Published : 28 Nov 2020 03:16 AM
Last Updated : 28 Nov 2020 03:16 AM
அமெரிக்காவில் 1890-களில் கார்கள் அறிமுகமாகிக்கொண்டு இருந்த நேரம். தங்கள் செய்தித்தாள் சார்பில் ஒரு கார் பந்தயத்தை நடத்தினால் என்ன என்ற எண்ணம் ‘சிகாகோ டைம்ஸ் - ஹெரால்ட்’ என்ற செய்தித்தாள் நிறுவனத்துக்கு தோன்றியுள்ளது. அத்துடன் அமெரிக்காவில் கார்களை பிரபலப்படுத்த இந்த பந்தயம் உதவும் என்று கார் விற்பனையாளர்களும் நினைத்ததால் இதற்கு ஒத்துழைப்பு கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து அமெரிக்காவில் 1895-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி கார் பந்தயத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பந்தயத்தில் வெற்றி பெறுபவருக்கு 5 ஆயிரம் டாலர்கள் பரிசளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் இத்தொகை மிகவும் அதிகமாகும். இருப்பினும் அமெரிக்காவில் கார்கள் மிகவும் குறைவாக இருந்ததால், மிகக் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே இதில் பங்கேற்க விருப்பம் தெரிவித்திருந்தனர்.
இந்த கார் பந்தயத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்தவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டு, 1895-ம் ஆண்டு, நவம்பர் 28-ம் தேதி முதல்முறையாக அமெரிக்காவில் கார் பந்தயம் நடத்தப்பட்டது. ‘சிகாகோ டைம்ஸ் - ஹெரால்ட்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த பந்தயத்தில் 6 கார்கள் பங்கேற்றன. சிகாகோவில் இருந்து இவான்ஸ்டன் நகரம் வரையிலான 87 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்தப் போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் பங்கேற்ற கார்கள் புதிதாக இருந்தபோதிலும், சாலைகள் குண்டும் குழியுமாக மோசமாக இருந்தன. இதனால் நத்தை வேகத்திலேயே கார்கள் நகர்ந்தன. இறுதியில் 7 மணி நேரம் 53 நிமிடங்களில் பந்தய தூரத்தைக் கடந்த கார் முதல் பரிசை தட்டிச் சென்றது. பிராங் துரியா என்பவர் இந்த காரை ஓட்டிச் சென்றார். அமெரிக்காவில் நடந்த முதல் கார் பந்தயம் இதுவேயாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT