Published : 29 May 2014 06:12 PM
Last Updated : 29 May 2014 06:12 PM

ஐபிஎல்: மேக்ஸ்வெல்லுக்கு அஸ்வினின் சவால்

ஐபிஎல் தொடர் பரபரப்பான இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், பஞ்சாப் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல்லுக்கு சவால் விடுத்துள்ளார்.

நேற்றைய ஐபிஎல் எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பையை வீழ்த்திய பிறகு, தொகுப்பாளரிடம் பேசுகையில் , "அடுத்தப் போட்டியில் நான் அதிகம் ஓவர் தி விக்கெட்டில் வீசுவேன் என்பதை மேக்ஸ்வெல் எதிர்பார்க்கலாம்" என்று அஸ்வின் கூறியுள்ளார்.

ஐபிஎல். கிரிக்கெட் பிளே ஆஃப் சுற்றின் கடைசி ஆட்டம் நாளை நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இந்தத் தொடரில் இதுவரை சென்னை, பஞ்சாப் அணிகள் சந்தித்த இரு போட்டிகளிலுமே பஞ்சாப் அணி வெற்றி கண்டுள்ளது. இதில் முக்கியமாக மேக்ஸ்வெல் அசத்தலாக விளையாடி சென்னை பந்துவீச்சை சிதறடித்துள்ளார்.

நேற்றைய ஆட்டத்தில், அஸ்வின் ரவுண்ட் த விக்கெட் உத்தியை அதிகம் பயன்படுத்தி சிக்கனமாக வீசியதோடு அதிரடி வீரர் கோரி ஆண்டர்சன் விக்கெட்டை முக்கியக் கட்டத்தில் வீழ்த்தினார். மேலும் மைக் ஹஸ்ஸி மற்றும் சிம்மன்ஸ் ஆகியோரையும் தனது மாறுபடும் பந்து வீச்சினால் கட்டுப்படுத்தி வைத்திருந்தார்.

இந்த நிலையில் ஓவர் த விக்கெட்டில் நாளை வீசுவதாக அவர் மேக்ஸ்வெலுக்கு சவால் விடுத்துள்ளார்.

இதனை ஒரு டீசராகக் கூட அவர் தெரிவித்திருக்கலாம். ஆனால் குறிப்பாக கிளென் மேக்ஸ்வெலுக்கு இதனை தெரிவிக்கும் நோக்கம், கிளென் மேக்ஸ்வெல் அஸ்வின் பந்துகளை நன்றாகவே இதுவரை எதிர்கொண்டுள்ளார் என்பதால் இருக்கலாம்.

அதிரடி வீரர்கள் பலரை அஸ்வின் ஐபிஎல் கிரிக்கெட் தொடர்களில் கட்டுப்படுத்தி வீழ்த்தியுள்ளார். முக்கியப் போட்டிகள் சிலவற்றில் அவர் அதிரடி வீரர் கிறிஸ் கெய்லை வீழ்த்தியுள்ளார். அதேபோல் ஏ.பி.டிவிலியர்சுக்கும் அவர் ஓரளவு சிறப்பாகவே வீசி வந்துள்ளார்.

கிளென் மேக்ஸ்வெல் அஸ்வினை ஆடும்போது மேலேறி வந்து விளாசுவதை விட நின்ற இடத்தில் நின்றபடியே ஸ்லாக் ஸ்வீப், கட் ஷாட், புல் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் என்று ஆடி வருகிறார்.

இப்போது ஓவர் த விக்கெட்டில் வீசுவதாக அவர் கூறியதையடுத்து கிளென் மேக்ஸ்வெல் அதிகம் அஸ்வினிடமிருந்து ஆஃப் ஸ்பின் பந்துகளை எதிர்பார்க்கலாம் என்று பொருள். அல்லது அவரை ஆஃப் ஸ்பின்னிற்கு எதிர்பார்க்கச் செய்து எதிர்த் திசையில் திருப்பும் தூஸ்ராவை அவர் வீசலாம்.

எதுவாக இருந்தாலும் அஸ்வின் இவ்வாறு கூறியிருப்பது மேக்ஸ்வெல் தனது உத்தியை மாற்றவைக்கும் என்று எதிர்பார்க்கலாம். நாளை இந்தப் பலப்பரீட்சையில் யார் கை ஓங்கும் என்பது ஆர்வமூட்டக்கூடிய ஒன்று.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x