Last Updated : 21 Nov, 2020 05:29 PM

 

Published : 21 Nov 2020 05:29 PM
Last Updated : 21 Nov 2020 05:29 PM

'ஐபிஎல் தொடரில் டீகாக், ரோஹித் சர்மாவையே திணறவிட்டேன்; ஆஸி வீரர்களை ஒரு கை பார்க்கலாம்': முகமது ஷமி உற்சாகம்

முகமது ஷமி : கோப்புப்படம்

சிட்னி


ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் குயின்டன் டீ காக், ரோஹித் சர்மாவையே என்னுடைய பந்துவீச்சில் திணறவைத்தேன். ஆஸ்திரேலிய ஆடுகளத்தில் எனது பந்துவீச்சு பெரும் நெருக்கடியை அளிக்கும் என்று இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம் பெற்றிருந்த முகமது ஷமி இந்த சீசனில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 2 சூப்பர் ஓவர்கள் நடந்த ஆட்டத்தில் ஷமியின் பந்துவீச்சு அற்புதமாக இருந்தது. இருசூப்பர் ஓவர்களிலும் 5 ரன்கள் மட்டுமே கொடுத்து யார்கராக வீசி திணறவி்ட்டார்.

ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ள இந்திய அணியில் முகமது ஷமி இடம் பெற்றுள்ள நிலையில் பிசிசிஐ டிவிக்கு இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியில் நான் இந்த ஐபிஎல் சீசனில் செயல்பட்ட விதம் எனக்கு மிகுந்த நம்பி்க்கையையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது. என்னை சரியான இடத்துக்கு கொண்டு சென்றுள்ளேன். என் தோள்மீதிருந்த சுமை குறைந்தது போன்று உணர்கிறேன்.

அடுத்துவரும் ஆஸ்திரேலியத் தொடரை எந்தவிதமான நெருக்கடியும் இ்ல்லாமல் நான் தயாராகுவேன். இப்போது நான் மிகவும் தன்னம்பிக்கையுள்ளவராக உணர்கிறேன். லாக்டவுன் காலத்தில் நான் உடற்பயிற்சி செய்து உடலைக் கட்டுக்கோப்பாக வைத்தேன். ஐபிஎல் போட்டித் தொடர் விரைவில் வந்துவிடும் என்பதால் என் உடற்பயிற்சிையயும் பந்துவீச்சுப் பயிற்சியையும் கைவிடாமல் இருந்தேன்

ஆஸ்திரேலியாவில் முதலில் ஒருநாள், டி20 தொடருக்கு பின் பிங்க் பந்தில் ஒரு டெஸ்ட், சிவப்பு பந்தில் டெஸ்ட்போட்டிகள் என விளையாடப்போகிறோம். சிவப்பு பந்தில் சிறப்பாக பந்துவீச வேண்டும் என்பதற்காக தீவிரமாக பயிற்சி செய்து வருகிறேன். சரியான லைன் லென்த்தில் பந்துவீசிவிட்டால் எந்த விதமான போட்டியிலும் நாம் சிறப்பாகச் செயல்பட முடியும்

இதற்கு முதலில் நம்மிடம் கட்டுப்பாடு அவசியம். ஒருநாள், டி20 போட்டிக்கு பந்துவீச்சு சிறப்பாக அமைந்துவிட்டாலும், டெஸ்ட் போட்டிக்காக தனியாக நாம் பயிற்சி எடுக்க வேண்டும். இரு விதமான போட்டிகளிலும் ஒரே லைன், லென்த்தில் பந்துவீச முடியாது. நம்முடைய உத்தியை மாற்ற வேண்டும்.

ஆஸியில் வார்னர், ஸ்மித் போன்ற வீரர்களின் பற்றியெல்லாம் கவலையில்லை. நம்மிடம் திறமையான பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். கடுமையாக வலைப்பயிற்சி எடுக்கிறார்கள். உலகத்தரமான பேட்ஸ்மேனாக இருந்தாலும்கூட சரியான பந்துவீச்சை செலுத்தினால் விக்கெட்டை இழந்துவிடுவார்.

உமேஷ் யாதவ், பும்ரா, இசாந்த் சர்மா போன்ற திறமையான பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே மணிக்கு 140கி.மீ குறைவில்லாமல் பந்துவீசுவார்கள். ஆஸ்திரேலியாவில் இவர்களின் வேகப்பந்துவீச்சு கடும் நெருக்கடியை எதிரணிக்கு அளி்க்கும்.

வெளிநாடுகளில் நடந்த ஐபிஎல் தொடரில் நமது வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார்கள். ரோஹித் சர்மா, குயின்டன் டீகாக் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களையே 5 ரன்களுக்குள் சுருட்டிவிட்டேன். இதில் ஆஸ்திரேலிய அணிக்கு எனது பந்துவீச்சு நிச்சயம் நெருக்கடியை அளிக்கும்
இவ்வாறு ஷமி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x