Last Updated : 31 Oct, 2020 04:01 PM

 

Published : 31 Oct 2020 04:01 PM
Last Updated : 31 Oct 2020 04:01 PM

டெல்லி கேபிடல்ஸ் அணி ப்ளே ஆஃப் செல்லுமா என்பது சந்தேகம்தான்: குமார் சங்ககாரா அச்சம்

ஐபிஎல் டி20 தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லுமா எனச் சந்தேகம் வரும் அளவுக்கு கடந்த சில போட்டிகளாக அந்த அணியின் செயல்பாடு உள்ளது என்று இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்ககாரா தெரிவித்தார்.

ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையில் செயல்பட்டு வரும் டெல்லி கேபிடல்ஸ் அணி தொடக்கத்திலிருந்தே சிறப்பாகச் செயல்பட்டு வெற்றிகளைப் பெற்று வந்தது. மும்பை அணிக்கும், டெல்லி அணிக்கும் இடையே முதலிடத்தைப் பிடிப்பதில் தொடர்ந்து போட்டி ஏற்பட்டதால், இரு அணிகளும் மாறி மாறி முதலிடத்தில் இருந்து வந்தன.

ஆனால், கடந்த 3 போட்டிகளாக தொடர் தோல்விகளை டெல்லி அணி சந்தித்து வருகிறது. அதிலும் குறிப்பாக டெல்லி அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த், ரஹானே, ஸ்டாய்னிஷ், பிரித்வி ஷா போன்றோர் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர்.

இதில் ஷிகர் தவண் இரு போட்டிகளில் சதம் அடித்தாலும் அடுத்த போட்டியில் விரைவாக விக்கெட்டை இழந்தார். இதனால் டெல்லி அணி 14 புள்ளிகளுடன் இருக்கும் நிலையில் ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்ய அடுத்த ஒரு வெற்றிக்காகப் போராடி வருகிறது. இன்னும் இரு போட்டிகள் இருக்கும் நிலையில், ஒரு வெற்றி கட்டாயமாகும்.

இன்று வலிமையான மும்பை அணியுடன் மோதுகிறது டெல்லி கேபிடல்ஸ் அணி. டாப் ஆர்டர் சொதப்பி வருவதால் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் டெல்லி அணி செல்லுமா என்று இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்ககாரா கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து குமார் சங்ககாரா, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

''டெல்லி கேபிடல்ஸ் அணியைப் பற்றி எனக்குத் திடீரென கவலை ஏற்பட்டுவிட்டது. கடந்த சில போட்டிகளாக அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எதிர்பார்த்த அளவுக்கு பேட் செய்யவில்லை. விரைவாக விக்கெட்டுகளை இழந்துவிட்டனர்.

டெல்லி அணியின் பலமே டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்தான். அவர்களை நம்பியே அணி இருக்கிறது. அவர்களைத் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் விரைவாக ரன்களைச் சேர்க்கும் திறமை படைத்தவர்கள் இல்லை. இப்படியே டெல்லி அணியின் ஆட்டம் தொடர்ந்தால் ப்ளே ஆஃப் சுற்றில் 4-வது இடத்தைப் பெறுவதும் கடினம்தான்.

மும்பை அணியைப் பொறுத்தவரை ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டது. ஆர்சிபி அணிகூட ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்துவிடுவார்கள். 3 மற்றும் 4-வது இடத்துக்கான போட்டியில் பஞ்சாப் அணி கடுமையான போட்டியை அளிப்பார்கள் என நினைக்கிறேன்.

ஆனால், 4-வது இடத்தைப் பற்றி என்னால் கணிக்க முடியாது. டெல்லி அணி சிறப்பாகச் செயல்படாவிட்டால் 4-வது இடத்துக்கு வருவதே கடினம்தான். ஒவ்வொரு போட்டியில் தோற்கும் போதும் நிகர ரன் ரேட் குறைந்துகொண்டே வரும். இது பெரிய பாதிப்பை டெல்லி அணிக்கு ஏற்படுத்தும்”.

இவ்வாறு சங்ககாரா தெரிவித்தார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கணிப்பின்படி, “ப்ளே ஆஃப் சுற்றுக்கு மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், ஆர்சிபி அணிகள் தகுதி பெறும். 4-வது அணியை என்னால் கூறமுடியாது. பஞ்சாப், ராஜஸ்தான் இடையே கடும் போட்டி இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x