Last Updated : 08 Oct, 2020 07:32 AM

 

Published : 08 Oct 2020 07:32 AM
Last Updated : 08 Oct 2020 07:32 AM

டி.கேவிடம் தோற்றார் தோனி; கொல்கத்தாவிடம் வெற்றியை தாரை வார்த்தது சிஎஸ்கே: ரஸல், நரேன், வருண் பந்துவீச்சில் சென்னை பேட்ஸ்மேன் சரண்

சிஎஸ்கேவை வீழ்த்தியபின் பாராட்டிக்கொள்ளும் கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக், இங்கிலாந்து கேப்டன் மோர்கன். மோர்கனின் பங்களிப்பு சிஎஸ்கே சரிவுக்கு அளப்பரியது: படம் உதவி ட்விட்டர்

அபு தாபி


திரிபாதியின் டாப் கிளாஸ் பேட்டிங், வருண், ரஸல், நரேன் ஆகியோரின் நெருக்கடி தரும் அபாரமான பந்துவீச்சு ஆகியவற்றால் அபு தாபியில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் 21-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 167 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. 168 சேர்த்தால் வெற்றி எனும் அடைந்துவிடும் இலக்குடன் பயணித்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் சேர்த்து 10 ரன்களில் தோல்வி அடைந்தது.

ஆகச்சிறந்த வெற்றியின் மூலம் கேகேஆர் அணி புள்ளிப்பட்டியலில் 5 போட்டிகளில் 3 வெற்றி, 2 தோல்வி என 6 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சிஎஸ்கே அணி 6 போட்டிகளில் 4 தோல்வி, 2 வெற்றிகளுடன் 5-வது இடத்தில் இருக்கிறது.

ஆட்டநாயகன்

கொல்கத்தா அணியின் வெற்றிக்கு பந்துவீச்சு எந்த அளவுக்கு முக்கியக் காரணமோ அதற்கு ஈடாக திரிபாதியின் பேட்டிங் முக்கியக் காரணம். 51 பந்துகளில் 81 ரன்கள்(8பவுண்டரி, 3 சிக்ஸர்கள்) சேர்த்து அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக இருந்த திரிபாதிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

கேப்டன்ஷிப் போர்

தினேஷ் கார்த்திக் கேப்டன்ஷிப், தோனியின் கேப்டன்ஷிப்புக்கு இடையே நடந்த ‘மினி போர்’ என்றே நேற்று நடந்த போட்டியைக் கூறலாம். இரு கேப்டன்களும் தங்கள் திட்டங்களை சரியாக முன்வைத்தார்கள் செயல்படுத்தினார்கள். ஆனால், சிஎஸ்கே பலீவனத்தில் சரியாக குறிபார்த்து அடித்ததில், தினேஷ் கார்த்திக் வென்றுவிட்டார்.

ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளுமே சமபலத்துடன் ரன்கள் சேர்த்தார்கள். ஆட்டத்தின் 2-வது பாதி இரு அணிகளுக்கும் பெரிய திருப்பு முனையாகத்தான் அமைந்தது.

பந்துவீச்சுக்கு பாராட்டு

இந்தப் போட்டியில் கொல்கத்தா அணியின் பந்துவீச்சையும், திரிபாதியின் பேட்டிங்கையும் பாராட்டாமல் இருக்க முடியாது. 168 ரன்கள் என்பது எளிதாக அடைந்துவிடும் இலக்கு, அந்த ரன்களை பேட்டிங் வலிமை கொண்ட சிஎஸ்கே அணியை எடுக்கவிடாமல் தடுத்துப் போராடி வென்ற கொல்கத்தா பந்துவீச்சாளர்களுக்கு கைதட்டல்கள் கொடுக்க வேண்டும்.

தினேஷ் கார்த்திக் கேப்டன் என்றாலும், களத்தில் 10 ஓவர்களுக்கு மேல் பீல்டிங் செட் செய்தது அனைத்தும் இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன்தான். உலகத்தரம் வாய்ந்த கேப்டன் என்பதை மோர்கன் நிரூபித்துவிட்டார்.

சிஎஸ்கேயின் எந்த பேட்ஸ்மேனுக்கு எப்படி பீல்டிங் நிற்கவைப்பது, யாரை பந்துவீசச் செய்வது என்று மோர்கன், கார்த்திக் இருவரும் தொலைவில் இருந்து பேசி அற்புதமாக திட்டமிட்டுச் செய்தனர். தினேஷ் கார்த்திக், மோர்கன் தி்ட்டமிடலுக்கு கிடைத்த வெற்றி.

