Last Updated : 21 Oct, 2020 11:58 AM

 

Published : 21 Oct 2020 11:58 AM
Last Updated : 21 Oct 2020 11:58 AM

ஒவ்வொரு போட்டியின்போதும் என் இதயத் துடிப்பு எகிறுகிறது; மும்பை இந்தியன்ஸ் போட்டிக்குப் பின் எனக்குத் தூக்கமே வரவில்லை: ராகுல் உற்சாகம் 

எங்கள் அணி விளையாடும் ஒவ்வொரு போட்டியின்போதும் எனக்கு இதயத் துடிப்பு உச்சகட்டத்தில் துடிக்கிறது. எங்கள் அணியின் டாப் 4 பேட்ஸ்மேன்களில் ஒருவர் அடுத்துவரும் போட்டிகளில் ஃபினிஷராக இருக்க வேண்டும் என நம்புகிறேன் என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் தெரிவித்தார்.

துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் லீக் ஆட்டத்தில் வலிமையான டெல்லி அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வென்றது. முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்தது. 165 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி ஒரு ஓவர் மீதமிருக்கையில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.

அணியின் நம்பிக்கை வீரர்கள் ராகுல் (15), அகர்வால் (5), கெயில் (29) ரன்களில் ஆட்டமிழந்தபோதிலும் பூன் (53), மேக்ஸ்வெல் (32) இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த வெற்றி குறித்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

''எங்கள் அணி விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் என் இதயத் துடிப்பு புதிய உச்சத்தை நோக்கி எகிறுகிறது. ஆனால், இந்த ஆட்டத்தை 19 ஓவரிலேயே முடித்து வெற்றி பெற்றது மகிழ்ச்சி. 6 பேட்ஸ்மேன்களுடன், ஆல் ரவுடண்டருடன் விளையாடியதற்குப் பலன் கிடைத்துள்ளது.

ஒவ்வோர் அணியில் செட்டில் ஆன பேட்ஸ்மேன் போட்டியை ஃபினிஷிங் செய்ய வேண்டும் என்று பேசுகிறார்கள். அதுபோலவே, எங்கள் அணியில் முதல் 4 வீரர்கள் அடுத்துவரும் போட்டிகளில் ஃபினிஷராக இருப்பார்கள் என நம்புகிறேன்.

மேக்ஸ்வெல் சிறந்த பேட்ஸ்மேன். வலைப் பயிற்சியில் சிறப்பாக ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக இருப்பது முக்கியம். நடுப்பகுதியில் சிறப்பாகவே பேட் செய்தார். அடுத்துவரும் போட்டிகளிலும் சிறப்பாக பேட் செய்வார் என நம்புகிறோம்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இரு சூப்பர் ஓவர்களுக்குப் பின் கிடைத்த வெற்றிக்குப் பின் எனக்குத் தூக்கமே வரவில்லை. எனக்குத் தூக்கம் வருவதற்கு நீண்ட நேரம் ஆனது. சூப்பர் ஓவருக்கு முன்பாக எவ்வாறு போட்டியை முடித்திருக்க வேண்டும் என்ற நினைப்பு ஓடிக்கொண்டே இருந்தது. இருப்பினும் அந்தப் போட்டி அனைத்தையும் விட பெரிது என நினைக்கிறோம்.

ஷமியின் பங்களிப்பு இன்று எப்படி இருந்தது என எங்கள் அனைவருக்கும் தெரியும். இதைத்தான் பல ஆண்டுகளாக அவர் செய்து வருகிறார். இந்த ஆண்டு ஷமிக்கு அதிகமான தெளிவு கிடைத்து, மூத்த பந்துவீச்சாளர் எனும் கூடுதல் பொறுப்புடன் இருக்கிறார்.

மூத்த பந்துவீச்சாளர்கள் பொறுப்புடன் செயல்படும்போது, அதைப் பின்பற்றி இளம் வீரர்களும் உற்சாகமாகச் செயல்படுகிறார்கள். அனைத்துக்கும் ஷமிக்கு நன்றி. இளம் வீரர்கள் எங்கள் அணியில் சிறப்பாகச் செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

நாங்கள் வெற்றி பெற்ற போட்டிகளில் எல்லாம் ஷமியின் பந்துவீச்சு சிறப்பாக அமைந்திருப்பதைக் காணலாம். அவரின் பந்துவீச்சு அந்தப் போட்டியில் மிகத் துல்லியமாக அமைந்திருக்கும். அடுத்துவரும் போட்டிகளிலும் ஷமியின் இதேபோன்ற சிறப்பான பந்துவீச்சும், விக்கெட் வீழ்த்தும் திறமையும் பெரிதாக இருக்க வேண்டும்''.

இவ்வாறு ராகுல் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x