Published : 02 Nov 2020 05:01 PM
Last Updated : 02 Nov 2020 05:01 PM

நான் ஓய்வு பெறுகிறேன்: பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவின் ட்விட்டர் ட்விஸ்ட்டால் ரசிகர்கள் அதிர்ச்சி: உண்மையில் நடந்தது என்ன?

இந்திய பாட்மிண்டன் விளையாட்டின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, "நான் ஓய்வு பெறுகிறேன்" என்று ட்விட்டரில் அறிவித்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

25 வயதாகும் பி.வி. சிந்து மிகப்பெரிய கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

“நான் என் உணர்வுகளைச் சுத்தமாக்குவது பற்றி யோசித்து வருகிறேன். அதோடு போராடி வருகிறேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அனைத்தையும் முடித்துவிட்டேன் என்று சொல்லத்தான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நீங்கள் அதிர்ச்சியடைந்தாலும், குழப்பமடைந்தாலும் அது புரிந்துக்கொள்ளக் கூடியதுதான். நீங்கள் கடிதத்தைப் படித்து முடிக்கும்போது, என்னுடைய கண்ணோட்டத்தை ஆதரிப்பீர்கள் என நம்புகிறேன்.

இந்தக் கரோனா தொற்றுநோய் என் கண்களைத் திறந்துவிட்டுள்ளது. வலிமையான எதிரணி வீரர்களுக்கு எதிராக இறுதி ஷாட் வரை போராட என்னால் கடுமையாகப் பயிற்சி செய்ய முடியும். இதற்கு முன்பு அப்படித்தான் பயிற்சி செய்தேன், மீண்டும் செய்ய முடியும். என்னால் டென்மார்க் தொடரிலும் கரோனா காரணமாகப் பங்கேற்க முடியவில்லை. அதுதான் கடைசி.

ஆனால், உலகம் முழுவதையும் சிக்கலில் வைத்துள்ள கண்ணுக்குத் தெரியாத வைரஸை நான் எவ்வாறு தோற்கடிப்பேன்? நான் வீட்டில் முடங்கிப் பல மாதங்களாகிவிட்டன. நாம் வீட்டை விட்டு வெளியேறும் ஒவ்வொரு முறையும் நம்மை நாமே கேள்விக்குள்ளாக்குகிறோம்.

இதயத்தை நொறுங்கச் செய்யும் ஏராளமான கதைகளை இணையதளத்தில் படித்தபின் என்னைப் பற்றியும், நாம் வாழும் இந்த உலகத்தைப் பற்றியும் நிறைய கேள்விகள் எழுகின்றன.

இன்று நான் இந்த மன அமைதியற்ற நிலையிலிருந்து ஓய்வு பெறுகிறேன். எதிர்மறை எண்ணங்களில் இருந்து ஓய்வு பெறுகிறேன். அச்சத்திலிருந்து ஓய்வு பெறுகிறேன். நிலையற்ற தன்மையிலிருந்து ஓய்வு பெறுகிறேன். சுயக் கட்டுப்பாடின்மையிலிருந்து ஓய்வு பெறுகிறேன். நான் அசுத்தமான பழக்கவழக்கங்களில் இருந்து ஓய்வு பெறப் போகிறேன்.

நான் உங்களுக்கு சிறிய ஹார்ட் அட்டாக் கொடுத்திருப்பேன் என நினைக்கிறேன். எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத நடவடிக்கைகள் தேவை. நீங்கள் அமர்ந்து ஆழ்ந்து யோசித்தால், குகையின் இறுதியில் ஒளி தெரிவதைக் காணலாம்.

ஆம். டென்மார்க் ஓபன் நடக்கவில்லை. அதற்காகப் பயிற்சி எடுப்பதை நிறுத்தவில்லை. வாழ்க்கை உங்களிடம் வரும்போது, இரு மடங்கு கடினமாக எழ வேண்டும். ஆதலால், அடுத்துவரும் ஆசியப் கோப்பையில் விளையாடுவேன். என்னுடைய போராட்டக் குணத்தை விட்டுவிடமாட்டேன். அச்சமில்லாமல் போராடுவதை விடமாட்டேன். நமக்குப் பாதுகாப்பான உலகம் இருக்கும் வரை அவ்வாறு தொடரந்து செய்வோம்”

இவ்வாறு பி.வி.சிந்து தெரிவித்துள்ளார்.

இந்தக் கடிதம் மூலம் கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மக்கள் சுத்தமாகவும், சுகாதாரத்தைக் கடைப்பிடிக்கவும் சிந்து வலியுறுத்தியுள்ளார்.

ஆனால், சிந்து ட்விட்டரில், 'ஐ ரிட்டயர்' என்று ஆங்கிலத்தில் பெரிதாக எழுதி வெளியிட்டதால், அதைப் படித்த ரசிகர்கள் 25 வயதில் சிந்து ஓய்வு அறிவித்துவிட்டாரா என்று அதிர்ச்சி அடைந்துவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x