Last Updated : 22 Oct, 2020 06:42 AM

 

Published : 22 Oct 2020 06:42 AM
Last Updated : 22 Oct 2020 06:42 AM

விளையாட்டாய் சில கதைகள்: 10 நாட்கள் நீடித்த மெகா கிரிக்கெட் டெஸ்ட்

கிரிக்கெட் போட்டிகளின் மைக்ரோ வடிவமான டி20 கிரிக்கெட் போட்டிகளை ஐபிஎல் வடிவில் இப்போது நாம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். பரபரப்பான இந்த காலகட்டத்தில் 5 நாட்கள் நடக்கும் டெஸ்ட் போட்டிகளைப் பார்க்க பலருக்கும் பொறுமை இல்லை. ஆனால் 1939-ம் ஆண்டு 10 நாட்களுக்கு நீடித்த டெஸ்ட் போட்டி ஒன்று நடந்திருக்கிறது. இதில் இங்கிலாந்து – தென் ஆப்பிரிக்க அணிகள் மோதியுள்ளன.

அந்த காலகட்டத்தில் டெஸ்ட் போட்டிகளை குறிப்பிட்ட நாட்களில் முடிக்க வேண்டும் என்ற விதிகளெல்லாம் இல்லை. ஏதாவது ஒரு அணி வெற்றி பெறும்வரை ஆட்டம் தொடரும். இந்த சூழலில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்த இங்கிலாந்து அணி, 1939-ம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது. இப்போட்டி யின் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா 530 ரன்களையும் இங்கிலாந்து 316 ரன்களையும் எடுத்தன. அடுத்த இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா 481 ரன்களைச் சேர்க்க, வெற்றி பெற 696 ரன்களை எடுக்கவேண்டிய நிலையில் இங்கிலாந்து ஆடவந்தது. இங்கிலாந்து வீரர்கள் பொறுமையா...க ஆடிக் கொண்டே போக, போட்டி 10-வது நாளைத் தொட்டது. அன்றைய தினத்தின் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 654 ரன்களை எடுத்திருந்தது.

போட்டி 11-வது நாள் தொடர்ந்தாலும் அதைப் பார்க்க ரசிகர்கள் தயாராக இருந்தார்கள். ஆனால் இங்கிலாந்து வீரர்களை ஏற்றிச் செல்லும் கப்பலின் கேப்டனுக்கு பொறுமையில்லை. உடனே வராவிட்டால் கப்பல் புறப்பட்டு விடும் என்று அவர் மிரட்ட, வேறு வழியின்றி போட்டி டிராவில் முடிக்கப்பட்டது.

வெற்றிக்கு வெறும் 42 ரன்களே தேவை என்பதால், இங்கிலாந்து வீரர்கள் அரைமனதுடன் நாடு திரும்பினர். இப்போட்டியில் இங்கிலாந்து வீரர் எட்ரிச் அதிகபட்சமாக 219 ரன்களைக் குவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x