

சிஎஸ்கேவை வெளியேற்றி இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் தோற்றதற்கு மும்பை இந்தியன்ஸ் பெரிய அளவில் பழிதீர்த்தது.
இந்த துவம்சத்தைப் பார்க்க வேண்டாம் என்றோ என்னவோ ரோஹித் சர்மா ‘காயம்’ காரணமாக விலகினார் போலும்.
பொலார்ட் பொறுப்பு கேப்டனாக நியமிக்கப்பட்டார். அருமையாக கேப்டன்சி செய்தார், களவியூகம், பந்து வீச்சு மாற்றம் என்று அசத்தினார். இஷான் கிஷனை தொடக்க வீரராக ரோஹித் சர்மா இல்லாத போது இறக்கியது இஷான் கிஷனின் ஒரு புது அம்சத்தை வெளிப்படுத்துவதாக அமைந்தது.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக் கேப்டன் பொலார்ட் கூறியதாவது:
கேப்டன்சி என்பது இயற்கையானதுதான். அணித்தலைவராக இருப்பதற்கு சில வேளைகளில் உண்மையில் தலைவராக இருக்க வேண்டிய தேவையில்லை. எனக்கு ஒன்றிரண்டு விஷயங்கள் தெரியும் அவ்வளவே.
சரியான முடிவுகளை எடுக்க வேண்டும், இந்த ஆட்டத்தில் என் முடிவுகள் கைகொடுத்தது. 100 ரன்களுக்குள் சென்னையை சுருட்டுவதே இலக்கு ஆனால் சாம் கரன் நன்றாக பேட் செய்தார்.
தொடக்கத்தில் சென்னையின் 2-3 விக்கெட்டுகள் போதும் ஆனால் 4-5 விக்கெட்டுகள் உண்மையில் அட்டகாசம். பிறகு எங்கள் தொடக்க வீரர்கள் போனார்கள் வென்றார்கள், வந்தார்கள்.
இன்னும் மேம்பட வேண்டும், நானே சில தவறுகளைக் களத்தில் செய்கிறேன். டாப் 2 இடங்களில் இருப்பது அவசியம், என்றார் பொலார்ட்.