Last Updated : 25 Nov, 2020 12:41 PM

 

Published : 25 Nov 2020 12:41 PM
Last Updated : 25 Nov 2020 12:41 PM

விராட் கோலி மோசமான கேப்டன் அல்ல, ஆனால் சிறந்த கேப்டன் யார் என்பதே முக்கியம்: கவுதம் காம்பீர் கருத்து

ஐபிஎல் தொடரில் ஆடுவதை வைத்து வீரர்களைத் தேர்வு செய்யும் போது ஏன் அணித் தலைமையையும் அதை வைத்து முடிவு செய்யக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் கவுதம் காம்பீர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டிகள் என பல போட்டிகளில் ஆடவுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு விராட் கோலி நாடு திரும்புகிறார். இதனால் ரோஹித் சர்மா அணித் தலைமை வகிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ரோஹித் சர்மாவும் காயம் காரணமாக முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தற்போது அணிக்கு யார் தலைமை வகிப்பது என்கிற கேள்வி எழுந்துள்ளது. இன்னொரு பக்கம் விராட் கோலியை விட ரோஹித் சர்மாவே சிறந்த கேப்டன் என்று முன்னாள் வீரர் கவுதம் காம்பிர் கருத்து தெரிவித்துள்ளார்.

"விராட் மோசமான கேப்டன் அல்ல. ஆனால் இங்கு விவாதமே யார் சிறந்த கேப்டன் என்பதுதான். அது ரோஹித் சர்மா தான். இருவருக்குமான வித்தியாசம் மிகப்பெரிய அளவில் இருக்கிறது. ஐபிஎல் தொடரில் ஆடுவதை வைத்து ஒரு வீரருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கிறதென்றால் ஏன் கேப்டன் வாய்ப்பு கிடைக்கக் கூடாது.

அப்படி கேப்டன் வாய்ப்புக்கு பரீசிலிக்கப்பட மாட்டாது என்றால் பொதுவாகவே எந்த ஒரு பேட்டிங், பந்துவீச்சுக்கும் ஐபிஎல் என்பது அளவுகோலாக இருக்கக் கூடாது. அதிலிருந்து ஏன் வீரர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? அப்படியென்றால் டி நடராஜன், வாஷிங்டன் சுந்தர், சாஹல், குல்தீப் யாதவ் என அனைவரின் தேர்வும் தவறு தான்" என்று காம்பீர் கூறியுள்ளார்.

ரோஹித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன் அணி நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது. இது அந்த அணியின் ஐந்தாவது சாம்பியன் பட்டமாகும். விராட் கோலி தலைமை வகிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை. 3 முறை மட்டும் ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x