Last Updated : 05 Dec, 2020 01:39 PM

 

Published : 05 Dec 2020 01:39 PM
Last Updated : 05 Dec 2020 01:39 PM

ஜடேஜாவுக்கு உண்மையாகவே காயம் ஏற்பட்டதா? இந்திய அணி கன்கஸன் எடுத்ததில் விதிமுறை மீறல்: வெற்றி மீது சந்தேகத்தை கிளப்பும் மஞ்சரேக்கர்

ரவிந்திர ஜடேஜா, சஞ்சய் மஞ்சரேக்கர் : கோப்புப்படம்

புதுடெல்லி

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவிந்திர ஜடேஜாவுக்கு உண்மையிலேயே காயம் ஏற்பட்டதா. காயம் ஏற்பட்டதென்றால், களத்துக்கு ஏன் உடற்தகுதி நிபுணர் நிதின்படேல் வரவில்லை. இந்திய அணி கன்கஸன் விதிமுறைகளை மீறிவிட்டதா என இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் சந்தேகத்தை கிளப்பியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டி நேற்று கான்பெரராவில் நடந்தது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.

ஆனால், இந்திய அணி பேட்டிங் செய்தபோது, ஸ்டார்க் வீசிய 20-வது ஓவரின் 2-வது பந்தில் ஜடேஜாவின் ஹெல்மெட்டில் பந்து தாக்கியது. இருப்பினும் அதை சமாளித்து அடுத்த 9 ரன்களைச் சேர்த்து 44 ரன்களுடன் ஜடேஜா வெளியேறினார்.

ஆனால், தலையில் பட்ட காயத்தால் தொடர்ந்து விளையாடமுடியாத சூழல் ஏற்பட்டதாகக் கூறி கன்கஸனில் ஜடேஜாவுக்கு பதிலாக யஜுவேந்திர சாஹல் களமிறங்கினார். சாஹல் சிறப்பாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு முக்கியக்காரணமாகவும் அமைந்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

ஒரு பேட்ஸ்மேன் காயம் அடைந்து விளையாட முடியாத சூழல் ஏற்படும்போது அவருக்கு பதிலாக மாற்றுவீரரை களமிறக்கும் கன்கஸன் முறையை ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணியும் பயன்படுத்தியுள்ளது.

ஆனால், நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி கன்கஸனை பயன்படுத்தியதை ஆஸ்திரேலிய அணி வீரர்கள் மட்டுமல்லாமல் இந்திய அணியின் முன்னாள் வீரர் மஞ்சரேக்கரும் சந்தேகப்பட்டுள்ளார். பேட்டிங்கிற்கு ரவிந்திர ஜடேஜாவையும், பந்துவீச்சுக்கு சாஹலையும் இந்திய அணி பயன்படுத்திக் கொண்டதா என்ற பாணியில் மஞ்சரேக்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சஞ்சய் மஞ்சரேக்கர் சோனி சிக்ஸ் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி கன்கஸன் விதிமுறையை மீறிவிட்டதாகவே நான் கருதுகிறேன். ரவிந்திர ஜடேஜா ஹெல்மெட்டில் ஸ்டார்க் வீசிய பந்துபட்டு காயம் ஏற்பட்டதென்றால், உடனடியாக இந்திய அணியின் உடற்தகுதி நிபுணர் நிதின் படேல் களத்துக்கு வந்திருக்க வேண்டும். ஜடேஜாவின் உடல்நிலை எவ்வாறு இருக்கிறது என்று பேட்ஸ்மேனிடம் உடற்தகுதி நிபுணர் கேட்டிருக்க வேண்டும்.

ஆனால், ஜடேஜா தொடர்ந்து 4 பந்துகள் விளையாடி 9 ரன்கள் சேர்த்தபின், ஓய்வறைக்குச் சென்று தன்னால் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டதாகக் கூறி கன்கஸன் எடுத்துள்ளார். இதில் பல்ேவறு கேள்விகள் எழுகின்றன.

