Published : 15 Oct 2020 01:35 PM
Last Updated : 15 Oct 2020 01:35 PM

30 பந்துகளில் 39 ரன்களை எடுக்க முடியாததை நம்ப முடிகிறதா? அஸ்வின் ஓவரில் 4 பந்துகளை ‘லொட்டு’ வைத்த திவேத்தியா- நெட்டிசன்கள் கடும் கேலி

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெறும் நிலையில் இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வியடைந்ததற்குக் காரணம் அஸ்வின் வீசிய ஓவரில் திவேத்தியா 4 பந்துகளை லொட்டு வைத்ததே என்று நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

ஐபிஎல் போட்டிகளில் ஒரு கட்டத்தில் சில தோல்விகளும் சில வெற்றிகளும் நம்மிடையே பிரமிப்பையும் சந்தேகத்தையும் ஒரேசேர எழுப்பிவிடும் தன்மை கொண்டவை.

அப்படிப்பட்ட போட்டிகளில் நடக்கும் சில புரியாத புதிர்களை ‘உஷ்! கண்டுக்காதீங்க’ என்று வர்ணிப்பதுண்டு. நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் 30 பந்துகளில் 39 ரன்களை எடுக்க முடியாமல் தோற்றதை இப்படிப்பட்ட ‘உஷ் கண்டுக்காதீங்க’ போட்டியாகவேப் பார்க்க நம்மைப் பணிக்கிறது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அன்று சிஎஸ்கே அணிக்கு எதிராக டுபிளெசிஸுக்கும் அப்போது பார்மில் இல்லாமல் தேடிக்கொண்டிருந்த வாட்சனுக்கும் களவியூகத்தை சாதகமாக அமைத்துக் கொடுத்ததோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு இருந்தது. ரன்கள் கசியவிடும் பகுதிகள் தொடர்ந்து ஓபனாக இருந்ததை அந்தப் போட்டியில் பார்த்தோம்.

நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 161 ரன்கள் இலக்கை ராஜஸ்தானால் விரட்ட முடியவில்லை என்பதையும் நம்ப முடியவில்லை. கடந்த போட்டியில் பிரமாதமாக திவேத்தியாவுடன் கூட்டணி அமைத்து நம்ப முடியாத வெற்றியைப் பெற உதவிய ரியான் பராகை உத்தப்பா ரன் அவுட் செய்தார் என்றுதான் கூற வேண்டும். ஓடி வந்தார், பராகும் வந்தார் திடீரென பராகை பின்னால் போகுமாறு செய்தார், இதனால் பராக் ரன் அவுட் ஆனார். 15 ஓவர்களில் 123/5. ராஜஸ்தான் வெற்றிக்குத் தேவை 30 பந்துகளில் 39 ரன்கள்.

அதிரடி பினிஷர் ராகுல் திவேத்தியா 2 ரன்களுடனும் உத்தப்பா 28 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 16வது ஓவரை அஸ்வின் வீச முதல் பந்தில் உத்தப்பா ஒரு ரன் எடுத்தார். ஸ்ட்ரைக்கிற்கு வந்த திவேத்தியா நிச்சயம் வெற்றிக்கான முன்னெடுப்பாக அஸ்வினை பவுண்டரி அடிப்பார், சிக்ஸ் அடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர், ஆனால் 4 பந்துகளை தொடர்ச்சியாக லொட்டு வைத்து ஒரு ரன் கூட எடுக்காமல் திவேத்தியா ஆடியது ஏன் என்பது புரியாத புதிர்தான். சிங்கிள்களைக் கூட எடுக்க முடியாத அளவுக்கெல்லாம் அஸ்வின் பவுலிங் இல்லை என்பதே எதார்த்தம். அதுவும் திவேத்தியா அன்று மிகப்பிரமாதமாக வெல்ல முடியாத நிலையிலிருந்து வெல்ல வைத்தவர், இதற்கு முன்பு காட்ரெல் ஓவரில் 5 சிக்சர்களை விளாசி பெரிய இலக்கை விரட்டிக் காட்டியவர். ஆனால் அஸ்வினின் 5 சாதாரண பந்துகளில் 4 டாட் பால்கள் 1 ரன் என்பதை என்னவென்று வர்ணிப்பது? அஸ்வின் 17 ரன்களுக்கு 1 விக்கெட் என்ரு தனது பந்து வீச்சை நிறைவு செய்தார்.

இதன் பிறகு நார்ட்யே, ரபாடாவை தொட முடியவில்லை. கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவை. தேஷ்பாண்டே வீசினார். 2வது பந்தை திவேத்தியா விளாச லாங் ஆபில் ரஹானே சிக்ஸ் போகவிருந்த பந்தை கேட்ச் எடுத்தார், ஆனால் லைனைக் கிராஸ் செய்வோம் என்று பந்தை உள்ளே தூக்கிப்போட்டார். 2 ரன்கள் ஓடியிருக்கலாம், 3 கூட ஓடியிருக்க முயற்சி செய்திருக்கலாம் ஆனால் ஷ்ரேயஸ் கோபால் 1 ரன்னுடன் போதும் என்று நின்றது திவேத்தியாவை கடுப்பேற்றியது. ஏற்கெனவே அஸ்வின் ஓவரில் உத்தப்பா சிங்கிளை மறுத்ததே திவேத்தியாவை கடுப்பேற்றியது. இதனால் கோபால் ஸ்ட்ரைக்கு வந்து ஒரு ரன் எடுக்க 4 பந்துகளில் 3 சிக்சர்கள் அடிக்க வேண்டியதாயிற்று, திவேத்தியாவினால் முடியவில்லை. 8 ரன்களயே எடுக்க முடிந்தது தோல்வி ஏற்பட்டது.

இதனையடுத்து திவேத்தியாவை நெட்டிசன்கள் ‘ஓட்டி’ வருகின்றனர். அஸ்வின் ஓவரில் 4 பந்துகளை லொட்டு வைக்கும் அளவுக்கு எந்த நிலையிலிருந்து வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் என்ற அதீத, மேலதிக அசட்டு தன்னம்பிக்கையா என்று திவேத்தியாவை கிண்டல் செய்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x