

துபாயில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2020-ன் 12வது போட்டியில் ஷுப்மன் கில் கொடுத்த துவக்கம் மற்றும் பந்து வீச்சில் கமின்ஸ், ஷிவம் மாவி, நாகர்கோட்டி ஆகிய இளம் வேகப்புயல்கல் கலக்கியதாலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஸ்மித் தலைமை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு முதல் தோல்வியை அளித்தது.
175 ரன்கள் இலக்கை எதிர்த்து ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இங்கிலாந்தின் டாம் கரன் மட்டுமே 36 பந்துகளில் 2 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 54 ரன்கள் விளாசினார், பட்லர் 21 ரன்களில் வெளியேறினார். திவேஷியா 14 ரன்கள் என்று மூவர் மட்டுமே இரட்டை இலக்கம் எட்டினர், மற்றவர்கள் 3, 8, 2, 1, 5, 6, 9, 7 என்ற ஸ்கோர்களில் வெளியேற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 137/9 என்று மடிந்தது. ஸ்மித் 3 ரன்களிலும் சாம்சன் 8 ரன்களிலும் வெளியேறினர்.
டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்து தவறு செய்தார் ஸ்மித்.
இதனையடுத்து ஆட்டம் முடிந்த பிறகு ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறியதாவது:
திட்டமிட்டபடி ஆடவில்லை. சில சமயங்களில் டி20 கிரிக்கெட்டில் இப்படி நடந்து விடும். டாஸ் பற்றி கூறுவதென்றால் இரண்டே இரண்டு தெரிவுதான் உள்ளது.
டாஸ் பிரச்சனையல்ல, பேட்டிங்கில் அதிக விக்கெட்டுகளை சடுதியில் இழந்து விட்டோம். எங்களில் சிலர் இன்னும் ஷார்ஜாவில் ஆடுவதாகவே நினைத்துக் கொண்டிருந்தோம். (சிறிய மைதானம் என்று நினைத்து கொண்டிருந்தோம்)
மைதானம் ஒரு இடத்தில் பெரிதாக இங்கு உள்ளது, அதனால் அந்த பவுண்டரிகளைக் கடந்து அதிக ஷாட்கள் போகவில்லை. பிட்ச் மற்ரும் அதன் பரிமாணங்களை சரியாகக் கணிக்கவில்லை.
அணிச்சேர்க்கையில் மாற்றம் குறித்து யோசிக்க வேண்டும். கமின்ஸிடம் ஆட்டமிழந்தது பெரிய போராட்டமெல்லாம் இல்லை. கமின்ஸிடம் பேசினேன், அவர் சொன்னார், பொதுவாக நான் அந்தப் பந்துகளை வலைப்பயிற்சியில் அடித்து நொறுக்குவேன் என்றார். ஆனால் இம்முறை நல்ல பந்து விழுந்தது.
இவ்வாறு கூறினார் ஸ்டீவ் ஸ்மித்.