Last Updated : 27 Oct, 2020 10:24 AM

 

Published : 27 Oct 2020 10:24 AM
Last Updated : 27 Oct 2020 10:24 AM

தந்தையை இழந்த நிலையிலும் மன்தீப் சிங் விளையாடிய விதம் அனைவரையும் நெகிழ வைத்தது: கே.எல்.ராகுல் புகழாரம்

பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல்: படம் உதவி | ட்விட்டர்.

ஷார்ஜா

தந்தையை இழந்த நிலையிலும் மன்தீப் சிங் விளையாடிய விதம், இந்தப் போட்டியில் கடைசிவரை இருந்து அணியை வெற்றிபெற வைத்தது எங்களை நெகிழ்ச்சியடைய வைக்கிறது என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் புகழாரம் சூட்டினார்.

ஷார்ஜாவில் நேற்று ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீழ்த்தியது. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் சேர்த்தது. 150 ரன்கள் எனும் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 7 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியின் வெற்றிக்கு தொடக்க ஆட்டக்காரர் மன்தீப் சிங் (66), கெயில் (51) ஆகியோரின் ஆட்டம் முக்கியக் காரணம். இதில் மன்தீப் சிங் 66 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்குக் கொண்டு சென்றார்.

கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் மன்தீப் சிங்கின் தந்தை ஜலந்தரில் காலமானார். ஆனால் பயோ-பபுளில் இருப்பதால், தந்தையின் இறுதிச்சடங்கிற்கு மன்தீப் செல்லாமல், காணொலி மூலம் பங்கேற்றார்.

இருப்பினும் தந்தை இறந்த நாளில்கூட சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மன்தீப் விளையாடினார். இந்தப் போட்டியில் அரை சதம் அடித்த நிலையில் வானத்தை நோக்கிப் பார்த்து தனது தந்தைக்கு கண்ணீருடன் மன்தீப் சிங் அஞ்சலி செலுத்தினார்.

போட்டி முடிந்தபின் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் அளித்த பேட்டியில் கூறியதாவது:

''நானும், அணி முழுமையும் வெற்றியால் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஒட்டுமொத்தமாகத் திட்டமிட்டு களமிறங்கி, நேர்மறையான எண்ணத்துடன் விளையாடி, அனைத்தையும் எங்களுக்குச் சாதகமாக மாற்றியுள்ளோம். அணி ஒவ்வொரு இக்கட்டான நேரத்தில் சிக்கும்போதும், அணியில் வேறுபட்ட வீரர்கள் பொறுப்பேற்று வெற்றிக்கு அழைத்துச் செல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது.

அனைத்தும் ஒன்றாக சேர்ந்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னும் சில போட்டிகளை வெல்ல வேண்டும் என்பதை நினைக்கும்போது கவலையாக இருக்கிறது.

நாம் பயோ-பபுளில் இருக்கும்போது நம்முடைய அன்புக்குரியவர்கள் இல்லாமல் போகும்போது, வேதனைக்குரியது. நம்மால் அந்தச் சடங்கில் பங்கேற்கவும் முடியாது. அந்தத் தருணத்தைத்தான் மன்தீப் சிங் அனுபவித்தார். தனது தந்தையின் மறைவுச் செய்தி கேட்டும் விளையாடினார். இன்று அவர் விளையாடிய விதம் என்னையும், அனைவரையும் நெகிழ வைத்துவிட்டது.

அனில் கும்ப்ளே பயிற்சியாளராக இருக்கும்போது, அணியில் இரு சுழற்பந்துவீச்சாளர்கள் வைத்து விளையாடுவதில் வியப்பு ஏதும் இல்லை. எப்போதும் சுழற்பந்துவீச்சாளர்களை வைத்துக்கொள்ள அவர் வலியுறுத்துவார். அணிக்காக கும்ப்ளே மிகக் கடுமையாக உழைத்து வருகிறார். எங்கள் வெற்றியின் பெரும் பங்கு எங்களுக்குப் பின்னால் இருந்து பணியாற்றும் பயிற்சியாளர்களையே சாரும்.

கெயில் தொடக்கத்தில் களமிறங்காதது கடினமான முடிவுதான். கெயில் எப்போதும் ரன் பசியுள்ள ஒரு வீரர். கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அணிகளுக்கும் கெயில் விளையாடியுள்ளார். கெயில் ரன்கள் ஓடி எடுக்கவில்லை என்பதெல்லாம் பிரச்சினையில்லை. ஓய்வு அறையை அவர் எவ்வாறு வைத்திருப்பார் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த வெற்றியை நாங்கள் கொண்டாடுகிறோம். அடுத்த போட்டியைப் பற்றி நாளை சிந்திப்போம்''.

இவ்வாறு ராகுல் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x