Last Updated : 27 Oct, 2020 02:08 PM

 

Published : 27 Oct 2020 02:08 PM
Last Updated : 27 Oct 2020 02:08 PM

'என் அப்பாவின் ஆசையை நிறைவேற்றினேன்' - பஞ்சாப் வீரர் மன்தீப் சிங் உருக்கம்

ஒவ்வொரு போட்டியிலும் ஆட்டமிழக்காமல் இருந்து, அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று என் அப்பா என்னிடம் அடிக்கடி கூறினார். அவரின் ஆசையைத்தான் இந்தப் போட்டியில் நான் நிறைவேற்றினேன் என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர் மன்தீப் சிங் தெரிவித்தார்.

ஷார்ஜாவில் நேற்று ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீழ்த்தியது.

இந்தப் போட்டியின் வெற்றிக்கு தொடக்க ஆட்டக்காரர் மன்தீப் சிங் (66), கெயில் (51) ஆகியோரின் ஆட்டம் முக்கியக் காரணம். இதில் மன்தீப் சிங் 66 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்குக் கொண்டு சென்றார்.

கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் மன்தீப் சிங்கின் தந்தை ஜலந்தரில் காலமானார். ஆனால் பயோ-பபுளில் இருப்பதால், தந்தையின் இறுதிச்சடங்கிற்கு மன்தீப் செல்லாமல், காணொலி மூலம் பங்கேற்றார்.

இருப்பினும் தந்தை இறந்த நாளில்கூட சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மன்தீப் விளையாடினார். இந்தப் போட்டியில் அரை சதம் அடித்த நிலையில் வானத்தை நோக்கிப் பார்த்து தனது தந்தைக்கு கண்ணீருடன் மன்தீப் சிங் அஞ்சலி செலுத்தினார்.

இந்தப் போட்டியில் கிடைத்த வெற்றி குறித்து மன்தீப் சிங் அளித்த பேட்டியில் கூறியதாவது:

''ஒவ்வொரு போட்டியிலும் ஆட்டமிழக்காமல் இருந்து, அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று என் அப்பா என்னிடம் அடிக்கடி கூறினார். அவரின் ஆசையைத்தான் இந்தப் போட்டியில் நான் நிறைவேற்றினேன். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றேன்

நான் இந்தப் போட்டி தொடங்கும் முன் ராகுலிடம் சென்று, என் விருப்பப்படி விளையாட விடுங்கள். கூடுதலாக பந்துகள் எடுத்துக்கொள்வேன். ஆனால், போட்டியில் வெற்றியைத் தேடித் தந்துவிடுவேன் என்று கூறினேன்.

இந்தப் போட்டியில் இறுதிவரை நான் ஆட்டமிழக்காமல் இருந்து வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தேன். என் தந்தை இருந்திருந்தால் மிகவும் மகிழச்சி அடைந்திருப்பார்.

கிறிஸ் கெயில் களத்துக்கு வந்தபின் வெற்றி பெறுவது என்பது எளிதானது. நீங்கள் ஒருபோதும் தொய்வு பெறக்கூடாது என்று அவரிடம் நான் தெரிவித்தேன். கெயில் ஒருபோதும் பேட்டிங்கில் தடுமாறியதாக எனக்குத் தெரியவில்லை. எனக்குத் தெரிந்து டி20 போட்டியில் மிகச்சிறந்த வீரர் கெயிலாகத்தான் இருக்க முடியும்.

நான் மிகவும் அதிர்ஷ்டக்காரன். கடந்த 2010 ஆம் ஆண்டிலிருந்து ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறேன். கெயில், டிவில்லியர்ஸ், கில்கிறிஸ்ட், விராட் கோலி எனப் பல வீரர்களுடன் விளையாடிவிட்டேன். கடந்த 2010-ல் கொல்கத்தா அணியில் கெயிலுடன் விளையாடத் தொடங்கினேன்.

அவர் நண்பராக நான் அறிமுகமானது எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டம். கெயில் மிகவும் பணிவானவர், நட்புடன் பழகக்கூடியவர்.

நாங்கள் தொடக்கத்தில் சிறிது அதிர்ஷ்டம் இல்லாதவர்களாக இருந்ததால்தான் சில போட்டிகளில் தோல்வி அடைந்தோம். ஆனால், தொடக்கத்திலிருந்தே சிறந்த கிரிக்கெட்டைத்தான் வெளிப்படுத்தினோம். ஆனால், வெற்றிக்கு அருகே கொண்டு சென்று முடிக்க முடியவில்லை.

கடந்த 5 போட்டிகளாக நாங்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் விளையாடுகிறோம். ஒவ்வொரு போட்டியிலும் எவ்வாறு போராடுகிறோம் என்பதுதான் முக்கியம். இப்போது எங்களுக்கு சிறிய அதிர்ஷ்டம் வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். வெற்றியால் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்''.

இவ்வாறு மன்தீப் சிங் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x