Last Updated : 23 Oct, 2020 12:05 PM

 

Published : 23 Oct 2020 12:05 PM
Last Updated : 23 Oct 2020 12:05 PM

‘வாழ்வா-சாவா போட்டிபோலத்தான் இருந்தது’: மீண்டும் ஃபார்முக்குவந்த தமிழக வீரர் விஜய் சங்கர் பேட்டி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான போட்டி எனக்கு வாழ்வா சாவா போட்டி போலத்தான் இருந்தது. பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் நான் சிறப்பாகச் செயல்பட்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் எனக்குரிய இடத்தை தக்கவைத்துக்கொள்ள உதவியது என்று தமிழக வீரரும், ஆல்ரவுண்டருமான விஜய் சங்கர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 40-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோற்கடித்தது.

முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களி்ல் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் சேர்த்தது. 155 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 156 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சன்ரைசர்ஸ் அணியின் இரு தூண்களாக விளங்கும் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் டேவிட் வார்னர், பேர்ஸ்டோ ஆட்டமிழந்தபின் சன்ரைசர்ஸ் கதை முடிந்துவிட்டது என்று ரசிகர்கள் நினைத்தனர்.

ஆனால், அனைவரின் கணிப்பையும் பொய்யாக்கும் விதத்தில் மணிஷ் பாண்டே, விஜய் சங்கர் கூட்டணி களத்தில் நங்கூரமிட்டு அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இருவரின் பேட்டிங்கும் ஆகச்சிறந்ததாக அமைந்தது. 3-வது விக்கெட்டுக்கு இருவரும் 146 ரன்கள் சேர்த்தனர்.

47 பந்துகளில் 83 ரன்கள்(8சிக்ஸர், 4பவுண்டரி)சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மணிஷ் பாண்டே ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

மணிஷ் பாண்டேவுக்கு சிறிது சளைத்தவர் இல்லை என்பதுபோல் விஜய் சிங்கரின்(52) பேட்டிங்கும், பந்துவீச்சும் நேற்று நேர்த்தியாக இருந்தது. 150 கி.மீ வேகத்தில் பந்துவீசும் ஆர்ச்சரின் பந்துவீச்சை தொடுவதற்கு பல சர்வதேச பேட்ஸ்மேன்கள் அஞ்சும் போது, விஜய் சங்கர் அனாயாசமாக ஹாட்ரிக் பவுண்டரி அடித்து தன்னை ஆல்ரவுண்டர் என நிரூபித்துவிட்டார்.

ஐபிஎல் தொடரில் இதுவரை 4 போட்டிகளில் மட்டுமே பங்கேற்ற விஜய் சங்கர் இதுவரை பேட்டிங்கிலும் சரியாக செயல்படவில்லை என்ற வருத்தம் இருந்த நிலையில் அதை நேற்று சரி செய்து மீண்டும் ஃபார்முக்கு திரும்பினார்.

பந்துவீச்சிலும் விஜய் சங்கர் நேற்று 3 ஓவர்கள் வீசி 15 ரன்கள் கொடுத்து பட்ரல் விக்கெட் வீழ்த்தி சிறப்பாகச் செயல்பட்டார்.
சன்ரைசர்ஸ் வெற்றிக்குப்பின் அந்த அணி வீரர் விஜய் சங்கர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

தனிப்பட்ட முறையில் என்னிடம் கேட்டால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான போட்டி எனக்கு வாழ்வா சாவா போட்டிபோலத்தான் இருந்தது. இந்தப் போட்டியை அப்படி நினைத்துதான் விளையாடினேன்.

இந்த சீசனில் இதுவரை நான் பேட்டிங்கில் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை. இந்த போட்டியில் அணியின் டாப்ஆர்டர் பேட்ஸ்மேன்கள் துரதிருஷ்டமாக ஆட்டமிழந்ததால், அல்லது எனக்கு கிடைத்த வாய்ப்பால் நான் 4-வது வீரராக களமிறக்கப்பட்டு சிறப்பாக விளையாடினேன்.

எங்கள் அணி கடந்த இரு போட்டிகளிலும் வெற்றிக்கு அருகே சென்று தோற்றது. கடைசி நேரத்தில்தான் நாங்கள் வெற்றியைத் தவறவிட்டிருக்கிறோம். இதுபோன்ற வ வெற்றி அணியில் உள்ள ஒவ்வொருவருக்கும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளிக்கும்.

அடுத்துவரும் போட்டிகளையும் எங்களால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையும்வருகிறது, தொடரில் உயிர்ப்புடன் நாங்கள் இருப்போம்.

மணிஷ்பாண்டே தொடக்கத்திலிருந்தே சிற்பபாகப் பேட் செய்தார். இந்தப் போட்டிக்கு முன் நான் விளையாடிய ஆட்டங்களில் அதிகமான பந்துகளைச் சந்திக்கவில்லை. இதற்கு முன் நான் களமிறங்கிய 3 போட்டிகளிலும் சேர்த்து 18 பந்துகளைத்தான் சந்தித்திருந்தேன்.

ஆதலால், இந்த போட்டி எனக்கு மிகவும் முக்கியமானப் போட்டியாக இருந்தது. ஆர்ச்சர் பந்துகள் மிகவேகமாக பேட்ஸ்மேனை நோக்கி வரும், அந்த நேரத்தில் அவரின் பந்துகளை அடித்து ஆடுவதும், அதிலிருந்துவிக்கெட்டை பாதுகாப்பதும் மிகவும் அவசியம்.

இந்தப் போட்டியை கடைசிவரை கொண்டு செல்ல வேண்டும், தோல்வி அடைந்துவிடக்கூடாது என்று நாணும் மணிஷ் பாண்டேவும் முடிவு செய்தோம். அவ்வப்போது சில பவுண்டரிகளை நானும் அடித்தது போட்டியின் வெற்றியை எளிதாக்கியது.
இவ்வாறு விஜய் சங்கர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x