Published : 29 Oct 2020 12:56 PM
Last Updated : 29 Oct 2020 12:56 PM

‘நாங்கள் அடித்ததெல்லாம் பீல்டர் கைக்குச் சென்றது’; சூர்யகுமார் யாதவ்வை ஸ்லெட்ஜ் செய்யப் பார்த்தாரா கோலி- ஐபிஎல் துளிகள்

சூரிய குமார் யாதவ்வை முறைத்துப் பார்க்கும் விராட் கோலி.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோலிக்கு கேப்டனாகவும் வீரராகவும் கடும் ஏமாற்றமே எஞ்சியது. 11 ஓவர்களில் 95/1 என்ற நிலையிலிருந்து விராட் கோலி 14 பந்துகளில் ஒரு பவுண்டரியும் இல்லாமல் பும்ராவின் ஷார்ட் பிட்ச் எகிறு பந்துக்கு கொடியேற்றி ஆட்டமிழந்தார்.

ஏ.பி.டிவில்லியர்ஸ் பொலார்டின் புல்டாஸை கேட்ச் கொடுத்து 15 ரன்களில் வெளியேறினார். ஷிவம் துபே, படிக்காலை பும்ரா ஒரே ஓவரில் மெய்டனுடன் வெளியேற்ற கடைசி 28 பந்துகளில் ஆர்சிபி 33 ரன்களையே எடுக்க முடிந்து 164-ல் முடிந்தது.

இதனை சூர்யகுமார் யாதவ் 43 பந்துகளில் 79 ரன்கள் என்று அபாரமாக ஆடி ஊதித்தள்ளினார்.

இது தொடர்பாக விராட் கோலி ஆட்டம் முடிந்து கூறும்போது, “பேட்டிங்கில் ஒரு விசித்திரக் கட்டம் வந்தது, நாங்கள் அடித்ததெல்லாம் பீல்டர் கைகளுக்கே சென்றது (கைக்கு நேராக அடித்து விட்டு ஏதோ பந்து தானாக பீல்டருக்குச் சென்றது போல் கூறுகிறார் கோலி), மும்பை நன்றாக வீசி எங்களை 20 ரன்கள் குறைவாக எடுக்கச் செய்தனர்.

ஆனாலும் ஃபைட் கொடுத்தோம். ஸ்விங் ஆகும் என்று நினைத்து மோரிஸ், டேல் ஸ்டெய்னை வீசச் செய்தோம். பிறகு வாஷிங்டன் சுந்தரை அழைத்தேன். ஆட்டம் டைட் ஆன ஆட்டம் தான், ஆனால் ஒரு சில கட்டத்தில் அவர்கள் நன்றாக ஆடினார்கள்” என்றார்.

சூரிய குமார் யாதவ்வை ஸ்லெட்ஜ் செய்ய முயன்றதாக நெட்டிசன்கள் சாடல்:

மும்பை இந்தியன்ஸ் ஸ்கோர் 99/3 என்று இருந்த போது சாஹல் வீசிய பந்தை சூரியகுமார் யாதவ் கட் செய்ய விராட் கோலி அதனை டைவ் அடித்து பீல்டிங் செய்தார், அந்த ஓவரும் (13 ரன்கள்) முடிவடைந்தது, பந்தை எடுத்து வந்த விராட் கோலி சூரியகுமார் யாதவ் அருகே வந்து அவரை நேராக முறைத்துப் பார்த்தார், ஸ்லெட்ஜ் செய்வது போல் அவரது செய்கை அறிகுறி காட்டியது, ஆனால் அவர் எதுவும் பேசவில்லை, யாதவ்வும் நகர்ந்து போய் எதிர்முனை பேட்ஸ்மெனுடன் பேசச் சென்று விட்டார், ஆனால் கோலி பார்த்த பார்வை ரசிகர்களின், நெட்டிசன்களின் பார்வையிலிருந்து தப்பவில்லை.

இதனையடுதது இந்த ஓவர் வீடியோவை வெளியிட்டு, ‘ஒரு தேசிய அணியின் கேப்டன், இதுவரை இந்திய அணிக்கு ஆடாத இளம் வீரரைப் போய் ஸ்லெட்ஜ் செய்யப்பார்க்கிறார், கோலியின் தகுதிக்கு என்ன கிடைத்ததோ அது கிடைத்தது (தோல்வி) என்ற தொனியில் பலரும் கோலியை விமர்சித்து வருகின்றனர்.

அதே வேளையில் அமைதியாக இருந்து காரியத்தை முடித்த சூரியகுமார் யாதவ்வுக்கு நெட்டிசன்கள் பாராட்டும் குவிந்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x