Last Updated : 03 Nov, 2020 07:47 AM

 

Published : 03 Nov 2020 07:47 AM
Last Updated : 03 Nov 2020 07:47 AM

ப்ளே ஆஃப் குழப்பம் தீர்ந்தது; மும்பையுடன் டெல்லி மோதல்; ஆர்சிபிக்கு வெற்றிகரமான தோல்வி: அஸ்வின் அபாரம்

டெல்லிஅணியின் வெற்றிக்கு காரணமான ஷிகர் தவண், ரஹானே : படம் உதவி ட்வி்ட்டர்

அபு தாபி


ஷிகர் தவண், ரஹானேயின் அரைசதம், அஸ்வின், நார்ட்யேவின் அபாரமான பந்துவீச்சு ஆகியவற்றால் அபுதாபியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 55-வது லீக் ஆட்டத்தில் ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி.

முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் சேர்த்தது. 153 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 19 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வி்த்தியாசத்தில் வென்றது.

இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி 14 போட்டிகளில் 8 வெற்றி, 6 தோல்வி 16 புள்ளிகளுடன் 2-வது இடத்தைப் பிடித்து ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்தது. தொடர்ந்து 2-வது ஆண்டாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் டெல்லி அணி செல்கிறது.

முதல் ப்ளே ஆஃப் சுற்றில் மும்பை அணியுடன் மோதுகிறது டெல்லி கேபிடல்ஸ் அணி. தொடர்ந்து 4 தோல்விகளால் துவண்டு கிடந்த டெல்லி அணி நேற்று பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் சிறப்பாகச் செயல்பட்டு வெற்றி பெற்றது.

இந்த தோல்வி மூலம் ஆர்சிபி அணி 14 போட்டிகளில் 7 வெற்றி, 7 தோல்வி என 14 புள்ளிகளுடன் நிகர ரன்ரேட் அடிப்படையில் ப்ளே ஆஃப்சுற்றில் 3-வது இடத்தைப் பிடித்தது. கொல்கத்தா அணியைவிட ரன்ரேட்டில் சிறப்பாக இருந்ததால், ஆர்சிபி அணி 3-வது இடத்தைப் பிடித்தது. ஆர்சிபி அணிக்கு "வெற்றிகரமான தோல்வியாகவே" அமைந்தது.

இந்தபோட்டியில் தோல்வி அடையும் அணி தொடரிலிருந்து வெளியேறும் என்று கூறப்பட்டாலும், 17.3 ஓவர்களில் டெல்லி சேஸிங் செய்திருந்தால், ஆர்சிபி அணி வெளியேறியிருக்கும். ஆனால், 19 ஓவர்கள் வரை டெல்லி அணியை சேஸிங் செய்யவிடாமல் ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் தடுத்ததால், ஆர்சிபி அணியின் நிகர ரன்ரேட்டும் பாதிக்கப்படவில்லை, டெல்லி அணியும் பாதிக்கப்படவில்லை. ஒரு வேளை உஷ் கண்டுக்காதீங்க தருணமா என்பதும் தெரியவில்லை.

ஒருவேளே டெல்லி அணி தொடக்கத்திலிருந்தே அதிரடியாக ஆடி 17 ஓவர்களுக்குள் ஆட்டத்தை முடித்திருந்தால், கோலி படை டிக்கெட் போட்டிருக்கும்.

இதன் மூலம் ப்ளே ஆஃப் சுற்றில் வலிமையான மும்பை அணியுடன் டெல்லி மோதுகிறது. மும்பையுடனான ஆட்டத்தில் டெல்லி தோற்றாலும் எலிமினேட்டர் சுற்றில் அடுத்த ஓர் வாய்ப்புக் கிைடக்கும். ஆர்சிபி அணியுடன் மோதவுள்ளது கொல்கத்தாவா அல்லது சன்ரைசர்ஸ் அணியா என்பது இன்று தெரிந்துவிடும்.


இன்று நடக்கும் ஆட்டத்தில் மும்பை அணியை சன்ரைசர்ஸ் வீழ்த்தினால், கொல்கத்தா வெளியேறிவிடும், சன்ரைசர்ஸ் அணி 3-வது இடத்துக்கும், ஆர்சிபி 4-வது இடத்துக்கும் செல்லும். சன்ரைசர்ஸ் தோல்வி அடைந்தால், கொல்கத்தா அணி 4-வது இடத்தைப் பிடிக்கும்.


