மாரடோனா மரணம்; 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும்: அர்ஜென்டினா அரசு அறிவிப்பு

கோப்புப் படம்: ஸ்போர்ட்ஸ்டார்
கோப்புப் படம்: ஸ்போர்ட்ஸ்டார்
Updated on
1 min read

சர்வதேச பிரபலமான கால்பந்து வீரர் டியாகோ அர்மாண்டோ மாரடோனா (60) காலமானதையொட்டி மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அர்ஜென்டினா அரசாங்கம் அறிவித்துள்ளது.

மாரடைப்பு மற்றும் மூச்சுக் குழாய் அடைப்பு காரணமாக புதன்கிழமை அன்று மாரடோனா காலமானார். அவர் இறந்த நாளிலிருந்து மூன்று நாட்கள் தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அர்ஜென்டினா அரசு தெரிவித்துள்ளது.

அவரது உடலைப் பரிசோதித்த தடயவியல் நிபுணர்கள் அவர் உடலில் எந்தக் காயங்களும் இல்லை என்றும், இயற்கையான முறையிலேயே அவர் இறந்திருக்கிறார் என்றும் உறுதிப்படுத்தினர். இம்மாதத்தின் தொடக்கத்தில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மாரடோனா, அது குணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் நட்சத்திர வீரரும் அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளருமான மாரடோனாவின் மரணத்துக்கு உலகம் முழுவதுமிருந்து கோடிக்கணக்கான ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கடந்த அக்டோபர் 30ஆம் தேதி அன்று தனது 60-வது பிறந்த நாளை மாரடோனா கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in