Last Updated : 09 Oct, 2020 02:27 PM

 

Published : 09 Oct 2020 02:27 PM
Last Updated : 09 Oct 2020 02:27 PM

‘சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் சிலர் அரசு வேலை செய்வதாகவே நினைப்பு; எப்படி விளையாடினாலும் சம்பளம் கிடைத்துவிடும்’ - வறுத்தெடுத்த சேவாக்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் : கோப்புப்படம்

புதுடெல்லி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த சில பேட்ஸ்மேன்கள் தாங்கள் அரசு வேலையில் இருப்பதாகவே நினைக்கிறார்கள். களத்தில் நன்றாக விளையாடினாலும் விளையாடாவிட்டாலும் சம்பளம் கைக்குக் கிடைத்துவிடும் என்று நினைக்கிறார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் காட்டமாக விமர்சித்துள்ளார்.

அபுதாபியில் நேற்று முன்தினம் நடந்த ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் 10 ரன்களில் தோல்வி அடைந்தது சிஎஸ்கே அணி. 168 ரன்களைத் துரத்திச் சென்ற சிஎஸ்கே அணி, சிறிய இலக்கை அடைய முடியாமல் நடுவரிசை பேட்ஸ்மேன்கள் பொறுப்பற்ற முறையில் ஆட்டமிழந்து வெற்றியைக் கோட்டை விட்டனர்.

கேதார் ஜாதவ், ரவிந்திர ஜடேஜா இருவரும் கடைசி நேரத்தில் களத்தில் இருந்தும் அதிரடியாக ஆடி ஸ்கோர் செய்யாமல் வெற்றியைத் தாரை வார்த்தனர்.

சிஎஸ்கே அணியின் மோசமான பேட்டிங் குறித்தும், கேதார் ஜாதவின் பேட்டிங் குறித்தும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் ஒரு இணையதளத்துக்குப் பேட்டி அளித்தார்.

அதில் அவர் கூறுகையில், ''கொல்கத்தா அணிக்கு எதிரான 168 ரன்களை சிஎஸ்கே அணி சேஸிங் செய்திருக்க வேண்டும். குறைவான இலக்கை சேஸிங் செய்ய முடியாதா? ஆனால், கடைசி நேரத்தில் ரவிந்திர ஜடேஜா, கேதார் ஜாதவ் இருவரும் அதிகமான டாட் பந்துகளை விட்டு வெற்றியைத் தாரைவார்த்து விட்டார்கள்.

என்னைப் பொறுத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சில பேட்ஸ்மேன்கள், அரசு வேலையில் இருப்பதாகவே நினைக்கிறார்கள். நன்றாக விளையாடுகிறோமோ அல்லது விளையாடாமல் போனாலும் சம்பளம் கைக்கு வந்துவிடும் என்று நினைக்கிறார்கள்'' என்று சேவாக் தெரிவித்தார்.

ஆனால், சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங், அளித்த பேட்டியில் “சுழற்பந்துவீச்சை ஜாதவ் நன்றாக அடித்து ஆடுவார் என்று எண்ணிதான் ஜடேஜா, பிராவோவுக்கு முன்பாகக் களமிறக்கினேன்” எனத் தெரிவி்த்தார்.

சிஎஸ்கே அணி அந்தப் போட்டியில் 11-வது ஓவர் முதல்14 ஓவர்கள் வரை வெறும் 14 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேதார் ஜாதவ் 12 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார்.

2-வது முறையாக சிஎஸ்கே அணி வெற்றிக்கு அருகே வந்து கோட்டைவிட்டுள்ளது. சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விரைவாக ஆட்டமிழந்தனர். அதனால் வெற்றிக்கான அழுத்தத்தில் விக்கெட்டுகள் சரியவே 7 ரன்களில் தோற்றது சிஎஸ்கே அணி.

இந்தத் தொடர் முழுவதுமே கேதார் ஜாதவ் தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வருவதால், அவரை பெஞ்சில் அமரவைக்க வேண்டும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தோனி பிடிவாதமாக ஜாதவுக்கு வாய்ப்பு கொடுத்துவருகிறார்.

இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி 4 தோல்விகள், 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் இருக்கிறது. சனிக்கிழமை கோலி தலைமையிலான ஆர்சிபி அணியை எதிர்கொள்கிறது சிஎஸ்கே அணி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x