Last Updated : 13 Nov, 2020 01:42 PM

 

Published : 13 Nov 2020 01:42 PM
Last Updated : 13 Nov 2020 01:42 PM

புதிய வண்ணத்தில் ஆஸி.தொடர்: ‘90களின் ஜெர்ஸிக்கு’ திரும்பிய இந்திய அணி: பூர்வகுடிகளை பெருமைப்படுத்தும் ஆடையில் ஆஸி. அணி

சிட்னி நகருக்குச் சென்றடைந்த இந்திய அணியினர்: படம் உதவி | ட்விட்டர்.

மெல்போர்ன்

இம்மாதம் 27-ம் தேதி தொடங்கும் இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள், டி20 தொடரில் இரு அணிகளும் புதுமையான ஜெர்ஸியில் (ஆடை) களமிறங்க உள்ளன.

வழக்கமான நீல நிற ஆடைக்குப் பதிலாக, கடந்த 1990களில் அணிந்த ஆடையைப் போல இந்திய அணி இந்த முறை அணிய உள்ளது. அதேபோல, ஆஸ்திரேலியாவின் பூர்வகுடி மக்களைப் பெருமைப்படுத்தும் வகையில் புதிய வண்ணத்தில், டிசைனில் ஆஸ்திரேலிய அணியினர் ஆடை அணிந்து விளையாட உள்ளனர்.

ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 3 டி20 தொடர், 3 ஒருநாள் தொடர், 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. வரும் 27-ம் தேதி டி20 தொடர் தொடங்குகிறது.

1992-ல் இந்திய அணி அணிந்திருந்த ஜெர்ஸி

அதைத் தொடர்ந்து டிசம்பர் 4 முதல் 8-ம்தேதி வரை ஒருநாள் தொடரும், அதன்பின் டிசம்பர் 17-ம் தேதி அடிலெய்டில் முதல் டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாகவும் நடக்கிறது. இரு அணிகளுக்கு இடையே நடக்கும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி என்பதால் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியத் தொடருக்காக துபாயிலிருந்து புறப்பட்ட இந்திய அணியினர் நேற்று சிட்னி நகர் சென்றடைந்தனர். சிட்னி நகரில் புல்மான் ஹோட்டலில் தங்கியுள்ள இந்திய அணியினர் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்குப் பின் போட்டிக்குத் திரும்புவார்கள்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இந்திய அணி புதிய ஜெர்ஸியில் களமிறங்க உள்ளது.

இதுகுறித்து ஆங்கிலப் பத்திரிகை ஒன்று வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

''பிசிசிஐ நிர்வாகம், எம்பிஎல் நிறுவனத்துடன் ரூ.120 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த நிறுவனம் வடிவமைத்துள்ள ஆடை, கடந்த 1992-ம் ஆண்டு இந்திய அணி முதன்முதலில் வண்ண ஆடையை அணிந்த டிசைனில் உருவாக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக நீல நிறத்தில் ஆடை அணிந்திருக்கும் இந்திய அணி, இந்த முறை கருநீல நிறத்தில் தோள் பட்டையில் சில வண்ணக் கோடுகளுடன் ஆடை வடிமைக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல ஆஸ்திரேலிய அணியும் உள்நாட்டு பூர்வகுடிமக்கள் கிரிக்கெட்டுக்கு அளித்த பங்களிப்பைப் பெருமைப்படுத்தும் விதத்தில் ஆடை அணிந்து விளையாடுகின்றனர். வழக்கமாக ஒருநாள் தொடருக்கு மஞ்சள் ஆடையும், டி20 தொடருக்குக் கரும்பச்சை ஆடையும் ஆஸ்திரேலிய அணியினர் அணிந்து விளையாடுவார்கள்.

ஆனால், இந்த முறை உள்நாட்டு மக்களால், உள்நாட்டு மக்களைப் பெருமைப்படுத்தும் வகையில் பல வண்ணங்களில் ஆஸி. அணிக்கு ஜெர்ஸி வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆஸி. அணி வீரர் மிட்ஷெல் ஸ்டார்க் அணிந்துள்ள புதிய ஜெர்ஸி

ஆஸ்திரேலியாவின் ஏஎஸ்ஐசிஎஸ் மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆன்ட்டி பியோனா கிளார்க், கார்ட்னி ஹேகன் ஆகிய இரு பெண்கள் இணைந்து இந்த ஆடையை உருவாக்கியுள்ளனர்.

முதன்முதலில் ஆஸ்திரேலிய அணி கடந்த 1868-ம் ஆண்டில் வெளிநாட்டுக்குச் சுற்றுப்பயணம் செய்து இங்கிலாந்தில் விளையாடியது. அப்போது ஆஸ்திரேலிய அணியில் பூர்வகுடியைச் சேர்ந்த மஸ்க்குயிட்டோ கோஜன் எனும் வீரர் அணியில் இடம் பெற்றிருந்தார். மறைந்த அந்த வீரரின் நேரடி உறவினர்தான் இந்த ஆடையை உருவாக்கிய ஆன்ட்டி பியோனா கிளார்க் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய அணியின் கடந்தகால, நிகழ்கால, எதிர்காலப் பூர்வகுடிகளைப் பெருமைப்படுத்தும் விதத்தில் ஆடை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் மிட்ஷெல் ஸ்டார்க் இந்த ஆடையை அணிந்து வெளியிட்டுள்ளார்''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x