Published : 22 Oct 2020 06:32 PM
Last Updated : 22 Oct 2020 06:32 PM

பிக் பாஷ் டி20 லீக்: தோனி, ரெய்னா, யுவராஜ் செல்கிறார்களா? 

சுரேஷ் ரெய்னா, எம்.எஸ். தோனி : கோப்புப்படம்

மெல்போர்ன்

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20 லீக்கில் விளையாட சிஎஸ்கே கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் ஆகியோரைக் கவர்ந்திழுக்க அணி நிர்வாகங்கள் தீவிரமான முயற்சியில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சார்பில் பிக் பாஷ் டி20 லீக் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டு நடப்பது தாமதமாகிய நிலையில் வரும் டிசம்பர் 2-வது வாரத்தில் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த நேரத்தில் ஆஸ்திரேலியாவுக்கு டெஸ்ட், ஒருநாள் போட்டி, டி20 தொடருக்காக இந்திய அணியும் அங்கு செல்கிறது. இதனால், இந்திய அணிக்கு எதிரான தொடரில் விளையாடுவதால் பல நட்சத்திர வீரர்கள் ஆஸ்திரேலிய அணியில் விளையாட முடியாத சூழல் ஏற்படும்.

ஆதலால், இந்த ஆண்டு பிபிஎல் தொடரில் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்துவதற்காக வெளிநாட்டு வீரர்களைச் சேர்க்கவும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு கிரிக்கெட் அணி நிர்வாகமும் விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் 3 வெளிநாட்டு வீரர்களை வைத்துக்கொள்ள அனுமதித்துள்ளது.

இதன்படி பிக் பாஷ் லீக்கில் உள்ள அனைத்து அணிகளும் தங்களின் வெளிநாட்டு வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கியுள்ளன. இந்தப் பேச்சின் முடிவில் எத்தனை வீரர்கள் எடுக்கிறார்கள் என்ற பட்டியலை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பிடம் வழங்கினால்தான் அவர்கள் வெளிநாட்டு வீரர்களைத் தனிமைப்படுத்தும் பணிகளைச் செய்ய முடியும். ஆதலால், அணி நிர்வாகம் தீவிரமான பணியில் ஈடுபட்டுள்ளன.

இதற்கிடையே ஆஸ்திரேலியாவின் புகழ்பெறற கிரிக்கெட்.காம்.ஏயு இணையதளம், ''இந்தியாவின் நட்சத்திர வீரர்கள் எம்.எஸ்.தோனி, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் ஆகியோரை பிக் பாஷ் லீக்கில் விளையாடவைக்கப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது'' என்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் தோனி, ரெய்னா இருவரும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். யுவராஜ் சிங் கடந்த ஆண்டு ஓய்வு பெற்றுவிட்டார். ஆதலால், ஓய்வுபெற்ற வீரர் ஒருவர் அடுத்த நாட்டின் லீக்கில் விளையாடத் தடையில்லை என்பதால் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் யுவராஜ் சிங் பிக் பாஷ் லீக்கில் விளையாட மிகுந்த ஆர்வமாக இருக்கிறார். இந்தத் தகவலை சமீபத்தில் ஒரு பேட்டியில் யுவராஜ் சிங்கே தெரிவித்தார். யுவராஜ் சிங் பிக் பாஷ் லீக்கில் விளையாடுவதில் எந்தவிதமான சிரமமும் இருக்காது.

ஆனால், தோனியும், ரெய்னாவும் ஐபிஎல் அணியில் இருக்கிறார்கள். இருவரும் ஐபிஎல் அணியில் இடம் பெற்று இருப்பதால், இருவரும் வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாடுவதற்கு பிசிசிஐ தடையில்லாச் சான்று வழங்குமா என்பது தெரியவில்லை.

சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி இருந்து வருகிறார். ரெய்னா தனிப்பட்ட காரணங்களால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. ஆனால், அடுத்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் நிச்சயம் ரெய்னா சிஎஸ்கே அல்லது வேறு எந்த அணிக்கு வேண்டுமானாலும் ஏலம் எடுக்கப்படலாம். ஆதலால், இருவருக்கும் பிசிசிஐ அனுமதியளிக்குமா என்பது கேள்வியாக இருக்கிறது.

முன்னதாக, சுரேஷ் ரெய்னா பிசிசிஐ அமைப்பிடம் வைத்த கோரிக்கையில், இந்திய அணியில் ஒப்பந்தம் இல்லாத வீரர்கள், ஓய்வுபெற்ற வீரர்கள், வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். இப்போதுள்ள நிலையில், எந்த இந்திய வீரரும் வெளிநாட்டு டி20 லீக் போட்டிகளிலும் விளையாட பிசிசிஐ அனுமததித்து இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x