Last Updated : 13 Dec, 2020 01:54 PM

 

Published : 13 Dec 2020 01:54 PM
Last Updated : 13 Dec 2020 01:54 PM

பவுன்ஸரில், லெக்சைடில் ஃபீல்டர்களை நிறுத்தி இந்திய பேட்ஸ்மேன்களை எளிதாக வீழ்த்திவிடுவோம்: ஹேசல்வுட் சவால்

அடிலெய்டில் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்களை வீழ்த்துவதற்கு பவுன்ஸர் முறையை நிச்சயமாகப் பயன்படுத்துவோம். கோலிக்கும் புதிய திட்டம் வகுத்துள்ளோம் என ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசல்வுட் சவால் விடுத்துள்ளார்.

அடிலெய்டில் வரும் 17-ம் தேதி இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் அடிலெய்ட் மைதானத்தில் பகலிரவு போட்டியாக, பிங்க் பந்தில் நடக்கிறது.

ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக பிங்க் பந்தில் இந்திய அணி விளையாடுவது சவாலானதாக இருக்கும். இந்திய அணி உள்நாட்டில் பிங்க் பந்தில் விளையாடினாலும், வெளிநாடுகளில் சென்று விளையாடுவது இதுதான் முதல் முறை.

இதில் முதல் டெஸ்ட் போட்டியோடு கேப்டன் கோலி, நாடு திரும்பிவிடுவார். அதன்பின் 3 போட்டிகளுக்கும் அவர் இல்லாமல் அணி விளையாட வேண்டிய சவாலான நிலையில் இருக்கிறது.

இதற்கிடையே ஆஸ்திரேலிய அணியிலும் முதல் டெஸ்ட்டில் வார்னர், புகோவ்ஸ்கி நீக்கப்பட்டுள்ளனர். அதிலும் வார்னர் இல்லாதது டெஸ்ட் போட்டியில் ஆஸி.க்கு பேட்டிங் வரிசையில் சற்று பின்னடைவுதான். பந்துவீச்சில் மிட்ஷெல் ஸ்டார்க் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளது ஆஸி.க்கு பெரும் பலமாகும்.

இதுவரை 7 பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டார்க் 42 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக அளவில் முன்னணியில் இருந்து வருகிறார். இந்திய அணிக்கு ஸ்டார்க், ஹேசல்வுட், கம்மின்ஸ், பட்டின்ஸன் ஆகியோர் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்கள். ஆஸி.யின் வேகப்பந்துவீச்சுக்கும், பவுன்ஸருக்கும் சாதகமான மைதானத்தில் பவுன்ஸர்களால் இந்திய வீரர்களைத் திணறடிப்பது உறுதியாகும்.

கடந்த 2018-ம் ஆண்டு தொடரில் ஆஸி. அணியில் முக்கிய வீரர்கள் ஸ்மித், வார்னர் அணியில் இல்லை. ஆனால், இந்த முறை இருவரும் அணியில் இருப்பது இந்திய அணிக்கு மேலும் சிக்கலை உருவாக்குகிறது. இந்தச் சூழலில் வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட் காணொலி மூலம் பேட்டி அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

''பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்ய அதிகமான நேரங்களில் நான் யோசித்ததும், பயன்படுத்தியதும் ஷார்ட்பால்தான். பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்ய பவுன்ஸர் வீசுவது என்பது ஒருவிதமான யுத்தி. நிச்சயமாக பேட்ஸ்மேன்களை வெறுப்பேற்றும் பவுன்ஸர்களை வீசும்போது பலன் கொடுக்கும்.

அதிலும் மற்ற நாடுகளில் பந்துவீசுவதை விட ஆஸ்திரேலிய மண்ணில் பவுன்ஸர்களை வீசும்போது பேட்ஸ்மேன்கள் விளையாடுவது கடினம்தான். பேட்ஸ்மேன்களுக்கு நாங்கள் வீசும் பவுன்ஸர் சவாலாகவே இருக்கும்.

ஆடுகளம் தட்டையாகவே இருக்கும் என்பதால், இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பவுன்ஸர்கள் வீசுவதும், லெக் திசையில் ஃபீல்டர்களை நிறுத்தி எளிதாக கேட்ச் பிடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்வதும் பலன் அளிக்கும். ஆதலால், இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நாங்கள் வீசும் பவுன்ஸர்கள் நிச்சயம் சவாலாக இருக்கும்.

கேப்டன் கோலியை நான் இதுவரை ஒருநாள் போட்டிகளில் 3 முறையும், டி20 போட்டியில் ஒருமுறையும் பவுன்ஸர் வீசி ஆட்டமிழக்கச் செய்திருக்கிறேன். ஆதலால், எனக்கு பவுன்ஸர் வீசுவதில் அதிர்ஷ்டம் இருக்கிறது. கடந்த முறை வந்திருந்தபோது, கோலி அதிகமான ரன்களை டெஸ்ட் தொடரில் அடித்தார் என்பதால், அவருக்குப் பந்துவீசும்போது சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

கடந்த தொடரில் எங்கள் பந்துவீச்சாளர்களுக்கு இடையே போதுமான ஓய்வு இல்லாததால் புஜாரா அதிகமான பந்துகளைச் சந்தித்து, களத்தில் நீண்ட நேரம் நின்றார். அதிகமான ரன்களைச் சேர்த்து எங்களுக்கு புஜாரா சவாலாக இருந்தார். ஆனால், இந்த முறை எங்களுக்கு போதுமான ஓய்வு கிடைத்திருக்கிறது.

ஓய்விலிருந்து ஸ்டார்க் அணிக்குத் திரும்புவது எங்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தைத் தரும். பிங்க் பந்தில் பந்து வீசுவதில் மிகப்பெரிய சாதனையை ஸ்டார்க் வைத்துள்ளார். இந்தக் கரோனா காலத்தில் அனைவரும் கற்றுக்கொண்ட விஷயம் ஒன்று இருக்கிறது என்றால், எதுவுமே திட்டமிட்டபடி நடக்காது என்பதுதான்''

இவ்வாறு ஹேசல்வுட் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x