Last Updated : 05 Dec, 2020 07:59 AM

 

Published : 05 Dec 2020 07:59 AM
Last Updated : 05 Dec 2020 07:59 AM

தோனியின் சாதனை முறியடிப்பு;டி20 தொடரிலிருந்து ஜடேஜா நீக்கம்: வேகப்பந்துவீச்சாளர் சேர்ப்பு


ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று நடந்த முதலாவது டி20 போட்டியில் ஹெல்மெட்டில் பந்துபட்டதையடுத்து, கன்கஸனில் சென்ற இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா அடுத்த இரு டி20 போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

ஜடேஜாவுக்குப் பதிலாக வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டி20போட்டி கான்பெரேராவில் நேற்று நடந்தது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திேரலிய அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. இதில் இந்திய அணி பேட் செய்தபோது 20-வது ஓவரில் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டார்க் வீசிய பந்தை ஜடேஜா எதிர்கொண்டபோது அவரின் ஹெல்மெட்டில் பந்து தாக்கியது. இருப்பினும் சமாளித்து அந்த ஓவரில் ஜடேஜா விளையாடினார்.

ஆனால், தொடர்ந்து விளையாடமுடியாத சூழல் ஏற்பட்டதையடுத்து, கன்கஸனில் வெளியேறினார், அவருக்கு பதிலாக மாற்று வீரராக யஜுவேந்திர சாஹல் களமிறங்கினார். சிறப்பாகப் பந்துவீசிய சாஹல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

இந்நிலையில், ஜடேஜா உடல்நிலை தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பதால், அவர் அடுத்த இரு டி20 போட்டிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இது குறித்து பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பில், “ ஆஸிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் கன்கஸனில் வெளியேறிய ஆல்ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தேவைப்பட்டால் சனிக்கிழமை ஸ்கேன் செய்து பார்க்கப்படும். ஆதலால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்த இரு டி20 போட்டிகளில் இருந்தும் ஜடேஜா நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக வலதுகை வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டுள்ளார்.

போட்டி முடிந்தபின் ஜடேஜா ஓய்வறைக்கு வந்தபின் தன்னால் விளையாட முடியவில்லை எனத் தெரிவித்ததையடுத்து, மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்தனர். அதன்பின்தான் கன்கஸன் மாற்றுவீரர் யஜுவேந்திர சாஹல்களமிறக்கப்பட்டார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோனியின் சாதனை முறியடிப்பு

இதற்கிடையே நேற்றைய ஆட்டத்தில் 7-வது வீரராக களமிறங்கிய ஜடேஜா 23 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். இதற்கு முன் இந்திய அணியில் டி20 போட்டிகளில் 7-வது வீரராக களமிறங்கிய தோனி 18 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்சமாக இருந்தது. கடந்த 2012-ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக தோனி இந்த 38 ரன்களை அடித்திருந்தார்.

கடந்த 8 ஆண்டுகளாக தோனியின் இந்த சாதனையை எந்த இந்திய வீரரும் டி20 போட்டிகளில் முறியடிக்கவில்லை. இந்த ஆட்டத்தில் ஜடேஜா 7-வது வீரராக களமிறங்கிய 44 ரன்கள் சேர்த்து தோனியின் சாதனையை முறியடித்துவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x