Published : 27 Oct 2020 11:02 AM
Last Updated : 27 Oct 2020 11:02 AM

ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு விதிமுறையா? சூர்யகுமார் யாதவின் சாதனையைப் பாருங்கள்: பிசிசிஐ மீது ஹர்பஜன் சிங் சாடல்

மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ் : கோப்புப்படம்

புதுடெல்லி

ஆஸ்திரேலியத் தொடருக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்று பிசிசிஐக்கு இந்திய அணி வீரர் ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய அணி 2020 நவம்பர் முதல் 2021 ஜனவரி வரை 3 மாத காலம் ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. நவம்பர் 27 முதல் 2021 ஜனவரி 19-ம் தேதி வரை இந்திய அணி ஆஸி.யில் பயணம் மேற்கொள்கிறது.

இந்தத் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் டெஸ்ட் அணியில் ஆர்சிபி அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். டி20 அணியில் கொல்கத்தா அணியின் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி சேர்க்கப்பட்டார்.

ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிவரும் சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்படவில்லை. அவர் இதுவரை பல்வேறு ஐபிஎல் தொடர்களிலும், ரஞ்சிக் கோப்பை எனப் பலவற்றிலும் சிறப்பாக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். ஆனால், ஏனோ இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்படவில்லை. நடப்பு ஐபிஎல் தொடரிலும் இதுவரை 10 இன்னிங்ஸில் விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ் 283 ரன்கள் சேர்த்துள்ளார்.

மும்பையைச் சேர்ந்த சூர்யகுமார் யாதவ் இதுவரை 77 முதல் தரப் போட்டிகளில் விளையாடி 5,326 ரன்களைச் சேர்த்துள்ளார். இதில்14 சதம், 26 அரை சதம். 160 டி20 போட்டிகளில் விளையாடி 3,295 ரன்கள் சேர்த்துள்ள அவர், 17 அரை சதங்கள் அடித்துள்ளார்.

இந்திய அணியின் ஒருநாள், டி20 போட்டிக்கான அணியில் சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்படாதது அவருக்கு இழைக்கபட்ட அநீதி என்று கூறி சமூக வலைதளத்தில் ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

இதுகுறித்து இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “சூர்யகுமார் யாதவை இந்திய அணியில் தேர்வு செய்யாததற்கு என்ன காரணம் எனத் தெரியவில்லை. இந்திய அணிக்கு அவசியம் தேர்வு செய்யப்பட வேண்டியவர் சூர்யகுமார் யாதவ். ஒவ்வொரு ஐபிஎல் மற்றும் ரஞ்சிக் கோப்பை சீசனிலும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார்.

ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு விதமான விதிமுறை என நினைக்கிறேன். பிசிசிஐ தேர்வுக் குழுவினர் தயவுசெய்து சூர்யகுமார் யாதவின் சாதனைகளைப் பார்க்குமாறு வேண்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x