Published : 26 Oct 2020 04:02 PM
Last Updated : 26 Oct 2020 04:02 PM

ஆர்சிபிக்கு சிக்கல்: நவ்தீப் ஷைனிக்கு கையில் பலத்த காயம்? மீதமுள்ள போட்டிகளில் விளையாடுவாரா?


ஐபிஎல் டி20 தொடரில் கோலி தலைமையிலான ஆர்சிபி அணிக்கு கடைசி நேரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆர்சிபி அணியின் வேகப்பந்துவீ்ச்சாளர் நவ்தீப் ஷைனிக்கு பந்துவீசும் கையில் காயம் ஏற்பட்டு தையல் போடப்பட்டுள்ளதால், அடுத்துவரும் போட்டிகளில் பங்கேற்பாரா என்பது கேள்விக்குள்ளாகியுள்ளது.

2016-ம் ஆண்டுக்குப்பின் இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில்தான் ஆர்சிபி அணி ப்ளேஃஆப் சுற்றுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பில் இருக்கிறது. 11 ஆட்டங்களில் 7 வெற்றி, 4 தோல்வி என 14 புள்ளிகளுடன் கோலி தலைமையிலான ஆர்சிபிஅணி இருக்கிறது. ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்ய இன்னும் ஒரு போட்டியில் வெற்றி அவசியம் தேவை.

அதுமட்டுமல்லாமல் அடுத்துவரும் ப்ளே ஆஃப் போட்டியிலும் ஆர்சிபி அணி சிறப்பாகச் செயல்படுவது அவசியம். ஆனால், அணியின் நம்பிக்கைக்குரிய வேகப்பந்துவீச்சாளர் நவ்தீப் ஷைன் காயத்தால் தற்போது அவதிப்பட்டுள்ளது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

சிஎஸ்கே அணிக்கு எதிராக நேற்று நடந்த ஆட்டத்தில் 18-வது ஓவரின் போது நவ்தீப் ஷைனி பீல்டிங் செய்தபோது, கையில் பந்து பட்டு வலதுகையின் கட்டை விரலோடு இணையும் சதைப்பகுதியை கிழித்துவிட்டது. இதனால் வேறு வழியின்றி பாதியிலேயே களத்திலிருந்து ஷைனி வெளியேறினார்.

உடனடியாக பிளாஸ்டிக் சர்ஜனை அழைத்து நவ்தீப் ஷைனியின் கைவிரலில் கிழிந்த பகுதியில் தையல் போடப்பட்டது. இதனால் மும்பை அணிக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில்(28-ம்தேதி) ஷைனி நி்ச்சயம் பங்கேற்கமாட்டார். ஆனால்,இந்த காயம் எப்போது சரியாகும், அடுத்துவரும் போட்டிகளில் பங்கேற்பாரா என்பது குறித்து அணியின் உடற்தகுதி வல்லுநர் இவான் ஸ்பீச்ச்லே ஏதும் கூற மறுத்துவிட்டார்.

ஆர்சிபி இணையதளத்தில் இவான் ஸ்பீச்லே அளித்த பேட்டியில் , “நவ்தீப் ஷைனி காயம் குணமடைய இரவுபகலாக சிகிச்சையளிப்போம்.அவருக்கு கையில் தையல் போடப்பட்டுள்ளது. தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அடுத்துவரும் போட்டிகளில் ஷைனி விளையாடுவாரா என்பதை கூற முடியாது.

கடந்த 2016-ம் ஆண்டு சீசனில் விராட் கோலிக்கும் இதேபோன்ற காயம் கையில் ஏற்பட்டது. ஆனால், கையில் தையல் போட்ட காயத்துடன் விளையாடி அந்த தொடரில் 973 ரன்கள் சேர்த்தார். குறிப்பாக பஞ்சாப் அணிக்கு எதிராக கையில் ரத்தம் சொட்ட சொட்ட விளையாடி சதம் அடித்தார் கோலி. ஆனால், இரு காயங்களையும் நாம்ஒப்பிட முடியாது. காயத்தின் தன்மை வேறுபட்டவை.

ஷைனிக்கு ஏற்பட்ட காயம் அவர் பந்துவீசும் வலதுகையில் ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஏற்பட்ட வலியால் பந்துவீசுவது கடினம், பந்தை இறுக்கமாகப் பிடிக்க முடியாது. ஆதலால், ஷைனிக்கு காயம் எப்போது குணமடையும் என்று உறுதியாகக் கூற முடியாது. அவர் நலம் பெற்றால் அடுத்தப் போட்டியில் கூட விளையாடலாம், அடுத்ததடுத்தப் போட்டிகளில் கூட விளையாடலாம். பார்க்கலாம்” எனத் தெரிவித்தார்.

ஆர்சிபி அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பந்துவீச்சாளர் ஷைனி என்பது குறிப்பிடத்தக்கது. ஷைனி அணியில் இடம் பெறமுடியாத சூழலில், அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் உள்ளே வர வேண்டியது இருக்கும்.

ஆனால், உமேஷ் யாதவ் கடந்த சில போட்டிகளாகவே பந்துவீச்சில் ஃபார்மில் இல்லாமல் இருப்பதால்தான் அவரை வெளியேஅமரவைத்தனர். ஒருவேளே உமேஷ் யாதவ் தேர்வு செய்யப்படாத நிலையில், ஷான்பாஸ் நதீம் தேர்வு செய்யப்படலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x