

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்ற ஆஸ்திரேலிய வீரர் வாட்ஸன் எம்.எஸ்.தோனியை புகழ்ந்து பாராட்டியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி வெளியேறியவுடன் அனைத்துவிதமான கிரிக்கெட்டிலிருந்தும் வாட்ஸன் ஓய்வு அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியானது.
ஆஸ்திரேலியாவுக்கு வாட்ஸன் சென்றபின் அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், வீடியோ மூலம் தனது ஓய்வை வாட்ஸன் அறிவித்தார்.
ஏற்கெனவே கடந்த 2016-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற வாட்ஸன் லீக் போட்டிகளில் மட்டும் பல்வேறு நாடுகளில் விளையாடி வந்தார். இந்த அறிவிப்பின் மூலம் ஐபிஎல் மட்டுமின்றி ஆஸி.யில் நடக்கும் பிக் பாஷ் லீக்கிலும் வாட்ஸனின் ஆட்டத்தைக் காண முடியாது.
இந்த நிலையில் சிஎஸ்கே சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் வாட்ஸன் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியை புகழ்ந்து பாராட்டியுள்ளார்.
அதில் வாட்ஸன் பேசியதாவது,” நான் ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் விமானத்தில் அமர்ந்திருக்கும்போது எம்.எஸ் .தோனியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படத்தை பார்க்க நேர்ந்தது. இந்திய கிரிக்கெட்டிலும், இந்திய மக்களிடமும் அவர் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார் என்று அதன் பிறகுதான் எனக்கு புரிந்தது ” எனத் தெரிவித்துள்ளார்.