விளையாட்டாய் சில கதைகள்: கவாஸ்கரும் காது மடல் ஓட்டையும்

விளையாட்டாய் சில கதைகள்: கவாஸ்கரும் காது மடல் ஓட்டையும்
Updated on
1 min read

மும்பையைச் சேர்ந்த மீனாள் என்ற பெண்ணுக்கு 1949-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி அழகான ஆண் குழந்தை பிறந்தது. அன்றைய தினம் குழந்தையைப் பார்க்க வந்திருந்த அவரது உறவினரான நானா காகாவின் கண்களை, குழந்தையின் காது மடலில் இயற்கையாக அமைந்திருந்த ஒரு சிறிய ஓட்டை ஈர்த்தது. அதை விசேஷமானதாக நினைத்தார் நானா காகா.

அடுத்த நாள் காலையும் குழந்தையைப் பார்க்க வந்த நானா காகாவின் மடியில் குழந்தையை படுக்க வைத்தனர். ஆசையாய் குழந்தையின் முகத்தைப் பார்த்தவர் திடுக்கிட்டார். முந்தைய தினம் குழந்தையின் காது மடலில், தான் பார்த்த ஓட்டை இல்லாததே இதற்கு காரணம். எங்கோ தப்பு நடந்திருப்பதாக அவருக்குத் தோன்றியது. “மீனாளுக்கு பிறந்த குழந்தை இது இல்லை. அவளுடைய குழந்தையின் காது மடலில் ஓட்டை இருந்தது. ஆனால் இந்த குழந்தையின் காது மடலில் ஓட்டை இல்லை. குழந்தை மாறிவிட்டது” என்று ஆவேசமாக கத்தத் தொடங்கினார்.

இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் முந்தைய தினம் பிறந்த குழந்தைகளை சோதித்துப் பார்த்ததில், காது மடலில் ஓட்டை உள்ள குழந்தை ஒன்று மீனவப் பெண்ணிடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குளிப்பாட்டுவதற்காக குழந்தையை எடுத்துச் சென்ற சமயத்தில் குழந்தை மாறியது தெரியவந்தது. அப்படி காது மடலில் ஓட்டையுடன் பிறந்த குழந்தைதான் பின்னாளில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சக்ரவர்த்தியாகத் திகழ்ந்த சுனில் கவாஸ்கர். தன்னுடைய வாழ்க்கை வரலாறான ‘சன்னி டேஸ்’ என்ற புத்தகத்தில் இதைப்பற்றி குறிப்பிட்டுள்ள சுனில் கவாஸ்கர், “அன்றைய தினம் என் உறவினர் மட்டும் காது மடலில் உள்ள ஓட்டையை கவனிக்காமல் இருந்தால், என் விதியே மாறியிருக்கும். இன்று நான் ஒரு மீனவராகி கடலில் மீன் பிடித்துக் கொண்டிருப்பேன்” என்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in