Last Updated : 22 Nov, 2020 03:14 AM

 

Published : 22 Nov 2020 03:14 AM
Last Updated : 22 Nov 2020 03:14 AM

விளையாட்டாய் சில கதைகள்: கிரிக்கெட் ஹெல்மெட் பிறந்த கதை

இன்றைய தினம் கிரிக்கெட் போட்டிகளில் பேட்ஸ்மேன்களுக்கு பேட்டுக்கு அடுத்து முக்கிய தேவையாக இருப்பது ஹெல்மெட்கள். வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் பவுன்சர்களால் பேட்ஸ்மேன்களின் தலையில் காயம் ஏற்படாதவாறு அவர்களை ஹெல்மெட்கள் காக்கின்றன. வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமின்றி, சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஆடும்போதும் வீரர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என சட்டம் இயற்றுமாறு சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு சச்சின் டெண்டுல்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலகில் கிரிக்கெட் அறிமுகமாகி நீண்ட நாட்களுக்குப் பிறகே ஹெல்மெட்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. 1930-களில் ஹெல்மெட் போன்ற ஒரு நவீன தலைக்கவசத்தை அணிந்து பாஸ்டி ஹெண்டிரன் என்ற இங்கிலாந்து வீரர் ஆடியுள்ளார். 3 தொப்பிகள் மற்றும் கால்காப்பின் சில பாகங்களைக் கொண்டு இந்த தலைக்கவசத்தை அவரது மனைவி உருவாக்கிக் கொடுத்துள்ளார்.

நவீன கிரிக்கெட் உலகில் ஹெல்மெட்கள் நடைமுறைக்கு வரத் தொடங்கியது 1970-களில்தான். இங்கிலாந்து கிரிக்கெட் வீரரான டென்னிஸ் அமிஸ், உலக சீரிஸ் கிரிக்கெட் போட்டிகளின்போது, பைக் ஓட்டுபவர்கள் பயன்படுத்தும் ஹெல்மெட்டை சற்று மாற்றி வடிவமைத்து, கிரிக்கெட் போட்டி ஒன்றில் பேட்டிங் செய்ய வந்தார். அப்போது ரசிகர்கள் அவரைக் கிண்டல் செய்தனர். ஆனால் இந்த தொடரின் போது அவரது தலையை ஒரு பந்து தாக்கியபோது, அவர் காயமின்றி தப்ப, ஹெல்மெட்டின் அவசியத்தை மற்ற வீரர்களும் உணர்ந்தனர். இதைத் தொடர்ந்து டோனி கிரேக், ஜாகிர் அப்பாஸ், கவாஸ்கர் போன்ற வீரர்களும் தங்களுக்கு ஏற்ற வகையில் ஹெல்மெட்களை வடிவமைத்து அணிந்தனர். பின்னர், பல்வேறு நவீன மாற்றங்களுடன் ஹெல்மெட்கள் வரத் தொடங்கின. இன்றைய காலகட்டத்தில் அதிநவீன பிளாஸ்டிக்குகள் மற்றும் ஃபைபர்களால் தயாரிக்கப்படும் ஹெல்மெட்களின் எடை 750 கிராம்தான். ஆனால் விலைமதிப்பில்லாத பல வீரர்களின் உயிரை அவை காக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x