நரேன், ரஸல் மிரட்டல்

பந்துவீச்சில் கொல்கத்தா அணியினர் பட்டையைக் கிளப்பிவிட்டனர். மாவி மட்டுமே ஓவருக்கு 10 ரன்கள் விட்டுக் கொடுத்தார். மற்றவகையில் கம்மின்ஸ் 4 ஓவர்களில் 25 ரன்கள் என கட்டுக்கோப்பாகப் பந்துவீசினார்.

தோனியின் விக்கெட்டை சாய்த்து சிஎஸ்கே தோல்வியை உறுதி செய்த வருணின் பந்துவீச்சு அற்புதம். ராயுடுவின் விக்கெட்டை சாய்த்த நாகர்கோட்டி , சிஎஸ்கே வீரர்களை திணறவிட்ட நரைன் ஆபத்தான பேட்ஸ்மேன் வாட்ஸன் விக்கெட்டை சாய்த்தது, சாம்கரனின் விக்கெட்டைச் சாய்த்த ரஸல் என அனைவரும் தங்கள் பங்களிப்பைச் செய்தனர். இந்த 3 பந்துவீச்சாளர்களும் 6 ரன்ரேட்டுக்கு மேல் கொடுக்கவில்லை.

அதிலும் சுனில் நரைன் வீசிய 12,14,16,19 வது ஓவர்கள் சிஎஸ்கேவுக்கு பெரும் நெருக்கடி தரும் விதத்தில் அமைந்தன. பேட்டிங்கில் சோபிக்காவிட்டாலும் பந்துவீச்சில் ரஸல் ஜொலித்தார்.

கடைசி 8 ஓவரில் சிஎஸ்கே வெற்றிக்கு 69 ரன்கள் மட்டுமே தேவை, கைவசம் 8 விக்கெட்டுகள் இருந்தன. சிஎஸ்கே போன்ற வலிமையான பேட்டிங் உள்ள அணி நிச்சயம் வென்றிருக்க வேண்டும்.

ஆனால், நம்பிக்கையுடன் இருந்த சிஎஸ்கே அணியை, கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்கள் தங்களின் பந்துவீச்சால் சிதைத்துவிட்டனர். கொல்கத்தா தோற்றுவிடும் என்று நினைத்தவர்களுக்கு கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் அளித்த நெருக்கடி பேரிடியாக இறங்கியது.

ஒட்டுமொத்தத்தில் கொல்கத்தா அணியினர் சிறப்பாக விளையாடினர் என்று கூறினாலும், அதைவிட மேலாக சிஎஸ்கேயின் மோசமான பேட்டிங்கால் வெற்றியை தாரை வார்த்தது என்பதுதான் சரியாக இருக்கும்.

சேஸிங் விருப்பமாம்

சிஎஸ்கே அணியைப் பொருத்தவரை, டாஸ் தோற்றாலும்,சேஸிங் செய்யவே விரும்புகிறோம் என்று தோனி பெருமையாக குறிப்பிட்டார். ஆனால், 168 ரன்களை தொடமுடியவில்லை எனும்போது “அட உங்க பேட்டிங் இவ்வளவுதானா” என்று கேட்கத் தோன்றுகிறது. முன்னாள் சாம்பியன் என்று சொல்லிக்கொள்ளும் சிஎஸ்கே 10 ரன்னில் வெற்றியைக் கோட்டை விட்டதை ஏற்க முடியவில்லை.

சிஎஸ்கே அணியில் பெரிதாகச் சொல்லும்மாறு பந்துவீச்சு சிறப்பாக இல்லை என்பது தெளிந்த கிரிக்கெட் ரசிகர்களுக்குத் தெரியும். வலுவான பேட்டிங்கை மட்டுமே நம்பித்தான் சிஎஸ்கே இருக்கிறது. இருப்பினும், இந்தக் குறைந்த ஸ்கோரைக் கூட சேஸிங் செய்ய முடியவில்லை. இன்னும் சிஎஸ்கே அணி பேட்டிங்கில் வலுவாகத்தான் இருக்கிறது எனக் கூற முடியுமா? அன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக நோ-லாஸ் வெற்றி ஒரு பிறழ்வே (aberration). ஏனெனில் களவியூகம் சிஎஸ்கே வெற்றி பெறுவதற்கு வாகாக அமைந்தது, மாறாக நேற்று கொல்கத்தா கிடுக்கிப் பிடி போட மீள முடியாது தோற்றது சென்னை.

எதிர்பார்க்கலாமா?

சிஎஸ்கே அணி என்பது வாட்ஸன், ராயுடு, டூபிளசிஸ் ஆகியோரை மட்டுமே சார்ந்துள்ளது என்பது வெளிப்பட்டுவிட்டது. ஏதாவது ஒருபோட்டியில் 10 விக்கெட்டில் வென்றதால், அதேபோன்ற வெற்றியை அனைத்துப் போட்டிகளிலும் ரசிகர்கள் எதிர்பார்த்தது தவறு என சிஎஸ்கே உணர்த்திவிட்டது.