டெல்லி அணியைப் பொறுத்தவரை பந்துவீச்சாளர்கள் அமைத்துக் கொடுத்த அடித்தளத்தை பேட்ஸ்மேன்கள் நன்கு பயன்படுத்தினர். அதிலும் குறிப்பாக தமிழக வீரர் ரவிச்சந்திர அஸ்வின் வீசிய 4 ஓவர்களும் அற்புதம்.


ஆர்சிபி பேட்ஸ்மேன்களால் அஸ்வின் ஓவரில் ரன்களை அடிக்கவே முடியவில்லை. பேட்ஸ்மேன்களை நிற்கவைத்து அஸ்வின் படம் காட்டினார். அதிலும் மிகமுக்கியமாக கோலி விக்கெட்டை வீழ்த்தியதும் அஸ்வின்தான்.


இதுவரை ஐபிஎல் தொடரில் 20 இன்னிங்ஸில் கோலிக்கு எதிராக அஸ்வின் பந்துவீசியுள்ளார் ஆனால், ஒருமுறை கூட அவரின் விக்கெட்டை அஸ்வின் எடுத்தது இல்லை. முதல் முறையாக இந்தப் போட்டியில்தான் கோலி விக்கெட்டை அஸ்வின் கைப்பற்றினார்.


ஆட்டத்தின் திருப்புமுனையாக இந்தவிக்கெட் அமைந்தது என்பதை மறுப்பதற்கில்லை. 4 ஓவர்கள் வீசிய அஸ்வின் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். உண்மையில் ஆட்டநாயகன் விருது அஸ்வினுக்குத்தான் வழங்கியிருக்க வேண்டும்.


அதேசமயம் ஆன்ரிச் நோர்க்கியாவும் சிறப்பாகப் பந்துவீசினார். 4 ஓவர்கள் வீசி 33 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய நோர்க்கியாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

பேட்டிங்கில் கடந்த இரு போட்டிகளாக டக்அவுட்டில் ஆட்டமிழந்த ஷிகர் தவண்(54) மீண்டும் ஃபார்முக்கு வந்து அரைசதம் அடித்தார். அதேபோல இந்தத் தொடரில் இதுவரை சோபிக்காமல் இருந்த அனுபவ பேட்ஸ்மேன் ரஹானே (60)முதல்முறையாக அரைசதம் அடித்தார். இரு முக்கிய பேட்ஸ்மேன்களின் பாட்னர்ஷிப் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது.

பந்துவீ்ச்சாளர்கள் குறைவான ஸ்கோரில் ஆர்சிபி அணியை சுருட்டிய நிலையில், ரஹானே, தவண் ஜோடி நிலைத்து ஆடி வெற்றியை எளிதாக்கினர். இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 88 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

ஆர்சிபி அணியைப் பொறுத்தவரை முக்கியமான இதுபோன்றஆட்டத்தில் 152 ரன்களை அடித்து அந்த ஸ்கோரை டிஃபண்ட் செய்து வெல்வேன் என்று கோலி கனவு காண்பதெல்லாம் வீண். இந்த ஆட்டத்தில் நட்சத்திர ஆட்டக்காரர்கள் கோலி, டிவில்லியர்ஸ் இருவரும் எதிர்பார்த்த ஸ்கோர் செய்யாதபோதே பாதித் தோல்வி உறுதியானது. பந்துவீ்ச்சில் காயம் காரணமாக ஷைனி இல்லாதது மிகப்பெரிய குறை. மோரிஸ் ஒருவரால் நிச்சயம் டெல்லி அணியைக் கட்டுப்படுத்துவது கடினம்.

அதிலும் இரவுநேரத்தில் விழும் பனிப்பொழிவு பந்துவீச்சாளர்களை பெரும் சிரமத்தைக் கொடுக்கும். 200 ரன்களுக்கு மேல் ஸ்கோர் செய்திருந்தால், இந்தப் பந்துவீச்சாளர்களை வைத்து போராட முடியும். ஆனால், 152 ரன்களை வைத்துவெற்றி பெறுவது என்பது சாத்தயமில்லை.

அதிலும் நேற்றைய ஆட்டத்தில் வாஷிங்டன் சந்தர், சாஹல், ஷான்பாஸ் அகமது ஆகிய 3 பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்து பந்துவீசியதால்தான் ஆட்டம் 19 ஓவர்களைவரை இழுக்க முடிந்தது. இல்லாவிட்டால், தவண், ரஹானே இருவரும் பேட்டிங்கில் இருந்த ஃபார்மில் போட்டி 15 ஓவர்களில் முடிந்திருக்கும். ஆர்சிபி அணி ெவளியேறியிருக்கும்.

