Last Updated : 12 Dec, 2020 12:09 PM

 

Published : 12 Dec 2020 12:09 PM
Last Updated : 12 Dec 2020 12:09 PM

பிறந்த நாளில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த யுவராஜ் சிங்: தந்தையின் கருத்துக்கு முரணாக அறிக்கை

யுவராஜ் சிங் : கோப்புப்படம்

புதுடெல்லி

தனது பிறந்த நாளை வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடிவரும் விவசாயிகளுக்கு அர்ப்பணிப்பதாகத் தெரிவித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், விவசாயிகளின் பிரச்சினைக்கு அமைதியான முறையில் விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கிற்கு இன்று 39-வது பிறந்த நாளாகும். இந்தப் பிறந்த நாளை விவசாயிகளுக்காக அர்ப்பணிப்பதாக யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் திங்கள்கிழமை அளித்த பேட்டியில், “விவசாயிகள் சரியானதைக் கேட்கிறார்கள். அவர்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்று சரியான தீர்வை அளிக்க வேண்டும். விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து விளையாட்டு வீரர்கள் தாங்கள் பெற்ற விருதுகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

அந்தக் கருத்திலிருந்தும் யுவராஜ் சிங் விலகி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

யுவராஜ் சிங் ட்விட்டரில் வெளியிட்ட அறிக்கை:

''இந்த தேசத்தின் ரத்தநாளங்கள் விவசாயிகள்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. விவசாயிகளின் பிரச்சினைக்கு விரைவில் அமைதியான முறையில் தீர்வு காணப்படும் என்று நம்புகிறேன்.

விருப்பங்களையும், ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்ள கிடைத்த வாய்ப்பு பிறந்த நாள். இந்தப் பிறந்த நாளைக் கொண்டாடுவதைவிட, விவசாயிகளுக்கும், நம்முடைய அரசுக்கும் இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தையில் விரைவான தீர்வு கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன், பிரார்த்திக்கிறேன்.

பெருமைமிகு இந்தியனாக இருக்கும் நான், என் தந்தை யோகராஜ் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவிக்கிறேன், வேதனைப்படுகிறேன். இந்த விஷயத்தில் நான் தெளிவுபடுத்துவது என்னவென்றால், அது அவரின் தனிப்பட்ட கருத்து. அவருடைய எண்ணங்களைப் போல், கொள்கைகளைப் போல் என்னுடைய எண்ணங்கள் இருக்காது.

ஒவ்வொருவரும் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் முன்னெச்சரிக்கை வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். கரோனா தொற்று இன்னும் முடிந்துவிடவில்லை. இந்த வைரஸை நாம் தோற்கடிக்கும் வரை நாம் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.

ஜெய் ஜவான், ஜெய் கிசான், ஜெய்ஹிந்த்''.

இவ்வாறு யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

யுவராஜ் சிங் இதுவரை 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1900 ரன்களும் (3 சதங்கள், 11 அரை சதங்கள்), 304 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 8,701 ரன்களும் சேர்த்துள்ளார். இதில் 14 சதங்கள், 52 அரை சதங்கள் அடங்கும். 58 டி20 போட்டிகளில் விளையாடிய யுவராஜ் 1,177 ரன்கள் விளாசினார். இதில் 8 அரை சதங்கள் அடங்கும். ஒரு நாள் போட்டிகளில் 304 விக்கெட்டுகளையும் யுவராஜ் சிங் வீழ்த்தியுள்ளார்.

2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியிலும், 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியிலும் யுவராஜ் சிங் இடம் பெற்று முக்கியத் துருப்புச் சீட்டாக இருந்தார். 2011-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் காலிறுதியில் ஆஸிக்கு எதிராக யுவராஜ் சிங் ஆடிய ஆட்டத்தை இன்றும் யாராலும் மறக்க முடியாது. அதேபோல 2007-ம் ஆண்டு டி20 போட்டியில் இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் பந்துவீச்சில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசியதும் நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x