கடந்த ஓர் ஆண்டாக கிரிக்கெட்டை மறந்திருந்த தோனிக்கு நேற்றைய ஆட்டத்தில் போல்டானது போதுமான பயிற்சி இல்லாததை தெளிவாகக் காட்டிவிட்டது. கேதார் ஜாதவ் மீது தோனி வைத்திருக்கும் நம்பிக்ைகக்கு தோனிக்கு விருதே தரலாம்.

ஆனால், பேட்டிங்கை மறந்திருக்கும் ஜாதவை எதற்கு தேர்வு செய்கிறார் தோனி எனத் தெரியவில்லை. அடுத்தபோட்டியில் சிஎஸ்கே வெல்வதற்கு எளிமையான வழி ஜாதவ்வை அமரவைத்தால் போதுமானது.
இந்தப் போட்டியில் ஜாதவை களமிறக்க வேண்டிய இடத்தில் பிராவோ வந்திருந்தால்கூட அடித்திருப்பார். ஆனால், ஜாதவ் 12 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்விக்கு துணை புரிந்தார்.

மீண்டுவிட்டார்களா ?

190 ரன்கள் வரை எடுக்க வேண்டிய கொல்கத்தாவை 167 ரன்களில் சுருட்டியது சிஎஸ்கே அணி. ஆனால், 167ரன்களைக் கூட சேஸிங் செய்ய முடியாத நிலைக்கு சிஎஸ்கே வந்துவிட்டதே. ஒட்டுமொத்தத்தில் தொடர் தோல்வியிலிருந்து மீண்டுவிட்டார்கள் என்று நம்பினோம், ஆனால் இன்னும் ஆழத்தில் சென்றுவிட்டது சிஎஸ்கே.

ஏமாற்றம்

168 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் அடைந்துவிடும் இலக்கை துரத்தி சிஎஸ்கேயின் டூபிளசிஸ், வாட்ஸன் களமிறங்கினர். கடந்த போட்டியில் அதிரடியில் கலக்கிய இருவரும் இந்த முறையும் நல்ல தொடக்கத்தை அளிப்பார்கள் என எதிர்பார்ப்பு இருந்தது.

மாவி வீசிய 4-வது ஓவரில் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச்கொடுத்து டூபிளசிஸ் 17ரன்னில் வெளியேறி ஏமாற்றினார். அடுத்து ராயுடு வாட்ஸன் ஜோடி நம்பிக்கை அளித்தனர். பவர்ப்ளேயில் ஒரு விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் சேர்த்து சிஎஸ்கே அணி.

ஃபார்முக்கு திரும்பிய வாட்ஸன் 39 பந்துகளில் அரைசதம் அடித்தார். 12 ஓவரில் சிஎஸ்கே அணி 100 ரன்களைக் கடந்து வலுவாக இருந்தது. கையில் 8 விக்ெகட்டுகள் வெற்றிக்கு 69 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

திருப்புமுனை விக்கெட்

நிதானமாக ஆடிய ராயுடு 30 ரன்னில் நாகர்கோட்டி பந்துவீச்சில் கில்லிடம் லாங்ஆனில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 2-வது விக்கெட்டுக்கு வாட்ஸன், ராயுடு ஜோடி 69ரன்கள் சேர்த்தனர்.

ராயுடு ஆட்டமிழந்தது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அடுத்து தோனி களமிறங்கினார். தோனி களத்தில் இருந்தால் சிஎஸ்கே வென்றுவிடும் என ரசிகர்கள் சொல்வார்கள். பேட்டிங்கில் வலுவானது எனச் சொல்லப்படும் சிஎஸ்கே அணி நேற்று “இவ்வளவுதானா” என்று வெளிப்பட்டுவிட்டது. அதன்பின் சிஎஸ்கே அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது.

12ஓவர்கள் வரை நரைன் பந்துவீச வரவில்லை. ஆனால், சிஎஸ்கே அணி தடுமாறத் தொடங்கியவுடன் நரைன் வரவழைத்தார் தினேஷ். நரைன் வீசிய 14-வது ஓவரில் கால்காப்பில் வாங்கி வாட்ஸன் 50 ரன்னில்(6பவுண்டரி,ஒரு சிக்ஸ்) ஆட்டமிழந்தார்.

நம்பிக்கை தகர்ந்தது

அடுத்து சாம் கரன் களமிறங்கி, தோனியுடன் சேர்ந்து சில நல்ல ஷாட்களை அடித்து ஸ்கோரை உயர்த்தினார். இருவரும் களத்தில் இருக்கும் வரை ரசிகர்களுக்கு நம்பிக்கை இருந்தது.

