Published : 05 Dec 2020 11:51 AM
Last Updated : 05 Dec 2020 11:51 AM

36 பந்துகளில் சதம் அடித்த நியூஸி. வீரர் ஆன்டர்ஸன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

நியூஸி வீரர் கோரே ஆன்டர்ஸன் : கோப்புப்படம்

வெலிங்டன்


சர்வதேச ஒருநாள் போட்டி வரலாற்றில் 36 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்த நியூஸிலாந்து வீரர் கோரே ஆன்டர்ஸன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளாக நியூஸிலாந்து அணியில் இடம் பெறாமல் இருந்த நிலையில், அமெரிக்காவில் நடைபெறும் மேஜர் லீக் கிரிக்கெட் டி20 போட்டித் தொடரில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஆன்டர்ஸன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2013-ம் ஆண்டில் மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக 36 பந்துகளில் சதம் அடித்து குறைந்த பந்துகளில் சதம் அடித்த வீரர் எனும் சாதனையை ஆன்டரஸன் படைத்தார். இதில் 47 பந்துகளில் 131 ரன்கள் சேர்த்து ஆன்டர்ஸன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 14 சிக்ஸர்கள், 6பவுண்டரிகள் அடங்கும்.

இதற்கு முன் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி 36 பந்துகளில் சதம் அடித்ததே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை ஆன்டர்ஸன் முறியடித்தார். ஆனால்,அடுத்த சில ஆண்டுகளில் 2015- ஜனவரி 18-ல் தென் ஆப்பிரிக்காவின் 360 டிகிரி பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக 31 பந்துகளில் சதம் அடித்து ஆன்டர்ஸன் சாதனையை முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் விளையாடமல் இருந்த ஆன்டர்ஸன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக இணையதளம் ஒன்றுக்கு ஆன்டர்ஸன் அளித்த பேட்டியில் கூறியதாவது:

நியூஸிலாந்து அணிக்காக நான் விளையாடியது உண்மையில் எனக்கு மிகப்பெரிய கவுரவம், மரியாதை. அதிகமான போட்டிகளில் விளையாட விருப்பமாக இருக்கிறேன். ஆனால், பல்வேறு இடங்களில் இருந்து வாய்ப்புகள் வருகின்றன. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவை நான் எளிதாக எடுக்கவில்லை. எனக்குள் பல்வேறு கேள்விகளை எழுப்பித்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன்.

எனக்கு என்ன விருப்பமோ அதை செய்கிறேன். அடுத்த 2 அல்லது 5 அல்லது 10 ஆண்டுகளில் நான் விரும்பியதை அடைய முயல்கிறேன். வயதாகிவிட்டால் வாழ்க்கையைப் பற்றி பரந்து சிந்திக்க வேண்டியது இருக்கும். எனக்காக என் மனைவி அதிகமான விஷயங்களை இழந்துள்ளார்.

அமெரி்க்காவில் பிறந்த அவர் நியூஸிலாந்துக்குவந்து கலாச்சார ரீதியாக பல்வேறு தியாகங்களைச்செய்துள்ளார். அமெரி்க்காவில் வாழ்வதே சிறந்தது என நினைத்தேன். அதற்கான வாய்ப்பு கிடைக்கும் போது, கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும் அதை பயன்படுத்த வேண்டும்.

அமெரிக்காவில் சிறப்பான கிரிக்கெட் தொடரை எதிர்நோக்குகிறேன். தலாஸ், ஹூஸ்டனில் நடந்த மைனர் லீக் கிரிக்கெட் போட்டியை பார்த்து அதன் தரத்தைக் கண்டுவியந்தேன். மேஜர் லீக் டி20 தொடரில் 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தமாகியுள்ளேன் " இவ்வாறு ஆன்டர்ஸன் தெரிவித்துள்ளார்.

29 வயதான கோரி ஆன்டர்ஸன் 13 டெஸ்ட், 49 ஒருநாள் போட்டிகள், 31 டி20 போட்டிகளில் இதுவரை நியூஸிலாந்து அணிக்காக விளையாடியுள்ளார். இதில் 93 சர்வதேச போட்டிகளில் மொத்தம் 2,277 ரன்களை ஆன்டர்ஸன் சேர்த்துள்ளார். இதில் 2 சதம், 10 அரைசதங்கள் அடங்கும். 90 விக்கெட்டுகளை ஆன்டர்ஸன் வீழ்த்தியுள்ளார்.


ஐபிஎல் தொடரிலும் இடம் பெற்ற ஆன்டர்ஸன் மும்பை இந்தியன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், ஆர்சிபி அணியிலும் இடம் பெற்றார். கடந்த 2014-ம் ஆண்டு சீசனில் மும்பையில் அணிக்காக விளையாடிய ஆன்டர்ஸன் 44 பந்துகளில் 94 ரன்கள் சேர்த்ததை யாராலும் மறக்க முடியாது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x