Published : 14 Nov 2020 03:13 AM
Last Updated : 14 Nov 2020 03:13 AM
செஸ் போட்டியையும், குத்துச்சண்டை போட்டியையும் நம் அனைவருக்கும் தெரியும். இந்த 2 விளை யாட்டுகளையும் ஒன்றிணைத்து விளையாடும் செஸ் பாக்ஸிங் போட்டியைப் பற்றி இன்றைய தினம் தெரிந்து கொள்வோம்.
வீரர்களின் அறிவுத் திறன் மற்றும் உடல் உறுதியை சோதிக்கும் வகையில் செஸ் போட்டியையும், குத்துச்சண்டை போட்டியையும் ஒருங்கிணைத்து நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த லேப் ரூபின் என்பவர் கடந்த நூற்றாண்டின் இறுதியில் செஸ் பாக்ஸிங் போட்டியைக் கண்டுபிடித்தார். இப்போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் செஸ் மற்றும் குத்துச்சண்டை ஆகிய 2 பிரிவுகளிலும் ஆற்றல் வாய்ந்தவர்களாக இருக்க வேண்டியது அவசியம். இப்போட்டியின் விதிப்படி இதில் பங்கேற்கும் வீரர்கள் செஸ் போட்டியில் 6 சுற்றும், குத்துச்சண்டையில் 5 சுற்றும் மோதவேண்டும். இதில் செஸ் போட்டி 4 நிமிடங்களைக் கொண்டதாகவும், குத்துச்சண்டை போட்டி 3 நிமிடங்களைக் கொண்டதாகவும் இருக்கும்.
ஒவ்வொரு சுற்றுக்குப் பிறகும் போட்டியாளர்களுக்கு ஒரு நிமிடம் ஓய்வு அளிக்கப்படும். இதில் செஸ் போட்டியில் தோற்பதைத் தவிர்க்க எந்த வீரராவது காய் நகர்த்தலில் தாமதம் செய்தால், அவருடைய புள்ளிகள் கழிக்கப்படும். இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் வீரர்கள் அதற்கு முன் குறைந்தது 50 அமெச்சூர் குத்துச்சண்டை போட்டிகளிலாவது பங்கேற்றிருக்க வேண்டும். 1992-ம் ஆண்டு முதல் உலகின் பல்வேறு பகுதிகளில் செஸ் பாக்ஸிங் ஆடப்பட்டு வந்தாலும், சர்வதேச அளவிலான முதல் செஸ் பாக்ஸிங் போட்டி 2003-ம் ஆண்டில்தான் நடந்தது. நெதர்லாந்து குத்துச்சண்டை கூட்டமைப்பு மற்றும் உலக செஸ் பாக்ஸிங் அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்த இந்த போட்டி ஆம்ஸ்டர்டாம் நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த லேப் ரூபிங் வெற்றி பெற்றார்.
உலகெங்கிலும் தற்போது 150 தொழில்முறை ஆட்டக்காரர்கள் செஸ் பாக்ஸிங் போட்டிகளில் ஆடி வருகிறார்கள். பெர்லின், லண்டன் உட்பட பல்வேறு நகரங்களில் பயிற்சி மையங்கள் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT