Last Updated : 22 Nov, 2020 12:45 PM

 

Published : 22 Nov 2020 12:45 PM
Last Updated : 22 Nov 2020 12:45 PM

கோலி இல்லாதது இந்திய அணியின் பேட்டிங்கில் பெரிய பள்ளத்தை ஏற்படுத்தும்: இயான் சேப்பல் கருத்து


விராட் கோலி, முதல் டெஸ்ட் போட்டியுடன் நாடு திரும்பியபின், இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் பெரிய ஓட்டையை ஏற்படுத்தும். இதை நிரப்பச் சரியான வீரர்களைத் தேர்வு செய்வதில்தான் தொடர் எவ்வாறு செல்லும் என்பதை முடிவு செய்யும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் இந்திய அணி 2 மாதங்கள் பயணம் செய்து டெஸ்ட், டி20, ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் டிசம்பர் 17-ம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் கேப்டன் விராட் கோலி விளையாடுவார். அதன்பின், தன்னுடைய முதல் குழந்தை பிறப்புக்காக மனைவியுடன் இருக்க இந்தியாவுக்கு கோலி புறப்படுகிறார்.

இதனால் அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளிலும் கோலி விளையாடமாட்டார். அவருக்குப் பதிலாக ரோஹித் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால், ரோஹித்துக்கு ஏற்பட்டுள்ள காயம் முழுமையாகக் குணமடைந்தால்தான் அவர் போட்டியில் விளையாடுவார்.

இதனால் விராட் கோலி இல்லாத நிலையில் இந்திய அணியில் உள்ள இளம் வீரர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்திக்கொள்ள இது சிறந்த வாய்ப்பு என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் தெரிவித்துள்ளார்.

கிரிக்இன்போ தளத்தில் இயான் சேப்பல் எழுதிய கட்டுரையில் கூறியிருப்பதாவது:

முதல் டெஸ்ட் போட்டி முடிந்தபின் விராட் கோலி நாடு திரும்புவது இந்திய டெஸ்ட் அணியின் பேட்டிங் வரிசையில் மிகப்பெரிய ஓட்டையை ஏற்படுத்தும். இந்த வாய்ப்பை அணியில் உள்ள இளம் வீரர்கள் பயன்படுத்திக்கொண்டு தங்களின் திறமையை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஆஸி. இந்தியத் தொடர் ஏற்கெனவே மிகவும் பரப்பான, போட்டிக்களமாக உருவாகியிருக்கிறது. இப்போது இதில் கூடுதலாக அணி வீரர்கள் தேர்வு முக்கியப் பங்காற்றும்.அணியில் வீரர்களை சரியாகத் தேர்வு செய்தபின்புதான் துணிச்சலான தேர்வாளர்கள் யார் என்பதை அறிய முடியும்.

ஆஸ்திரேலிய அணியைப் பொருத்தவரை பயிற்சியாளர் லாங்கர் கருத்திலிருந்து நான் மாறுபடுகிறேன். வீரர்கள் தேர்வு என்பது அவர்கள் தற்போது இருக்கும் ஃபார்ம் அடிப்படையில்தான் தேர்வு செய்ய வேண்டும்.
டேவிட் வார்னருடன் தொடக்க வீரராக களமிறக்குவதில் ஜோ பர்ன்ஸ், இளம் வீரர் வில் புகோவ்ஸ்கி இடையே இருக்கும் வாய்ப்பில் வில் புகோவ்ஸ்கிதான் அதிகமான வாய்ப்பு வழங்க வேண்டும்.

ஜோ பர்ன்ஸ், வார்னர் பாட்னர்ஷிப்பை அதிகமாக மதிப்பீடு செய்யக்கூடாது. கடந்த சீசனில் பர்ன்ஸ் 2 அரைசதங்கள் உள்பட 256 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார். சராசரியாகப் பார்த்தால் 32 ரன்கள் மட்டுமே வருகிறது. இது ஒரு சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனின் குறைந்தபட்ச சராசரியைவிட மிகக் குறைவாகும்.

ஆனால், புகோவ்ஸ்கி ஷெப்பீல்ட் ஷீல்ட் தொடரில் 3 இரட்டை சதம். இதில் இரு இரட்டை சதங்கள் இந்த சீசனில் அடித்துள்ளார். ஆதலால் புகோவ்ஸ்கிதான் சிறந்த தேர்வு.

ஆஸ்திரேலியாவில் நிலவும் கரோனா வைரஸ் பரவல், குழப்பமான சூழல், போன்றவற்றை இந்திய அணிக்கு சாதகமாக அமைந்தால், டெஸ்ட் தொடரை தக்கவைக்கும் வாய்ப்பு கூட ஏற்படலாம்.

இந்திய அணிக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தல் அளிக்கப்பட்டு, அதில் பயிற்சி மேற்கொள்ளவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களால் ஆஸ்திேரலியாவின் காலச்சூழலுக்கு எளிதாக தங்களை தயார்படுத்திக்கொள்ள முடியும். இது இந்திய அணிக்கு கூடுதல் பலமாகும்.

இந்தியத் தேர்வுக்குழுவினர் தங்கள் பணியை சிறப்பாகச் செய்துள்ளார்கள் என்றால், சிட்னில் தனிமைப்படுத்தும் முகாமில் பயிற்சி பெறும் இந்திய பேட்ஸ்மேன்கள், பவுன்ஸர் ஆடுகளத்தை அறிந்து நன்கு பயிற்சி எடுப்பார்கள்

இவ்வாறு சேப்பல் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x