Last Updated : 17 Nov, 2020 03:45 PM

 

Published : 17 Nov 2020 03:45 PM
Last Updated : 17 Nov 2020 03:45 PM

தோனிக்கு ரூ.15 கோடி கொடுத்து வீணடிக்காதீர்கள்; சிஎஸ்கே அணி நிர்வாகம் ஏலத்தில் தக்கவைக்கக் கூடாது: ஆகாஷ் சோப்ரா அதிரடி

2021-ம் ஆண்டில் ஐபிஎல் மெகா ஏலம் நடந்தால், சிஎஸ்கே அணி நிர்வாகம் தோனியைத் தக்கவைக்கக் கூடாது. அவரை விடுவித்து மேட்ச் கார்டு மூலம் எடுக்கலாம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

தோனி அடுத்த 3 ஆண்டுகள் வரை ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா எனத் தெரியாத நிலையில், அவருக்கு ரூ.15 கோடி கொடுத்து வீணடிக்கக் கூடாது என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணி இந்த முறை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஐபிஎல் தொடரில் 7-வது இடத்தையே பிடித்தது. ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் முறையாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லாமல் சிஎஸ்கே அணி வெளியேறியது.

இந்நிலையில் ஐபிஎல் அணியில் இடம் பெற்றிருந்த ஷேன் வாட்ஸன் கிரிக்கெட்டிலிருந்தே விடைபெற்றுவிட்டார். இந்த சீசனில் விளையாடமல் இருந்த ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா இருவரும் அடுத்த சீசனில் சிஎஸ்கே அணியில் விளையாடுவார்களா எனத் தெரியவில்லை.

2021-ம் ஆண்டில் சிஎஸ்கே அணியில் விளையாடுவேன் என மகேந்திர சிங் தோனியும் தெரிவித்துள்ளார். ஆனால், தொடர்ந்து எத்தனை ஆண்டுகளுக்கு அவரால் விளையாட முடியும் என்பதும் சந்தேகம்தான்.

இந்தச் சூழலில்தான் இந்திய அணியின் முன்னாள் வீரரும், விமர்சகருமான ஆகாஷ் சோப்ரா ஃபேஸ்புக்கில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''2021-ம் ஆண்டில் மெகா ஏலம் நடந்தால், சிஎஸ்கே அணி நிர்வாகம் தோனியை விடுவித்துவிட வேண்டும். ஏனென்றால், ஐபிஎல் மெகா ஏலத்தில் ஒரு வீரரை எடுத்தால் 3 ஆண்டுகள் வைத்து விளையாட வேண்டும்.

ஆனால், தோனியின் உடல்நிலையைப் பொறுத்தவரை அவரால் அடுத்த 3 ஆண்டுகளுக்கு விளையாடுவாரா எனத் தெரியாது. அதாவது சிஎஸ்கே அணியில் தோனி 3 ஆண்டுகளுக்கு விளையாட முடியுமா என்பது கேள்விக்குறிதான்.

அதற்காக தோனியை அணியில் வைக்காதீர்கள் எனச் சொல்லவில்லை. அவர் 2021-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவார். ஆனால், அதன்பின் விளையாடாவிட்டால், தோனியை ரூ.15 கோடி ஏலத்தில் எடுத்தது போன்ற அதே மதிப்பிலான வீரர் ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டும். அந்த மதிப்புக்கு யாரை அணி நிர்வாகம் தேர்வு செய்யும்.

ஆனால், சிஎஸ்கே அணி நிர்வாகம் தோனியை விடுவித்துவிட்டு, ரைட்டூ மேட்ச் கார்டு மூலம் தோனியை அணிக்குள் கொண்டுவரலாம். இதனால் அணிக்கு ரூ.15 கோடி மிச்சமாகும். இந்தப் பணத்தை வேறு இளம் வீரர்களை, நல்ல சர்வதேச வீரர்களைத் தேர்வு செய்யப் பயன்படுத்தலாம்.

ஆகாஷ் சோப்ரா

ஒருவேளை தோனி 2021-ம் ஆண்டு மட்டும் விளையாடிவிட்டு, அதன்பின் விலகிவிட்டால் சிஎஸ்கே அணிக்கு ரூ.15 கோடி திரும்பக் கிடைக்கும். ஆனால், அதே ரூ.15 கோடிக்குத் தகுதியான வீரர்கள் கிடைக்க மாட்டார்கள். மெகா ஏலத்தில் கிடைத்த வாய்ப்பு என்னவென்றால், அணி நிர்வாகத்திடம் பணம் இருந்தால், பெரிய அணியை உருவாக்க முடியும்.

ஆதலால் தோனியை ஏலத்தில் விடுவித்துவிட்டு, மேட்ச் கார்டு முலம் மீண்டும் ஏலத்தில் சிஎஸ்கே அணி நிர்வாகம் எடுக்க வேண்டும். அதுதான் அணிக்கும், நிர்வாகத்துக்கும் நல்லது.

இப்போதுள்ள சூழலில் சிஎஸ்கே அணிக்கு மெகா ஏலம் நடத்துவது அவசியம். பல வீரர்களைத் தக்கவைக்க முடியாத சூழலில்தான் இருக்கிறது. இப்போது இருக்கும் அணியைக் கலைத்துவிட்டு, புதிய அணியை உருவாக்க விரும்பினால், டூப்பிளசிஸ், ராயுடுவுக்கு மட்டும் செலவிடலாம். ஆனால், ரெய்னா, ஹர்பஜன் சிங்கை மீண்டும் சிஎஸ்கே அணி நிர்வாகம் ஏலத்தில் எடுப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை''.

இவ்வாறு ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x