ஆனால், வருண் கார்த்திக் வீசிய 17-வது ஓவரில் தோனி ஸ்வீப் ஷாட் ஆட முற்பட்டு க்ளீன் போல்டாகி 11 ரன்னில் வெளியேறியபோது ரசிகர்களின் நம்பிக்கைக் கோட்டை உடைந்து சிதறியது

அடுத்து ஜாதவ் களமிறங்கி, ஒன்றும்செய்யவில்லை. சிஎஸ்கே அணிக்கு மேலும் நெருக்கடி கொடுக்க ரஸல் பந்துவீச அழைக்கப்பட்டார். ரஸல் வீசிய 18-வது ஓவரின் முதல்பந்திலேயே மிட்ஆப்பில் மோர்கனிடம் கேட்ச் கொடுத்து சாம் கரன்17ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

"ஜாதவ் சூப்பர்"

ஒரு கட்டத்தில் 99 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்த சிஎஸ்கே அணி அடுத்த 30ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து வந்த ஜடேஜா ஜாதவுடன் சேர்ந்தார். கடைசி இரு ஓவர்களில் சிஎஸ்கே வெற்றிக்கு 36 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரை வீசிய நரைன் தனது நெருக்கடியான பந்துவீச்சில் ஜாதவுக்கும், ஜடேஜாவுக்கும் படம் காட்டினார். அந்த ஓவரில் 10ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது.

கடைசி ஓவரை ரஸல் வீசினார். 6பந்துகளில் வெற்றிக்கு 26ரன்கள் தேவைப்பட்டது. முதல் 2 பந்துகளை ஜாதவை திணறவிட்டார் ரஸல். 3-வது பந்தில் ஜாதவ் ஒரு ரன் தட்டிவிட்டார். அதன்பின் ஜடேஜா கடைசி 3 பந்துகளில் இருபவுண்டரி ,சிக்ஸர் அடித்தும் பயனில்லாமல் போனது.

ஜடேஜா 21 ரன்னிலும், ஜாதவ் 7 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்களில் சிஎஸ்கே அணி 5 விக்கெட் இழப்புக்கு 157ரன்கள் சேர்த்து 10 ரன்னில் தோல்வி அடைந்தது.

கொல்கத்தா தரப்பில் மாவி,வருண், நாகர்கோட்டி, நரேன், ரஸல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

திரிபாதி அபாரம்

முன்னதாக டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. வழக்கம்போல் சுனில் நரேனை களமிறக்கி தவறு செய்யாமல் இந்த முறை சுப்மான் கில்லுடன் ராகுல் திரிபாதி களமிறங்கினர்.
டார்ஆர்டர் பேட்ஸ்மேன் யாரும் நிலைக்கவில்லை. கில்(11) ராணா(9), நரேன்(17) ரன்னில் வெளியேறினர். தனக்கு கிைடத்த வாய்ப்பையும் சரியாகப் பயன்படுத்திய திரிபாதி 31 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆபத்தான பேட்ஸ்மேன்கள் மோர்கன், ரஸல் இருவருமே நேற்று ஏமாற்றிவிட்டனர். மோர்கன் 7 ரன் சேர்த்த நிலையில், சாம் கரன் பந்துவீச்சிலும் , ரஸல்(2) ரன்னில் தாக்கூர் பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

தடுமாற்றம்

10-வது ஓவருக்குப்பின் 14-வது ஓவர் வரை பவுண்டரியே கொல்கத்தா அணி பவுண்டரியே அடிக்கவில்லை. ஆனால், அதன்பின் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை கொல்கத்தா இழந்தது. ராகுல் திரிபாதி 51 பந்துகளில் 81 ரன்கள் சேர்த்து (3சிக்ஸர்,8பவுண்டரி)பிராவோ பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
கேப்டன் திேனஷ் கார்த்திக் 12 ரன்கள் சேர்த்து 5-வது முறையும் சொதப்பினார்.

பிராவோ வீசிய 20-வது ஓவரில் 3 விக்கெட்டுகளை கொல்கத்தா அணி பறிகொடுத்தது. பிராவோ வீசிய 2-வது பந்தில் நாகர்கோட்டி(0) டூப்பிளஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 5-வது பந்தில் ஷிவம் மாவி(0) தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தோனி அருமையாக டைவ் அடித்து இந்த கேட்சை பிடித்தார். வருண் ஒரு ரன்னில் ரன்அவுட் ஆகினார்.

கம்மின்ஸ் 17ரன்னில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 167 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

சிஎஸ்கே தரப்பில் பிராவோ 3 விக்கெட்டுகளையும், சாம் கரன், கரன் சர்மா, தாக்கூர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x