ஜடேஜா தொடர்ந்து பேட் செய்து அதிகமான ரன்கள் ஏதும் எடுக்கவில்லை தொடர்ந்து விளையாடி 9 ரன்கள்தான் எடுத்தார் இது பெரிய விஷயம் இல்லை.

ஆனால், ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்டவுடன் உடல்தகுதி நிபுணர் களத்துக்கு வந்து 2 அல்லது 3 நிமிடங்கள் ஜடேஜாவை பரிசோதித்து சென்றிருக்க வேண்டும். ஆனால், ஏதும் நடக்காத நிலையில், ஜடேஜாவுக்கு உண்மையிலேயே தலையில் காயம் ஏற்பட்டதா என்ற சந்தேகம் எழுகிறது.

ஓய்வறைக்கு சென்றுபின் ஜடேஜாவின் காயம் தீவிரமாக இருப்பதாகக்கூறி, கன்கஸன் வாய்ப்பை இந்திய அணி கோரும்போது போட்டி நடுவர் டேவிட் பூனால் எப்படி மறுக்க முடியும்.

அவருக்கு வேறுவாய்ப்பு ஏதும் இருந்திருக்காது. இந்திய அணிக்கு கன்கஸன் வாய்ப்பை தரமுடியாது என்று டேவிட் பூனால் கூறுவதற்கும், மாற்று வீரர் விளையாட அனுமதி்க்க முடியாது எனச் சொல்லவும் துணிச்சல் இல்லை. ஏனென்றால்,அந்த நேரத்தில் இதுபோன்ற கேள்விகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை.

நல்ல நோக்கத்தோடுதான் கன்கஸன் விதமுறை ஐசிசி அமைப்பால் கொண்டுவரப்பட்டது. ஆனால் இதில் விதிமுறைகளை மீறுவதில் மாஸ்டர்களாக இருக்கும் நாம் இருதில் எந்தபக்கம் ஓட்டை இருக்கிறது என்பதைக் கவனித்து அதை நமக்குச் சாதகமாக மாற்றிக்கொள்கிறோம்.

இந்திய அணி அதுபோன்று கன்கஸனில் இருக்கும் ஓட்டைகளை பயன்படுத்தி, சாஹலை களமிறக்கியதா என எனக்குத் தெரியாது. ஆனால், இதுபோன்ற நேரங்களில் ஐசிசி சிறிது கவனத்துடன் ஆய்வு செய்ய வேண்டும்.

இந்திய அணியின் உடல்தகுதி நிபுணர் ஏன்களத்துக்கு வந்து ஜடேஜாவை கவனிக்கவில்லை என்று ஐசிசி ஆய்வு செய்ய வேண்டும். எந்த உடற்தகுதி நிபுணரும் களத்துக்கு வரவில்லை, வீரரை ஆய்வு செய்யவில்லை. நேரம் எடுத்துக்கொள்ளவில்லை, அந்த வீரரும் தொடர்ந்து விளையாடினார். ஆனால், கன்கஸன் மட்டும் வழங்கப்பட்டது குறித்து ஐசிசி ஆய்வு செய்ய வேண்டும்.

ஒரு வீரருக்கு மாற்று வீரர் என்ற திட்டமே இந்த சம்பவத்தால் கேள்விக்குள்ளாகி இருக்கிறது. விதிமுறைகளை தங்களுக்கு சாதகமாக வளைக்க எந்த அணிையயும் ஐசிசி அனுமதிக்க கூடாது.

இந்திய அணி நியாயமற்ற முறையில் கன்கஸனை பயன்படுத்தியது, அதன் மூலம் வென்றது என்று சொல்லவில்லை. ஜடேஜாவுக்கு பதிலாக சாஹலை பயன்படுத்தியுள்ளார்கள். இதில் ஜடேஜாவுக்கு தொடையில் தசைப்படிப்பு வேறு ஏற்பட்டு பந்துவீச முடியாத நிலை ஏற்பட்டது, ஆனால், அவருக்கு பதிலாக சாஹல் எனும் முழுநேரப் பந்துவீச்சாளர் கொண்டுவரப்பட்டுள்ளார்.

இ்வ்வாறு மஞ்சரேக்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x