Last Updated : 16 Nov, 2020 04:47 PM

 

Published : 16 Nov 2020 04:47 PM
Last Updated : 16 Nov 2020 04:47 PM

சமாளிக்கணும்; மின்னல் வேக ஆஸி.ஆடுகளம்: டென்னிஸ் பந்தில் புல் ஷாட் பயிற்சி எடுத்த கே.எல்.ராகுல்

சிட்னி

ஆஸ்திரேலியாவில் உள்ள மின்னல் வேக ஆடுகளங்களைச் சமாளிக்கும் நோக்கில், இந்திய அணி வீரர் கே.எல். ராகுல் டென்னிஸ் பந்துகளை வீசச் செய்து புல் ஷாட் அடித்து இன்று பயிற்சியில் ஈடுபட்டார்.

கடந்த 2 மாதங்களாக ஐக்கிய அரபு அமீரகத்தில் செத்துப்போன ஆடுகளங்களில் ஐபிஎல் தொடரில் கே.எல்.ராகுல் விளையாடி வந்தார். ஆனால், இம்மாதம் 27-ம் தேதி முதல் மின்னல் வேக ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பவுன்ஸர்களையும், யார்க்கர்களையும் சந்திக்க வேண்டியது இருக்கும். அதற்குத் தயார்படுத்தும் வகையில் ராகுல் டென்னிஸ் பந்துகளை வீசி, புல் ஷாட் அடித்துப் பயிற்சி எடுத்தார்.

இன்று காலை முதல் பயிற்சியில் ஈடுபட்ட கே.எல்.ராகுல் பெரும்பாலும் டென்னிஸ் பந்துகளை வீசச் செய்தே அதன்மூலம் வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். மற்றவகையில் வழக்கமான பேட்டிங் பயிற்சியில் ராகுல் ஈடுபட்டாலும், பிரத்யேகமாக ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் வீசப்படும் பவுன்ஸர்களைச் சமாளிக்க இந்தப் பயிற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார்.

இது தொடர்பாக பிசிசிஐ ட்விட்டரில் பதிவிட்ட வீடியோவில், சக அணி வீரர் ரவிச்சந்திர அஸ்வின் டென்னிஸ் ராக்கெட் மூலம் பந்துகளை ராகுலை நோக்கி தலைக்கு மேல் அடிக்க, அதை புல் ஷாட் அடித்து ராகுல் பயிற்சி எடுத்தார். ராகுல் பெரும்பாலும் புல் ஷாட்டை மேல்நோக்கி அடிக்காமல் கீழே அடித்துப் பயிற்சி எடுத்து வருகிறார். மிகவும் குறுகிய தொலைவிலிருந்து டென்னிஸ் ராக்கெட் மூலம் அடிக்கும் பந்துகள் வேகமாக ராகுலை நோக்கி வந்தன. அதை புல் ஷாட்டில் மடக்கி அடித்து ராகுல் தீவிரமாகப் பயிற்சி எடுத்தார்.

இதற்கு முன் 1980களிலும், 1990களிலும் இந்திய அணி ஆஸ்திரேலியப் பயணத்துக்குச் செல்லும் முன் சிமெண்ட் தரையில் ஈரமான டென்னிஸ் பந்துகள் மூலம் பந்துவீசச் செய்து பேட்டிங் பயிற்சி எடுத்தனர்.

ஈரமான சிமெண்ட் தரையில் டென்னிஸ் பந்தை வீசும்போது பந்து அதிவேகமாக பேட்ஸ்மேனை நோக்கி வரும். விளையாடுவதற்கு எளிதாக இருக்கும். ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் வேகமானவை என்பதால் அதைச் சமாளிக்கும் பொருட்டு இந்தப் பயிற்சி எடுத்தார்கள். தற்போது பயிற்சிகள் அனைத்தும் நவீனமானதால், டென்னிஸ் ராக்கெட் மூலம் பந்துகளை அடித்து பேட்டிங் பயிற்சி எடுக்கின்றனர்.

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி தனது தனிப்பட்ட ட்விட்டர் பக்கத்தில், பிங்க் கூக்கபுரா பந்தில் பந்துவீசிப் பயிற்சி எடுக்கும் வீடியோவைப் பதிவிட்டுள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில் ஷமி குறிப்பிடுகையில், “உங்கள் நாட்டுக்காக விளையாடுவதைப் போன்ற சிறந்த உணர்வு எதுவும் இல்லை. நீண்ட காலத்துக்குப் பின் அணிக்காகப் பந்துவீசுகிறேன். இந்திய அணியின் பயிற்சி இன்று முடிந்தது. ஆஸி. தொடரை எதிர்பார்த்திருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x