Last Updated : 05 Oct, 2020 02:28 PM

 

Published : 05 Oct 2020 02:28 PM
Last Updated : 05 Oct 2020 02:28 PM

சிஎஸ்கே வீரர்களை நம்புகிறோம்; முடிந்தவரை பக்கபலமாக இருக்கிறோம்: வெற்றியின் ரகசியம் குறித்து ஸ்டீபன் பிளெமிங் பேட்டி

சிஎஸ்கே தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் : படம் | ஏஎன்ஐ.

துபாய்

நாங்கள் எங்கள் வீரர்களை நம்புகிறோம். அவர்களை முடிந்தவரை ஆதரிக்கிறோம். தோல்வி ஏற்படும்போது அமைதியாக இருந்து யோசிப்பதுதான் எங்கள் வெற்றியின் ரகசியம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்தார்.

முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் சேர்த்தது. 179 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் சேர்த்து 10 விக்கெட்டில் வெற்றி பெற்றது.

துபாய் மைதானத்தில் இதுவரை எந்த அணியும் சேஸிங் செய்து இந்த சீசனில் வெல்லவில்லை. முதல் முறையாக ஒரு இலக்கை துரத்திச் சென்று சிஎஸ்கே அணி மட்டுமே வென்றுள்ளது. அதிரடியாக ஆடிய வாட்ஸன் 83 ரன்கள், டூப்பிளசிஸ் 87 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற வைத்தனர்.

தொடர்ந்து ஹாட்ரிக் தோல்விகளைச் சந்தித்து வந்த சிஎஸ்கே அணி வீறுகொண்டு இந்தப் போட்டியில் 10 விக்கெட்டில் வென்றது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வெற்றி குறித்து சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் அளித்தபேட்டியில் கூறியதாவது:

''தோல்விக்குப் பின்பும் அமைதியாக இருப்பது, அணி வீரர்களை மாற்றுவதை விட, வீரர்களுக்கு அதிகமான வாய்ப்புகளை வழங்குவது, வீரர்களை நம்புவதுதான் வெற்றிக்கான ரகசியம் என்று நினைக்கிறேன். அணியில் மாற்றம் செய்தால் வெற்றி கிடைக்குமா என்பது எனக்கும், உங்களுக்கும் உறுதியாகத் தெரியாது.

வீரர்கள் செயல்படுவது சரியாக இருந்தால், அவர்களுக்கு முடிந்தவரை நீண்டகாலத்துக்குப் பக்கபலமாக ஆதரவாக இருப்போம். நாங்கள் தொடர்ந்து முயல்கிறோம், முன்னேறுகிறோம்.

துபாய் ஆடுகளத்தில் வித்தியாசமாக ஏதும் வாட்ஸன் செய்யவில்லை. அவர் வழக்கமான ஆட்டத்தைத்தான் ஆடினார். இதுதான் அனுபவமான வாட்ஸனின் வலிமை. வாட்ஸன் ஒருவேளை வலைப்பயிற்சியில் திணறியிருந்தால், அது நிச்சயம் கவலைக்குரிய விஷயமாக எங்களுக்கு இருந்திருக்கலாம். ஆனால், வலைப்பயிற்சியில் வாட்ஸன் அருமையாக பேட் செய்தார். ஷாட்கள் நேர்த்தியாக இருந்தன.

அனைத்தும் நேரம்தான். கொஞ்சம் அதிர்ஷ்டம், நேர்மறையான எண்ணங்கள் வாட்ஸனிடம் வந்துவிட்டால் போதும். அவரின் அதிரடி பேட்டிங், ஆட்டத்தை இழுத்துச் சென்றுவிடும். டூப்பிளசிஸ் மிகச்சிறந்த ஃபார்மில் இருக்கிறார். இருவரும் ஃபார்முக்கு வந்தால் இன்னும் போட்டியை சுவாரஸ்யமாக்கும்.

இந்த ஆட்டத்தின் திருப்புமுனையே பஞ்சாப் அணி 17-வது ஓவர் முதல் 20-வது ஓவர்வரை பேட் செய்ததுதான். 42 ரன்கள் வரைதான் அவர்களைச் சேர்க்க நாங்கள் அனுமதித்தோம். மற்ற போட்டிகளில் எல்லாம் இந்த ஓவர்களில் அதிகமான ரன்களை கோட்டைவிட்டோம். இந்த முறை அந்தத் தவறைச் சரிசெய்தோம்.

அனைத்துமே வீரர்களின் அணுகுமுறையைப் பொறுத்ததுதான். அதுதான் அவர்களைத் தேர்வு செய்ய உதவுகிறது. தனிப்பட்ட வீரர்களுக்கு முக்கியமானது என்னவென்றால் தற்காப்பாக ரொம்ப இருக்கக்கூடாது. உங்கள் வழியில் ஏதும் வராதபோது நீங்கள் துணிச்சலாக இருந்து செயல்பட வேண்டும்.

சில நேரங்களில் பந்துவீச்சாளர்கள் நன்றாக இருப்பார்கள். அவர்களைத் தேர்வு செய்ய பரிசீலிப்போம். ஆனால், அணுகுமுறை என்பது சில விஷயங்களைக் கட்டுப்படுத்தும். அந்த நேரத்தில் அவர்களுக்கு நாம் அணிக்குள் தேர்வு செய்வதில் சில பாதுகாப்புகளைத் தர வேண்டும்''.

இவ்வாறு பிளெமிங் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x