Last Updated : 02 Nov, 2020 07:54 PM

 

Published : 02 Nov 2020 07:54 PM
Last Updated : 02 Nov 2020 07:54 PM

உள்நாட்டுப் போட்டியில் விளையாடுங்கள்: 'பயிற்சி இல்லாமல் ஐபிஎல் தொடரில் விளையாடுவது சாத்தியமில்லை' - தோனிக்கு கபில் தேவ் அறிவுரை 

எவ்விதமான பயிற்சியும் இன்றி ஒவ்வொரு ஐபிஎல் தொடரில் மட்டும் தோனி விளையாட முடியும் என்று முடிவு செய்வது சாத்தியமில்லாத ஒன்று என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பைப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. அந்தப் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதை தோனி தவிர்த்து வந்தார். அதன்பின் நடந்த பல்வேறு தொடர்களிலும் தோனி விளையாட விருப்பமில்லை எனத் தெரிவித்ததாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுக்குப் பின், ஐபிஎல் தொடங்க இருக்கும் நிலையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வை அறிவித்தார்.

கடந்த ஒன்றரை ஆண்டாக எந்தவிதமான போட்டிகளிலும் தோனி பங்கேற்காமல், பேட்டிங் பயிற்சி எடுக்காமல் இருந்தார். ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்பு பயிற்சியைத் தொடங்கினால், அதிலும் கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அந்தப் பயிற்சியும் பாதியிலேயே முடிந்தது.

ஆனால், இந்தக் குறுகிய கால பயிற்சியே தனக்குப் போதுமானது என்று எண்ணிய தோனி, அதீதமான நம்பிக்கையில் ஐபிஎல் போட்டியில் களமிறங்கினார். ஆனால், ஒரு போட்டியில் கூட தோனியால் நினைத்த ஷாட்களை ஆட முடியவில்லை, நிலைத்து நின்று பேட் செய்ய முடியவில்லை

ஒரு கேப்டனாக கடந்த 14 போட்டிகளில் சிஎஸ்கே அணிக்குக் குறிப்பிடத்தக்க அளவு பேட்டிங் மூலம் எந்தப் பங்களிப்பும் தோனி செய்யவில்லை என்பதுதான் நிதர்சனம். கிரிக்கெட்டில் கிரேட் ஃபினிஷர் என்று அறியப்பட்ட தோனி, இந்த சீசன் ஐபிஎல் தொடரில் பேட்டிங் செய்யவும், போட்டியை ஃபினிஷ் செய்யவும் எவ்வாறு சிரமப்பட்டார் என்பது ரசிகர்களுக்கே வெளிச்சம்.

  • இதுவரை 13 ஐபிஎல் சீசன்களில் தோனி ஒரு தொடரில் கூட அரை சதம் அடிக்காமல் இருந்ததில்லை. கடந்த 2008-ம் ஆண்டிலிருந்து 2019-ம் ஆண்டுவரை தோனியின் ரன் குவிப்பில் அரை சதம் இல்லாமல் இருந்தது இல்லை.
  • ஆனால், இந்த சீசனில் இதுவரை 14 போட்டிகளில் விளையாடிய தோனி, ஒட்டுமொத்தமாக 200 ரன்கள்தான் சேர்த்துள்ளார். அதிகபட்சம் 47 ரன்கள்தான். இன்னும் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை.
  • அதுமட்டுமல்லாமல் தோனியின் மிகக்குறைவான ஒட்டுமொத்த ஸ்கோரும் இதுவாகத்தான் இருக்கும். இதைவிட தோனியின் மோசமான பேட்டிங் ஃபார்மை விளக்கும் புள்ளிவிவரம் தேவையில்லை.

இதற்கிடையே பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்துக்கு முன் டாஸ் போடும் நிகழ்வில் பேசிய தோனி, “சிஎஸ்கே அணிக்கு இது எனக்குக் கடைசி ஆட்டம் அல்ல. அடுத்த ஆண்டும் விளையாடுவேன்” எனத் தெரிவித்தார். போட்டி முடிந்தபின் பேசிய தோனி, “அணியை அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைக்கும் நேரம் வந்துவிட்டது. முழுமையாக அணியை மாற்றுவது அவசியம்” எனத் தெரிவித்தார்.

ஆதலால், தோனி ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாட இருப்பதை உறுதி செய்துள்ளார். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் அளித்த பேட்டியில் தோனிக்கு அறிவுரை கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது:

"தோனி ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாட முடிவெடுத்துவிட்டால் ஐபிஎல் தொடருக்கு மட்டும் வந்து விளையாடிச் செல்வது முடியாது. அதிலும் பயிற்சியின்றி ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடுவது சாத்தியமில்லை.

ஐபிஎல் தொடரில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் விளையாடப் போகிறேன் என தோனி முடிவு செய்துவிட்டால், உள்நாட்டில் நடக்கும் போட்டிகளில் தோனி அதிகமாக விளையாடினால்தான் ஐபிஎல் தொடரில் விளையாட முடியும். இல்லாவிட்டால் அவரால் ஐபிஎல் தொடரில் விளையாடுவது சாத்தியமில்லை.

தோனியின் வயதைப் பற்றிப் பேசுவது சரியல்ல. அவரின் வயதையும் மீறி தோனி சிறப்பாக விளையாடுகிறார், அதற்கு ஏற்றாற்போல் உடம்பையும் கட்டுக்கோப்பாக வைத்துள்ளார்.

ஓராண்டில் 10 மாதங்கள் கிரிக்கெட் விளையாடாமல் திடீரென ஐபிஎல் போட்டியில் விளையாடினால் என்ன நடக்கும் என்பதைப் பார்க்க முடிந்தது

நீங்கள் என்னதான் கிரிக்கெட் விளையாடிப் பயிற்சி எடுத்தாலும் ஒவ்வொரு சீசனிலும் வெற்றி, தோல்விகள் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். கிறிஸ் கெயிலுக்குக் கூட ஏற்ற இறக்கம் இருக்கும்.

ஆதலால் ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாட தோனி முடிவு எடுத்தால், உள்நாட்டுப் போட்டிகளில் கவனம் செலுத்தலாம். முதல்தரப் போட்டிகள், டி20 போட்டிகளில் விளையாடலாம்.

சிலர் என்னதான் சாதித்திருந்தாலும், அவர்களின் ஃபார்ம் பாதிக்கப்படும்போது அது பாதிக்கும். சவாலாக மாறும். அதிலிருந்து எவ்வாறு வெளியேறுகிறார் என்பதில்தான் சவால் இருக்கிறது".

இவ்வாறு கபில் தேவ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x