Published : 30 Nov 2020 03:13 PM
Last Updated : 30 Nov 2020 03:13 PM

கோலி இல்லாமல் இந்திய அணி வென்றால் ஓராண்டுக்குக் கொண்டாடலாம்: மைக்கேல் கிளார்க் சவால்

விராட் கோலி இல்லாமல் இருக்கும் இந்திய அணி, டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திவிட்டால், ஓராண்டுக்கு இந்தியாவின் வெற்றியைக் கொண்டாடலாம் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் சவால் விடுத்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு இந்தியா புறப்படும் முன், கேப்டன் கோலி ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடுவார். அதன்பின் தாயகம் திரும்பிவிடுவார். அவரின் மனைவிக்கு முதல் பிரசவம் என்பதால், விடுப்பு வழங்கப்பட்டுள்ளது என்ற செய்திதான் மிகவும் பெரிதாகப் பேசப்பட்டது.

இந்தச் செய்திக்குப் பின், இந்தியா, ஆஸி. டெஸ்ட் தொடர் குறித்துப் பல விவாதங்கள் நடந்து வருகின்றன. முன்னாள் ஜாம்பவான்கள் பலரும், கோலி இல்லாத இந்திய அணியால், டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த முடியுமா, இந்தியாவின் தோல்வி எழுதப்பட்டுவிட்டது, இந்திய அணிக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது என்றெல்லாம் கருத்துகளையும், ஊகங்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.

இதே கருத்தை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்கும் முன்வைத்துள்ளார்.

இந்தியா டுடேவுக்கு மைக்கேல் கிளார்க் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

“கேப்டன் விராட் கோலியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்பதை எனது கருத்து. கேப்டன் பொறுப்பிலும் சரி, பேட்டிங்கிலும் சரி. கோலி இல்லாவிட்டால் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்படும்.

விராட் கோலி இல்லாத குறையை எந்த பேட்ஸ்மேன் நிரப்புவார் என்பது வரும் டெஸ்ட் தொடரில் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஒருவேளை விராட் கோலி இல்லாமல், டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியை இந்தியா வீழ்த்திவிட்டால், ஓராண்டுக்கு இந்திய அணியின் வெற்றியைக் கொண்டாடலாம். உண்மையில் அதுபோன்ற வெற்றி, நம்பமுடியாத வெற்றியாகத்தான் இருக்கும்.

கே.எல்.ராகுல் சிறந்த வீரர், அறிவார்ந்தவர். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆஸ்திரேலியாவில் இதற்கு முன் ராகுல் விளையாடிய அனுபவத்தைப் பெற்றுள்ளார். அவரால் டெஸ்ட் தொடரில் சிறப்பாகச் செயல்பட முடியும்.

ஆனால், விராட் கோலியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எனக்கு ரஹானேவை மிகவும் பிடிக்கும். அவர் சிறந்த வீரர். அவரது கேப்டன்ஷிப்பும் நன்றாக இருக்கும். கேப்டன்ஷிப்பைப் பொறுத்தவரை ரஹானே சிறப்பாகச் செயல்படக்கூடியவர். இந்திய அணிக்கு அது சாதகமான விஷயம்தான். ரஹானே எவ்வாறு செயல்படுவார் என்பதைக் காண வாய்ப்பு கிடைத்துள்ளது. சிறப்பாக முயன்றால், வரலாறு படைக்க முடியும்.

இதே நம்பிக்கையுடன் டெஸ்ட் தொடரை இந்திய வீரர்கள் அணுக வேண்டும். ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தும் அளவுக்குப் போதுமான அளவு திறமை இருக்கிறது என்று நம்ப வேண்டும்”.

இவ்வாறு மைக்கேல் கிளார்க் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x