

வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடருக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சுரேஷ் ரெய்னா, இந்தத் தொடர் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட நல்ல தயாரிப்பாக அமையும் என்று கூறியுள்ளார்.
"இங்கிலாந்தில் திறமையை வெளிப்படுத்த வங்கதேசத் தொடர் எனக்கு ஒரு சிறந்த தயாரிப்பாக அமையும், இங்கு சிறப்பாக விளையாடினால் இங்கிலாந்திலும் சிறப்பாக விளையாட முடியும” என்று தனக்கு நம்பிக்கை இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வங்கதேசம் அவர்கள் மண்ணில் சிறந்த அணி, ஆக்ரோஷமாக விளையாடுவார்கள், இந்த இளம் அணிக்கு சற்று கடினம்தான் என்பதையும் ரெய்னா ஒப்புக்கொண்டுள்ளார்.
"வங்கதேசத்தை அவர்கள் நாட்டில் வீழ்த்துவது கடினம், அங்கு நாம் ஆசியக் கோப்பைப் போட்டியில் வெல்லவில்லை, இருபது ஓவர் உலகக் கோப்பையிலும் இறுதிப் போட்டியில் தோல்வி தழுவியுள்ளோம் ஆகவே சற்று கடினம்தான்.
இது ஒரு இளம் அணி, இருப்பினும் அனைத்து இளம் வீரர்களும் நன்றாக ஆடி வருபவர்கள். இடது கை சுழற்பந்து வீச்சாலர் அக்ஷர் படேல், அம்பாட்டி ராயுடு மனோஜ் திவாரி, விருத்திமான் சஹா, ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். ராபின் உத்தப்பா நடப்பு ஐபிஎல் தொடரில் நன்றாக விளையாடி வருகிறார்.
சிறந்த வீரர்கள் இருந்தால் போட்டிகளை வெல்வது சுலபம், கேப்டன் என்ற தனி நபரால் செய்யக்கூடியது சில விஷயங்கள் மட்டுமே” இவ்வாறு கூறியுள்ளார் ரெய்னா.
வங்கதேசத்தில் ஜூன் 15, 17 மற்றும் 19ஆம் தேதிகளில் ஒரு நாள் போட்டிகள் நடைபெறுகிறது