கடந்த 2016-ம் ஆண்டு ப்ளே ஆஃப் சுற்றுக்கு கோலி தலைமையில் ஆர்சிபிஅணி சென்றது அதன்பின் 4 ஆண்டுகள் இடைவெளியில் மீண்டும் ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்கிறது. இது மட்டுமே ஆறுதல் தரக்கூடியதாகும்.

153 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது தவண், பிரித்விஷா ஆட்டத்தைத் தொடங்கினர்.

பிரித்விஷா 9 ரன்கள் சேர்த்தநிலையில் சிராஜ் பந்துவீச்சில் போல்டாகி வழக்கம்போல் விரைவாக வெளியேறினார். 2-வது விக்கெட்டுக்கு ரஹானே, தவண் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாகத் தொடங்கி பின்னர் தங்களின் வழக்கமான ஆட்டத்துக்கு மாறினர். பவர்ப்ளேயில் ஒரு விக்ெகட் இழப்புக்கு 53 ரன்கள் சேர்த்தது டெல்லி அணி.

இருவரும் அடித்து ஆடத் தொடங்கிபின் ஸ்கோர் வேகமெடுத்தது. தவண் 37 பந்துகளிலும், ரஹானே 37 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர். சிறப்பாகஆடிய தவண் 54 ரன்கள் சேர்த்த நிலையில் அகமது பந்துவீ்்ச்சில் விக்கெட்டை இழந்தார். இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 88 ரன்கள்சேர்த்தனர். அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர் 7 ரன்னில் அகமது பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

சிறப்பாக பேட் செய்துவந்த ரஹானே 60 ரன்னில் (5பவுண்டரி, ஒருசி்க்ஸர்) சுந்தர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 107 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்த டெல்லி அணி அடுத்த 29 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்தது. ஸ்டாய்னிஷ், ரிஷப்பந்த் ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். ரிஷப்பந்த் 8 ரன்னிலும், ஸ்டாய்னிஷ் 10 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் சேர்த்து டெல்லி அணி 6 விக்கெட்டில் வென்றது.

ஆர்சிபி தரப்பில் ஷான்பாஸ் அகமது 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முன்னதாக டாஸ்வென்ற டெல்லி அணி சேஸிங் செய்தது. பிலிப், படிக்கல் ஆட்டத்தைத் தொடங்கினர். ரபாடா, நோர்க்கியா, அஸ்வின் என மும்முனை தாக்குதல் இருந்ததால் ஆர்சிபி பேட்ஸ்மேன்கள் தொடக்கத்தில் ரன்சேர்க்க திணறினர்.

ரபாடா வீசிய 5-வது ஓவரில் பிலிப்12ரன்னில் பிரித்விஷாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்துவந்த கோலி, படிக்கலுடன் சேர்ந்தார். ஆனால், அஸ்வினின் பந்துவீ்ச்சுக்கு திணறிய கோலி ரன்அடிக்க சிரமப்பட்டார். கோலி 29 ரன்கள் சேர்த்த நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் ஸ்டாய்னிஷிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.


அதன்பின் வந்த பேட்ஸ்மேன்கள் எதிர்பார்த்த அளவுக்கு ரன்கள் சேர்்க்கவில்லை. படிக்கல் அரைசதம் அடித்து 50 ரன்னில் நோர்க்கியா பந்தில் போல்டாகி வெளியேறினார். இந்தத் தொடரில் படிக்கல் அடிக்கும் 5-வது அரைசதமாகும்.


அறிமுக ஐபிஎல் தொடரில் களமிறங்கி இதுவரை அதிகமான அரைசதம் அடித்த ஷிகர் தவண், ஸ்ரேயாஸ் அய்யர் சாதனைகளை படிக்கல் முறியடித்துவி்ட்டார். அதுமட்டுமல்லாமல் இந்திய அணிக்கு தேர்வாகாமல் 472 ரன்கள் குவித்த முதல் வீரர் படிக்கல் எனும் பெருமையைப் பெற்றார்.


16-வது ஓவரில் படிக்கல்லை வீழ்த்திய நோர்க்கியா, அதே ஓவரில் மோரிஸின் விக்கெட்டையும் வீழ்த்தினார். டிவில்லியர்ஸ் 35 ரன்னில் ரன் அவுட் ஆகினார்.துபே 17 ரன்னில் ரபாடா பந்துவீச்சில் போல்டாகினார்.


உடானா 4 ரன்னில் நோர்க்கியா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அகமது ஒருரன்னிலும், சந்தர் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் சேர்த்தது. டெல்லி அணித் தரப்பில் நோர்க்கியா 3 விக்கெட்டுகளையும்,ரபாடா 2 விக்ெகட்டுகளையும் வீழ்த்தினர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x