Published : 29 Nov 2020 03:12 AM
Last Updated : 29 Nov 2020 03:12 AM
கரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ரசிகர்களே இல்லாமல் மைதானங்களில் நடத்தப்பட்டது. ஆனால் அதற்கெல்லாம் முன்னோடியாக கடந்த ஆண்டிலேயே ரசிகர்கள் இல்லாமல் கால்பந்து போட்டியை நடத்தியுள்ளது வட கொரிய அரசு. தென் கொரியா மற்றும் வடகொரியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை தகுதிச்சுற்று போட்டிதான் இப்படி ரசிகர்கள் இல்லாமல் காலி மைதானத்தில் நடத்தப்பட்டது. இதற்கு காரணம் இந்நாடுகளிடையே இருந்த பகை.
தென் கொரியாவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே ஏழாம் பொருத்தம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இந்தச் சூழலில் கடந்த ஆண்டு வடகொரியாவின் பியாங்யாங் நகரில் உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றில் தென் கொரிய – வட கொரிய அணிகள் மோதியுள்ளன.
இந்த போட்டியைக் காண ரசிகர்கள் யாரும் மைதானத்துக்கு வரக் கூடாது என்று தடை விதித்தது வட கொரிய அரசு. இதனால் ரசிகர்கள் இல்லாமல் காலி மைதானத்தில் போட்டி நடத்துள்ளது.
மைதானத்துக்கு செல்லாவிட்டாலும் தொலைக்காட்சியிலாவது போட்டியைக் காணலாமே என்று ரசிகர்கள் நினைத்திருக்க, அதற்கும் வட கொரிய அரசு தடை விதித்தது. அத்துடன் போட்டியைப் பற்றிய செய்திகளை சேகரிக்க வெளிநாட்டு ஊடகங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. இப்படி ஏக கெடுபிடியுடன் நடந்த போட்டி, 0-0 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இப்போட்டியைப் பற்றி கருத்து தெரிவித்த தென் கொரிய கால்பந்து கூட்டமைப்பின் துணைத் தலைவரான சோய் யங்-இல், “கிட்டத்தட்ட போர்க்களத்தில் நின்றதைப் போல் இருந்தது. போட்டியின்போதோ, அல்லது அதற்கு முன்போ, வட கொரிய வீரர்கள் யாரும் எங்கள் வீரர்களுடன் பேசக்கூட இல்லை. எங்கள் வீரர்களின் கண்களைக்கூட அவர்கள் ஏறெடுத்துப் பார்க்கவில்லை” என்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT