Last Updated : 27 Sep, 2020 12:39 PM

 

Published : 27 Sep 2020 12:39 PM
Last Updated : 27 Sep 2020 12:39 PM

டி20 போட்டியில் '36 டாட் பால்' விடலாமா? பேட்டிங் மோசமானதற்கு நானே பொறுப்பு: டேவிட் வார்னர் ஒப்புதல்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முழு ஓவர்களையும் பேட் செய்யாமல் விரைவாக ஆட்டமிழந்ததற்கு நானே பொறுப்பேற்கிறேன். யாரையும் குறைகூறவில்லை என்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

அபுதாபியில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 143 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கேகேஆர் அணி 18 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 145 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதில் சன்ரைசர்ஸ் கேப்டன் டேவிட் வார்னர் சிறப்பாக பேட் செய்து வந்த நிலையில் 36 ரன்களில் வருண் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். நடுவரிசையில் விருதிமான் சாஹா, தொடக்க ஆட்டக்காரர் பேர்ஸ்டோ சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதிலும் மணிஷ் பாண்டே, விருதிமான் சாஹா ஏராளமான பந்துகளை ரன் அடிக்காமல் கோட்டைவிட்டனர்.

இதுகுறித்து சன்ரைசர்ஸ் கேப்டன் டேவிட் வார்னர் போட்டி முடிந்தபின் கூறியதாவது:

''கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்கள் மீது இன்னும் நாங்கள் சிறிது அழுத்தத்தைக் கொடுத்திருக்கவேண்டும். நடுவரிசையில் இறங்கியவர்கள் இன்னும் கூடுதலாக பவுண்டரிகளை அடித்திருக்க வேண்டும்.

ஏராளமான டாட் பந்துகளை நடுவரிசையில் உள்ள வீரர்கள் அடிக்காமல் விட்டது வேதனையாக இருக்கிறது. ஏறக்குறைய 36 டாட் பந்துகளை விட்டுள்ளோம். டி20 போட்டியில் இவ்வளவு அதிகமாக டாட் பந்துகளை விடக்கூடாது. எங்களின் மனநிலையை மாற்றுவது அவசியம் என நினைக்கிறேன்.

இன்னும் நாங்கள் கூடுதலாக 20 முதல் 30 ரன்கள் சேர்த்திருந்தால், கேகேஆர் அணிக்கு நெருக்கடி கொடுக்கும் ஸ்கோராக அமைந்திருக்கும். சரியான ஸ்கோரை நாம் எடுக்காவிட்டால், எதிரணியின் வெற்றியைத் தடுப்பது கடினமாகிவிடும்.

சில துணிச்சலான முடிவுகளை எடுப்பதற்காக சில ஷாட்களை அடிக்க வேண்டும். 20 ஓவர்களிலும் இரு பேட்ஸ்மேன்கள் மட்டுமே பேட்டிங் செய்ய முடியாது. அனைவரையும் பெஞ்சில் அமரவைக்கவும் முடியாது.

நான் ஆட்டமிழந்தபின், ஒரு அதிரடியான வீரரை இறக்கி இருக்கலாமே எனச் சொல்லலாம். ஆனால், பார்ட்னர்ஷிப் என்பது மிகவும் முக்கியம். கேகேஆர் அணியின் பந்துவீச்சு அருமையாக இருந்தது. இருப்பினும் எங்களால் போதுமான பவுண்டரிகள் அடிக்க முடியவில்லை.

வெளிப்படையாகக் கூறுகிறேன், என்னுடைய பேட்டிங் மோசமாக இருந்தது, எளிதாக விக்கெட்டை இழந்துவிட்டேன். இதற்கு யாரையும் குறைகூறவில்லை. கேப்டனாக, பொறுப்பாக பேட் செய்யாமல் இருந்ததற்கு நானே பொறுப்பேற்கிறேன்.

மீண்டும் இங்கு ஒரு போட்டியில் டெல்லி அணியுடன் விளையாடப் போகிறோம். இந்த மைதானத்தை நன்கு கணிப்பது அவசியம். இந்திய மைதானத்தைப் போல் அல்லாமல் பவுண்டரி அளவு பெரிதாக இருக்கிறது.

ஒவ்வொருவருக்கும் இது கற்றுக்கொள்ளும் நேரம். பெரிய மைதானம் என்பதால், பவுண்டரி அடிக்க முயற்சி செய்து, அதற்குப் பயிற்சி பெற வேண்டும். அடுத்த போட்டியில் மைதானத்தைக் கணித்து ஆடுவோம்''.

இவ்வாறு வார்னர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x