Published : 14 Nov 2020 11:46 AM
Last Updated : 14 Nov 2020 11:46 AM

2021 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகக்கூடும்: யாருக்குப் பதவி?- சஞ்சய் பங்கர் தகவல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து எம்.எஸ்.தோனி 2021 சீசனில் விலகிவிடுவார். கேப்டன் பதவியை டூப்பிளசிஸிடம் வழங்க வாய்ப்புள்ளது என நம்புகிறேன் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு 2008-ம் ஆண்டிலிருந்து கேப்டனாக இருந்து வரும் எம்.எஸ்.தோனி இதுவரை 3 முறை சாம்பியன் பட்டத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளார். 6 முறை இறுதிப்போட்டிக்கு அணியை அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், 2020-ம் ஆண்டு ஐபிஎல் தொடர் சிஎஸ்கே அணிக்கும், தோனியின் தலைமைக்கும் பெரும் சோதனைக் காலமாக அமைந்தது.

ப்ளே ஆஃப் சுற்றுக்குக் கூட தகுதி பெறாமல், சிஎஸ்கே அணி வெளியேறியது. இதனால் ஐபிஎல் தொடரிலிருந்து தோனி ஓய்வு பெறலாம் என்று தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து தோனியிடமே வெளிப்படையாக வர்ணனையாளர் கேட்டபோது, நிச்சயமாகக் கிடையாது. அடுத்த சீசனிலும் சிஎஸ்கே அணியில் விளையாடுவேன் என்று தோனி தெரிவித்தார்.

இந்த ஆண்டு சீசனில் சிஎஸ்கே அணியில் விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் பல்வேறு மாற்றங்களை தோனி செய்தார். ஆனால், கேப்டன் பொறுப்பை மட்டும் மாற்றவில்லை. ஆனால், கேப்டன் பொறுப்பை டூப்பிளசிஸிடம் கொடுத்துப் பரிசோதிக்கலாம் என்று கருத்துகள் வெளியாகின. ஆனால், தோனி அந்த முயற்சியை மட்டும் செய்யவில்லை.

இந்நிலையில் 2021-ம் ஆண்டு நடக்கும் 14-வது ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பை டூப்பிளசிஸிடம் தோனி ஒப்படைக்கலாம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒரு நிகழ்ச்சியில் சஞ்சய் பங்கர் பேசியதாவது:

“எனக்குக் கிடைத்த தகவல்களின்படி, புரிந்து கொள்ளப்பட்டவரையில் 2021-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகிவிடலாம். அந்தப் பொறுப்பை டூப்பிளசிஸிடம் தோனி ஒப்படைக்கலாம் என நம்புகிறேன். ஆனால், தோனி அணியில் சாதாரண வீரராக, விக்கெட் கீப்பராக இருந்து செயல்படுவார். கேப்டன் பொறுப்பில் ஒரு மாற்றம் தேவை என்பதற்காகவே இதை தோனி செய்யலாம்.

இப்போதுள்ள நிலையில் சிஎஸ்கே அணியில் கேப்டன் பொறுப்பு மாற்றத்துக்கு வேறு வீரர் யாருமில்லை. சிஎஸ்கே அணியைத் தவிர்த்து மற்ற அணியைப் பார்த்தால், ஏலத்தில் எந்த முக்கியமான வீரரையும் அணிகள் இழக்கத் தயாராக இல்லை. அதாவது கேப்டன் தகுதியுள்ள எந்த வீரரையும் மற்ற அணிகள் விடுவிக்கத் தயாராக இல்லை. ஆதலால், டூப்பிளசிஸிடம் மாற்றத்துக்காக கேப்டன் பொறுப்பை தோனி ஒப்படைக்கலாம்.

எனக்குத் தெரிந்தவரை, 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையை இந்திய அணி வென்றபின், கேப்டன் பொறுப்பை வேறு வீரரிடம் தோனி ஒப்படைக்க எண்ணினார். அது தொடர்பாக பிசிசிஐ அமைப்பிடமும் பேசினார். ஆனால், அந்த நேரத்தில் இங்கிலாந்து ஆஸ்திரேலியத் தொடர் இருந்ததால், அதை வழிநடத்தத் தகுதியான வீரர்கள் இல்லாத காரணத்தினால்தான் அந்தப் பதவியில் தோனி தொடர்ந்து நீடித்தார்”.

இவ்வாறு சஞ்சய் பங்கர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x