Last Updated : 21 Oct, 2020 01:21 PM

 

Published : 21 Oct 2020 01:21 PM
Last Updated : 21 Oct 2020 01:21 PM

ஐபிஎல் 2020: இந்த முறை சிஎஸ்கே அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லுமா? வாய்ப்புகள் என்ன? வரலாறு சாதகம்?

ஐபிஎல் டி20 தொடர் பற்றி பேச்சு எடுத்தாலே ரசிகர்கள் கேட்கும் கேள்வி சிஎஸ்கே இந்த முறை ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்லுமா என்பதுதான். இன்னும் 4 போட்டிகள் மட்டுமே சிஎஸ்கே அணிக்கு இருப்பதால், ஒவ்வொரு போட்டியும் சிஎஸ்கே அணிக்கு இறுதிப் போட்டியாகும்.

மூன்று முறை சாம்பியன், 6 முறை 2-வது இடம், ஒருமுறை 4-வது இடம் என சூப்பர் லீக் சுற்றுக்குள் செல்லாமல் ஒருமுறைகூட ஐபிஎல் தொடரிலிருந்து சிஎஸ்கே வெளிேயறியது இல்லை.

ஆனால், 2020 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்கும், ரசிகர்களுக்கும் மறக்க முடியாத துக்க ஆண்டாகவே அமைந்திருக்கிறது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி 3 வெற்றி, 7 தோல்வி என 6 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன் ரேட்டும் மைனஸ் 0.463 என்று மோசமாக இருக்கிறது.

இன்னும் சிஎஸ்கே அணி தனக்கிருக்கும் 4 போட்டிகளில் வலிமையான டெல்லி கேபிடல்ஸ், ஆர்சிபி, கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா அணிகளை எதிர்கொள்ள வேண்டும். இந்த 4 அணிகளுமே கடந்த சில போட்டிகளாக சிறப்பாகத் திறமையை வெளிப்படுத்தி வருகின்றன என்பதால் சிஎஸ்கே அணி ஒவ்வொரு போட்டியையும் இறுதிப்போட்டி போல் நினைத்து விளையாடுவது அவசியம்.

சிஎஸ்கே அணி மீதமுள்ள 4 போட்டிகளில் வென்றால் ஒட்டுமொத்தமாக 14 புள்ளிகளைப் பெறலாம் என்பதால், சிஎஸ்கே அணி போட்டித் தொடரிலிருந்து கணிதரீதியாக வெளியேறிவிட்டது என்று கூற முடியாது.

ஐபிஎல் வரலாற்றைப் பார்த்தால், 8 அணிகள் பங்கேற்க 7 சீசன்களில் கடைசியாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் சென்ற அணியின் புள்ளிகள் 14க்கு மேல் இருந்தது இல்லை. இந்த முறை 8 அணிகள்தான் பங்கேற்கிறது என்பதால் சிஎஸ்கே அணி அடுத்துவரும் 4 போட்டிகளில் வென்றால் ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல வாய்ப்பு இருக்கிறது.

ஆனால், அதில் நிபந்தனை என்னவென்றால், ஒவ்வொரு போட்டியிலும் எதிரணியை குறைந்த ஓவரில் சுருட்டி, அதிகமான விக்கெட் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும், அல்லது சேஸிங் செய்வதாக இருந்தால், குறைந்த விக்கெட் வித்தியாசத்தில், குறைந்த ஓவர்களில் சேஸிங் செய்து ரன் ரேட்டைப் பலப்படுத்த வேண்டும்.

2010-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி 14 புள்ளிகள் மட்டுமே எடுத்து நிகர ரன் ரேட் அடிப்படையில்தான் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் சென்று சாம்பியன் பட்டத்தை வென்றது நினைவிருக்கும். 2014-ம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணியும் இதேபோன்ற நிலையைச் சந்தித்துதான் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் சென்றது.

ரன் ரேட்டை சிஎஸ்கே அணி வலிமைப்படுத்திக்கொண்டே வந்தால் 12 புள்ளிகள் எடுத்தால்கூட ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்லவும் வாய்ப்புள்ளது. இதற்கு உதாரணம் கடந்த 2019-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் அணி 12 புள்ளிகள் மட்டும் பெற்று ரன் ரேட் அடிப்படையில் கொல்கத்தா அணியைப் பின்னுக்குத் தள்ளி ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பைப் பெற்றது.

அதேசமயம், மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளும் சிஎஸ்கே அணியைப் பாதிக்கும். அதாவது முதல் மூன்று இடங்களில் இருக்கும் டெல்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி அணிகள் செயல்பாடும் பார்க்க வேண்டியுள்ளது.

அதாவது ஆர்சிபி அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் தோல்விகளைச் சந்தித்தால் சிஎஸ்கே அணிக்கு வாய்ப்புள்ளது.

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு இன்னும் 4 போட்டிகள் இருக்கிறது. இதில் ஆர்சிபி, கொல்கத்தா அணியை டெல்லி கேபிடல்ஸ் வென்றால் சிஎஸ்கே அணிக்குச் சற்று நிம்மதி கிடைக்கும்.

மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொறுத்தவரை டெல்லி அணியிடம் தோற்க வேண்டும், ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி, சன்ரைசர்ஸ் அணியை வெல்ல வேண்டும். இவை நடந்தால், சிஎஸ்கே அணி ப்ளே ஆஃப் செல்வதற்கான வழி எளிதாகும்.

அதுமட்டுமல்லாமல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளின் புள்ளிகள் 12க்கு மேல் செல்லக்கூடாது. இந்த 3 அணிகளில் ஏதாவது ஒரு அணி 14 புள்ளிகள் பெற்றால்கூட சிஎஸ்கே அணியின் ப்ளே ஆஃப் சுற்று கடினமாகிவிடும். நிகர ரன் ரேட்டை சிஎஸ்கே அணி தக்கவைக்க கடுமையாகப் போராட வேண்டியது இருக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x