்காது. ஏனென்றால், இரு முறை இந்திய அணியை ரஹானே வழிநடத்திச் சென்று வெற்றி பெற்றுக் கொடுத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தர்மசலாவில் இந்திய அணியை வழிநடத்திய ரஹானே அதில் வெற்றி பெற்றுக் கொடுத்தார், அதேபோல, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராகவும் அணியை வழிநடத்தி ரஹானே வெற்றி பெற்றுக் கொடுத்தார்.

கேப்டன்ஷிப்பைப் பொறுத்தவரை, ரஹானேவுக்கு எந்தவிதமான நெருக்கடியும் இருக்காது. ஏனென்றால், எந்த நேரத்தில் எப்படிச் செயல்பட வேண்டும் என்று அவருக்குத் தெரியும். 3 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக ரஹானே செயல்பட்டுள்ளார்.

எனவே, அணிக்கு கேப்டனாகச் செயல்படுவது அல்லது கேப்டனாக அணியை வழிநடத்துவது ரஹானேவின் சிந்தனையின் ஒரு பகுதியாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ரஹானே அவரின் கேப்டன் பணியை நேர்மையாகச் செய்வார்.

பேட்ஸ்மேனாக அவர் பொறுப்பாக விளையாடுவார். அவர் களமிறங்கி, புஜாரா விளையாடுவதைப் போல் எதிரணிக்கு நிச்சயம் அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் விளையாடுவார், ஷாட்களையும் அடிப்பார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ரஹானேவின் பேட்டிங் சிறப்பாகவே இருக்கும். இதில் எந்தக் கேள்வியும் இருக்காது.

கிரிக்கெட் விளையாடினாலும் சரி அல்லது விளையாடாவிட்டாலும் சரி. ரஹானே மனநிலையில் மாற்றம் வரும் என நினைக்கவில்லை. அவர் மனதளவில் வலிமையானவர்.

பேட்டிங்கை விரும்பிச் செய்பவர். அதனால்தான் கிரீஸில் நீண்ட நேரம் நின்று ரஹானே விளையாடுவார். பந்துவீச்சாளர்களை நம்பிக்கையிழக்கச் செய்வதை விரும்புவார். கடந்த இரு ஆண்டுகளில் ரஹானேவின் ஷாட்களில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஷாட்களில் முதிர்ச்சி வந்துள்ளது''.

இவ்வாறு கவாஸ்கர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x