Published : 16 Nov 2020 03:23 PM
Last Updated : 16 Nov 2020 03:23 PM

கோலியின் காலம் முடிந்துவிட்டது; ரோஹித் சர்மாவிடம் கேப்டன் பதவியை ஒப்படையுங்கள்: நாசர் ஹுசைன் கருத்து

விராட் கோலி, ரோஹித் சர்மா : கோப்புப்படம்

லண்டன்

விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து இறங்கும் காலம் வந்துவிட்டது. இனிமேல் டி20, ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பை ரோஹித் சர்மாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5-வது முறையாக ரோஹித் சர்மா கோப்பையைப் பெற்றுக் கொடுத்தார். ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப்பைப் பார்த்தபின் அவரை இந்திய அணியின் டி20, ஒருநாள் அணிக்கு கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று முதன்முதலில் கவுதம் கம்பீர் குரல் கொடுத்தார்.

இப்போது இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைனும் இதே கருத்தை வலியுறுத்தி இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவை நியமிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

ஸ்கை ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு நாசர் ஹுசைன் அளித்த பேட்டியில் கூறியதாவது:

''ஒருநாள் போட்டிகளிலும், டி20 போட்டிகளிலும் ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடக் கூடியவர். ஒருநாள் போட்டியில் இரு இரட்டைச் சதங்களை ரோஹித் அடித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்கத்தில் சரியாக பேட் செய்யாவிட்டாலும் இறுதிப் போட்டியில் ரோஹித் சர்மா தனது திறமையை வெளிப்படுத்திவிட்டார். எந்த கேப்டனும் செய்யாத செயலை ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா செய்துள்ளார்.

இந்திய அணியிலும் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படும் போட்டிகளில் ரோஹித் சர்மா கேப்டனாகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். 10 ஒரு நாள் போட்டிக்குத் தலைமை ஏற்றுள்ள ரோஹித் சர்மா 8 போட்டிகளில் வென்றுள்ளார். குறிப்பாக 2018-ல் ஆசியக் கோப்பையை வென்றுள்ளார். டி20 போட்டியில் 19 ஆட்டங்களில் தலைமை ஏற்று 15 ஆட்டங்களில் ரோஹித் தலைமை வென்றுள்ளது. இலங்கையில் நிடாஹஸ் கோப்பையிலும் வென்றுள்ளது.

ரோஹித் சர்மா கேப்டன்ஷிப் என்பது மிகவும் கூலாகவும், அமைதியாகவும் இருக்கும். சரியான முடிவுகளைச் சரியான நேரத்தில் எடுப்பார். மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மாவும் சேர்ந்தபின் நல்ல நேரம் வந்துவிட்டது.

இப்போது இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள முக்கிய கிரிக்கெட் நட்சத்திரங்கள் கோலி கேப்டன் பதவியிலிருந்து இறங்கும் நேரம் வந்துவிட்டது. கேப்டன் பதவியை ரோஹித் சர்மாவுக்குக் கொடுங்கள் எனச் சொல்லத் தொடங்கிவிட்டார்கள். ரோஹித் சர்மாவின் சாதனைகள்தான் அவருக்காகப் பேசுகின்றன''.

இவ்வாறு நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x