Last Updated : 26 Nov, 2020 08:15 PM

 

Published : 26 Nov 2020 08:15 PM
Last Updated : 26 Nov 2020 08:15 PM

ரோஹித் விஷயத்தில் சுத்தமாகத் தெளிவில்லை: விராட் கோலி வருத்தம்

ரோஹித் சர்மா காயப்பட்ட விஷயத்தில் சுத்தமாகத் தெளிவில்லாத நிலை நிலவுகிறது என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. ஒருநாள், டி20, டெஸ்ட் எனப் பல போட்டிகளில் ஆடவுள்ளது. விராட் கோலியின் மனைவி கர்ப்பமாக இருப்பதால், முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு குழந்தை பிறக்கும் நேரத்தில் மனைவியுடன் இருக்க விராட் கோலி இந்தியா திரும்புகிறார். இதனால் ரோஹித் சர்மா அணிக்குத் தலைமை வகிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ரோஹித் சர்மா காயம் காரணமாக முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விராட் கோலி கூறுகையில், "துபாயில் தேர்வுக்குழு கூட்டத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன், ஐபிஎல் ஆடும்போது ஏற்பட்ட காயத்தினால் ரோஹித்தால் விளையாட முடியாது என்று எங்களுக்கு மின்னஞ்சல் மூலம் சொல்லப்பட்டது. 2 வார கால ஓய்வு மற்றும் சிகிச்சை அவருக்குத் தேவை என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அந்தக் காயத்தின் தன்மை என்ன என்பதும் ரோஹித்திடம் விளக்கிச் சொல்லப்பட்டதாகவும், அவரும் அதை ஏற்றுக்கொண்டார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், அந்தச் செய்தி எங்களுக்கு வந்த பின் ரோஹித் ஐபிஎல்லில் தொடர்ந்து ஆடினார். அங்கிருந்து எங்களுடன் அவர் ஆஸ்திரேலியா வருவார் என்று நினைத்தோம். ஆனால், அவர் வரவில்லை. அவர் ஏன் எங்களுடன் பயணப்படவில்லை என்பதற்கான காரணமும் சொல்லப்படவில்லை.

அதன் பிறகு, அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருக்கிறார் என்றும், டிசம்பர் 11ஆம் தேதி மீண்டும் அவர் நிலை ஆய்வு செய்யப்படும் என்றும் மின்னஞ்சல் வந்தது. எனவே முதலில் அணித் தேர்வுக் கூட்டத்துக்கு முன்னால் வந்த மின்னஞ்சல், பின் ஐபிஎல் முடிந்த பிறகு நடந்த விஷயம், அதன்பின் இப்போது ஆய்வைப் பற்றிய மின்னஞ்சல் என இந்த விஷயத்தில் போதிய தெளிவு இல்லவே இல்லை. நாங்கள் காத்திருக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். இது சரி என்று நான் நினைக்கவில்லை" என்று விராட் கோலி தெரிவித்தார்.

இன்னொரு பக்கம், ரோஹித் சர்மாவும் இஷாந்த் சர்மாவும் ஐபிஎல் முடிந்ததும் இந்தியாவுக்குச் செல்லாமல் இந்திய அணியுடனே பயணப்பட்டு ஆஸ்திரேலியா சென்றிருந்தால் இந்த நிலையைத் தவிர்த்திருக்கலாம் என்று விராட் கோலி கூறியுள்ளார்.

"ரோஹித்தும், இஷாந்தும் எங்களுடன் ஆஸ்திரேலியாவுக்குப் பயணப்பட்டிருந்தால் அவர் டெஸ்ட் போட்டியில் ஆடும் வாய்ப்பு அதிகரித்திருக்கும். சாஹாவுக்கும் ஐபிஎல் தொடரில் காயம் ஏற்பட்டது. ஆனால், அவர் எங்களுடன் ஆஸ்திரேலியாவில் சிகிச்சை பெற்று வருகிறார். முதல் டெஸ்ட் ஆட உடல் தகுதி பெறும் நிலையில் இருக்கிறார். இதேதான் ரோஹித், இஷாந்த் விஷயத்திலும் நடந்திருக்கும். இப்போது அவர்களால் விளையாட முடியுமா இல்லையா என்பது பற்றியே தெளிவில்லாத நிலை இருக்கிறது" என்று விராட் கோலி கூறியுள்ளார்.

தற்போதிருக்கும் தனிமைப்படுத்தல் விதிகளின் படி இஷாந்த் சர்மா, ரோஹித் சர்மா இருவராலும் உரிய நேரத்துக்கு ஆஸ்திரேலியாவுக்குப் பயணப்பட்டு டெஸ்ட் தொடரில் பங்கேற்க முடியாது. ஏனென்றால் இருவரும் இந்தியாவிலிருந்து அங்கு செல்லும்போது கட்டாயத் தனிமையில் இருக்க வேண்டும். தனிமைக் காலத்தில் பயிற்சி மேற்கொள்ள முடியாது.

மற்ற இந்திய வீரர்கள் துபாயிலிருந்த தனிமைச் சூழலிலிருந்து அப்படியே ஆஸ்திரேலியாவின் தனிமைச் சூழலுக்குச் சென்றுள்ளதால் அவர்களுக்கு இந்த விதி பொருந்தாது. எனவே இந்த விதியிலிருந்து விலக்கு வேண்டும் என்றால் இந்திய கிரிக்கெட் வாரியமும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் இதுகுறித்துப் பேசி முடிவெடுக்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x