

ஷார்ஜாவில் இன்று நடைபெறும்ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் அவர் விளையாடவில்லை.
இதனால் மும்பை அணியின் கேப்டன் பொறுப்பை கெய்ரன் பொலார்ட் ஏற்றுள்ளார்.
கடந்த கிங்ஸ்லெவன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பு காயம் ஏற்பட்டது. அந்த காயத்திலிருந்து முழுமையாக அவர் சரியாகவில்லை என்பதால், இந்தப் போட்டியில் அவர் விளையாடவில்லை.
மும்பை அணியில் பட்டின்ஸனுக்கு பதிலாக கூல்டர் நீல், ரோஹித் சர்மாவுக்கு பதிலாக சவுவ் திவாரி சேர்க்கப்பட்டுள்ளனர். புள்ளிப்பட்டியலில் மும்பை அணி 9 போட்டிகளி்ல் விளையாடி, 3 தோல்வி, 6 வெற்றி என 12 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறது. இந்தப் போட்டியில் வெல்லும் பட்சத்தில் முதலிடத்துக்குச் செல்லவும் வாய்ப்புள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கெய்க்வாட், ஜெகதீஸன் ஆகியோர் கேதார் ஜாதவ், பியூஷ் சாவ்லாவுக்கு பதிலாக கொண்டுவரப்பட்டுள்ளனர். டுவைன் பிராவோவுக்கு பதிலாக இதுவரை ஒருபோட்டியில் கூட விளையாடாத இம்ரான் தாஹிர் அணிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்.