Last Updated : 05 Oct, 2020 08:31 AM

 

Published : 05 Oct 2020 08:31 AM
Last Updated : 05 Oct 2020 08:31 AM

‘இனிமேல் இப்படித்தான்…சின்ன விஷயத்தை சரியா செய்திருக்கிறோம்’: வெற்றிக்குப் பின் தோனி உற்சாகப் பேட்டி

இனிவரும் போட்டிகளில் இதேபோன்ற வெற்றிகள் தொடரும். சிறிய விஷயங்களை மிகவும் நேர்த்தியாகவும், சரியாகவும் செய்திருக்கிறோம். இந்த வெற்றி மிகவும் முக்கியமானது என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி உற்சாகமாகத் தெரிவித்தார்.

முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் சேர்த்தது. 179 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் சேர்த்து 10 விக்கெட்டில் வெற்றி பெற்றது.

துபாய் மைதானத்தில் இதுவரை எந்த அணியும் சேஸிங் செய்து இந்த சீசனில் வெல்லவில்லை. முதல் முறையாக ஒரு இலக்கை துரத்திச் சென்று சிஎஸ்கே அணி மட்டுமே வென்றுள்ளது. அதிரடியாக ஆடிய வாட்ஸன் 83 ரன்கள், டூப்பிளசிஸ் 87 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற வைத்தனர்.

இந்த வெற்றிக்குப் பின் சிஎஸ்கே கேப்டன் தோனி பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''சின்ன விஷயங்களை நாங்கள் சரியாக, நேர்த்தியாகச் செய்திருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன். இந்த வெற்றி மிகவும் முக்கியமானது. இதுபோன்ற 'நெருப்பான' தொடக்கம்தான் எங்களுக்குத் தேவைப்பட்டது. அடுத்துவரும் போட்டிகளிலும் இதேபோன்ற தொடக்கத்தை, வெற்றிகளை எதிர்பார்க்கலாம் என நம்புகிறேன்.

கோப்புப்படம்

வாட்ஸன் ஃபார்ம் பற்றி கவலைப்பட்டதில்லை. வலைப்பயிற்சியில் வாட்ஸன் சிறப்பாகவே செயல்பட்டார். நமக்கு என்ன தேவை, சூழலுக்கு ஏற்ப எவ்வாறு விளையாடுகிறார் என்பதுதான். டூப்பிளசிஸ் எங்களுக்கு நங்கூரம் போன்றவர். ஆட்டத்தின் நடுப்பகுதியில் நல்ல ஷாட்களை ஆடக்கூடியவர். அவ்வப்போது சில மாறுபட்ட ஷாட்களை ஆடி எதிரணியின் பந்துவீச்சாளர்களை குழப்பிவிடுவார். இருவரும் சேர்ந்து ஒருவொருவருக்கொருவர் இந்த ஆட்டத்தை நிரப்பிவிட்டனர்.

எங்கள் அணியில் வீரர்கள் தேர்வு என்பது நிலையானது. இந்த அணித் தேர்வுக்கு தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்பிங்கிற்குதான் நன்றி சொல்ல வேண்டும். எந்த ஒரு திட்டமிடலாக இருந்தாலும், சரியாகச் செய்வோம். எங்களுக்குள் திட்டமிடுதலில் விவாதங்கள் இருக்காது, ஒரே திட்டம்தான் அதுதான் எங்கள் உறவுக்கும் காரணம்.

கடந்த 3 போட்டிகளில் அடைந்த தோல்வி பற்றி சொல்வதென்றால், எதிரணியின் ரன்களைக் கட்டுப்படுத்தி இருக்கவேண்டும். இன்னும் பல நெருக்கடிகளை அளித்திருக்க வேண்டும். அதைச் செய்யத் தவறிவிட்டோம்.

ஒவ்வொரு அணியிலும் ஆக்ரோஷமான ஹிட்டர்கள் இருப்பார்கள், அந்த ஹிட்டர்கள்தான் எதிரணியின் பந்துவீச்சையும், பந்துவீ்ச்சாளர்களின் நம்பிக்கையையும் சிதறடிப்பார்கள். அதுபோன்ற சரியான ஷாட்களை ஆடுவதற்கு சரியான தருணம் எங்களுக்குத் தேவைப்பட்டது. அந்த சரியான தருணத்தை வாட்ஸன், டூப்பிளசிஸ் பயன்படுத்தி ஷாட்களை ஆடி மீண்டும் தங்களை நிலைப்படுத்திவிட்டார்கள்''.

இவ்வாறு தோனி தெரிவித்தார்.

ஆட்டநாயகன் விருது பெற்ற வாட்ஸன் கூறுகையில், “ கடந்த சில போட்டிகளில் பேட்டிங் தொழில்நுட்பத்தில் சில தவறுகள் இருந்ததாக நினைக்கிறேன். இந்தப் போட்டியில் மீண்டும் இயல்புக்கு வந்தது மகிழ்ச்சி. சிறப்பாக விளையாட வேண்டும் எனும் நோக்கம், பேட்டிங் பயிற்சி இரண்டும் சேர்ந்து ஆட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. டூப்பிளசிஸும் நானும் சேர்ந்து ஒருவருக்கு ஒருவர் நிரப்பி இருக்கிறோம். சிறந்த வீரர் டூப்பிளசிஸ். அவருடன் சேர்ந்து விளையாடுவது மகிழ்ச்சிக்குரியது” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x