Last Updated : 07 Nov, 2020 06:30 PM

 

Published : 07 Nov 2020 06:30 PM
Last Updated : 07 Nov 2020 06:30 PM

ஆஸி. தொடர்: இரு டெஸ்ட் போட்டிகளில் கோலி விளையாடமாட்டார்? இந்திய அணியுடன் ரோஹித் சர்மா பயணம்?

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கடைசி இரு ஆட்டங்களில் விளையாடமாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு ஜனவரி முதல் வாரத்தில் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால், அந்த நேரத்தில் கோலி, மனைவியுடன் நேரத்தைச் செலவிடும் வகையில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விராட் கோலிக்குப் பதிலாக கே.எல்.ராகுல் அணியில் இணைவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய அணி வரும் 27ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியவில் 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஐபிஎல் தொடர் முடிந்தபின் துபாயிலிருந்து 12ஆம் தேதி புறப்படும் 32 பேர் கொண்ட இந்திய அணியின் வீரர்கள், ஆஸ்திரேலியாவில் 14 நாட்கள் தனிமை முகாமில் இருப்பார்கள். அதன்பின் அங்கு பயிற்சியைத் தொடங்குவார்கள்.


டிசம்பர் 17ஆம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. முதல் போட்டி அடிலெய்டில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடத்தப்படுகிறது. 2ஆம் டெஸ்ட் மெல்போர்னில் டிசம்பர் 26-30 வரை பாக்ஸிங்டே டெஸ்ட் போட்டியாக நடக்கிறது.

3ஆம் டெஸ்ட் போட்டி 2021,ஜனவரி 7-11 வரை சிட்னியிலும், கடைசி மற்றும் 4-வது டெஸ்ட் பிரிஸ்பேனில் 15-19ஆம் தேதிவரையிலும் நடக்கிறது. இதில் முதல் இரு போட்டிகளில் விளையாடும் கோலி, சிட்னி, பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடமாட்டார்.

இதுகுறித்து பிசிசிஐ அமைப்பின் முக்கிய அதிகாரி ஒருவர் கூறுகையில், “பிசிசிஐ அமைப்பைப் பொறுத்தவரை குடும்பத்துக்குத்தான் முன்னுரிமை வழங்கும். கேப்டன் விராட் கோலி , தனது மனைவி மகப்பேறுக்காக விடுப்பு எடுக்க முடிவு செய்திருப்பதால், அவர் கடைசி இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடமாட்டார். வழக்கமான நாட்களாக இருந்தால், ஒரு போட்டியில் மட்டுமே கோலி விளையாடாமல் இருப்பார்.

ஆனால், தற்போது கரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் இருப்பதால், தனிமைப்படுத்தும் காலம் இருப்பதால், முதல் இரு டெஸ்ட் போட்டிகளோடு கோலி இந்தியாவுக்குச் சென்றுவிடுவார்.

ஒரு டெஸ்ட் போட்டிக்கு மட்டும் ஆடாமல் கடைசி டெஸ்ட் போட்டிக்கு வருவதாக இருந்தால், 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அது சாத்தியமில்லாதது என்பதால், கடைசி இரு டெஸ்ட் போட்டிகளில் கோலி விளையாடமாட்டார்.

விராட் கோலிக்குப் பதிலாக கே.எல்.ராகுல் டெஸ்ட் அணியில் சேர்க்கப்படலாம். மயங்க் அகர்வால், பிரித்வி ஷா தொடக்க வீரர்களாகக் களமிறங்கலாம். ரோஹித் சர்மா உடல்நிலை சீரடைந்து குணமைடைந்தால் டெஸ்ட் தொடரில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.

ஏனென்றால் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்று ரோஹித் சர்மா விளையாடிவருவது பிசிசிஐ அமைப்புக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது. ரோஹித் சர்மாவின் உடல்நிலை குறித்து உடற்தகுதி நிபுணர்கள் நிதின் படேல், நிக் வெக் ஆகியோர் ஆய்வு செய்து தகுதியுடன் இருக்கிறார் என்று சான்று அளித்தால், நவம்பர் 11ஆம் தேதி புறப்படும் இந்திய அணியுடன் ரோஹித் சர்மாவும் உடன் செல்லலாம். அணியில் சேர்ப்பது குறித்துப் பின்னர் முடிவு செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x