Last Updated : 07 Nov, 2020 06:03 PM

 

Published : 07 Nov 2020 06:03 PM
Last Updated : 07 Nov 2020 06:03 PM

ஆஸி. தொடருக்குத் தயாராகிறார்: இந்திய அணியின் பயோ-பபுளில் இணைந்தார் விராட் கோலி

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி : கோப்புப்படம்

அபு தாபி

ஆஸ்திரேலியப் பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய அணியின் பயோ-பபுளில் (பாதுகாக்கப்பட்ட பகுதி) விராட் கோலி நேற்று இரவு இணைந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில நாட்கள் ஓய்வெடுக்கும் கோலி, அதன்பின் ஆஸ்திரேலியத் தொடருக்கான பயிற்சியைத் தொடங்குவார் எனத் தெரிகிறது.

இந்திய அணி வரும் 27 ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியவில் 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஐபிஎல் தொடர் முடிந்தபின் துபாயிலிருந்து 12-ம் தேதி புறப்படும் 32 பேர் கொண்ட இந்திய அணியின் வீரர்கள், ஆஸ்திரேலியாவில் 14 நாட்கள் தனிமை முகாமில் இருப்பார்கள். அதன்பின் அங்கு பயிற்சியைத் தொடங்குவார்கள்.

இம்மாதம் 27-ம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி விளையாடுகிறது. 3 போட்டிகள் முடிந்தபின், ஒருநாள் தொடர் நடக்கிறது.

ஆஸ்திரேலியத் தொடருக்கு அறிவிக்கப்பட்ட பெரும்பாலான இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடி வருவதால் புதிதாக எந்த வீரர்களும் இந்தியாவிலிருந்து வரத் தேவையில்லை. டெஸ்ட் தொடருக்காக தேர்வான ஹனுமா விஹாரி, புஜரா ஆகியோரும் கடந்த வாரம் துபாய் வந்து சேர்ந்த அணியில் இணைந்தனர்.

காயத்திலிருந்து குணமடைந்த மயங்க் அகர்வாலும் இந்திய அணியின் பயோ-பபுளில் இணைந்து பயிற்சி எடுத்து வருகிறார்.

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ப்ளே ஆஃப் ஆட்டத்தில் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி தோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேறியது. இந்தத் தோல்விக்குப் பின் அணி வீரர்களிடம் சிறிது நேரம் பேசிய விராட் கோலி, அதன்பின், ஆஸ்திரேலியத் தொடருக்கான இந்திய அணியின் பயோ-பபுளில் இணைந்துவிட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து இந்திய அணி வட்டாரங்கள் கூறுகையில், “ஆஸ்திரேலியத் தொடருக்கான இந்திய அணி வீரர்களுக்கான பயோ-பபுளில் நேற்று இரவு விராட் கோலி இணைந்துவிட்டார். சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான தோல்விக்குப் பின், இந்திய அணியின் குழுவில் கோலி இணைந்தார். இரு நாட்கள் ஓய்வெடுக்கும் கோலி அதன்பின் பயிற்சியைத் தொடங்குவார்” எனத் தெரிவித்தன.

ஐபிஎல் டி20 தொடரின் இறுதி ஆட்டம் வரும் 10-ம் தேதி நடக்கிறது. இந்தப் போட்டி முடிந்தபின், ஆஸ்திரேலியத் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய வீரர்கள் அனைவரும் ஆஸ்திரேலியா புறப்பட உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x